"நாளந்தா இந்தியாவின் கல்வி, பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சார பரிமாற்றத்தின் அடையாளமாகும்"
"நாளந்தா என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. இது ஒரு அடையாளம், கௌரவம், மதிப்பு, தாரக மந்திரம், பெருமை மற்றும் வரலாறு"
" மறுமலர்ச்சி அடைந்துள்ள இந்தியா ஒரு பொற்காலத்தைத் தொடங்கப் போகிறது"
"நாளந்தா என்பது இந்தியாவின் கடந்த கால மறுமலர்ச்சி மட்டுமல்ல. உலகம் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியம் அதனுடன் இணைந்துள்ளது"
"இந்தியா பல நூற்றாண்டுகளாக ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து தனித்தன்மையை நிரூபித்துள்ளது. நாம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ஒருங்கிணைந்து முன்னேற்றத்தை அடைவோம்"
"உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தியா மீண்டும் உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்"
"இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் விரிவான மற்றும் முழுமையான திறன் அமைப்பை ஏற்படுத்துவதே அரசின் முயற்சியாகும். இந்த நடவடிக்கை உலகிலேயே மிகவும் மேம்பட்ட ஆராய்ச்சி சார்
பிரதமர் இந்நிகழ்ச்சியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்

பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.06.2024) தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் இந்நிகழ்ச்சியில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் தாம் நாளந்தாவுக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு தற்போது சாதகமான அம்சங்கள் நிலவுவதாக அவர் கூறினார். நாளந்தா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. இது ஒரு அடையாளம், மரியாதை, அறிவின் வேர், தாரக மந்திரம் என்று அவர் தெரிவித்தார். புத்தகங்கள் நெருப்பில் கருகினாலும் அறிவை அழிக்க முடியாது என்ற உண்மையை பறைசாற்றுவதே நாளந்தா பல்கலைக்கழகம் என்று பிரதமர் தெரிவித்தார். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி என்று அவர் எடுத்துரைத்தார்.

 

நாளந்தாவுக்குப் புத்துயிரூட்டுவது, இந்தியாவின் திறன்களை உலகிற்கு எடுத்துக் காட்டும் என்று அவர் குறிப்பிட்டார். வலுவான மனித மாண்புகளைக் கொண்ட நாடுகள், வரலாற்றுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சிறந்த உலகை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

நாளந்தா பல்ககலைக்கழகம், பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்பதாக அவர் குறிப்பிட்டார். இப்பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சி இந்திய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்லாமல் அறிவு உலகின் மறுமலர்ச்சி என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். நாளந்தா பல்கலைக்கழக வளாக திட்டத்தில் நட்பு நாடுகளின் பங்களிப்பை பாராட்டிய அவர், இன்றைய தொடக்க விழாவில் பல நாடுகள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். நாளந்தா பல்கலைக்கழக மேம்பாட்டில் பீகார் மக்களின் உறுதிப்பாட்டை பிரதமர் பாராட்டினார்.

ஒரு காலத்தில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், நாளந்தா என்றால் அறிவு மற்றும் கல்வியின் தொடர்ச்சி என்று பொருள்படும் எனக் கூறினார்.  கல்வி குறித்த இந்தியாவின் அணுகுமுறையும், சிந்தனையும் இதுவே என்றும் அவர் தெரிவித்தார். கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. என்பதுடன் உயரிய மதிப்புகளையும், சிந்தனைகளையும் அது கற்பிக்கிறது என்று பிரதமர் கூறினார். பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தேசங்களைப் பொருட்படுத்தாமல் அனுமதிக்கப்பட்டனர் என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். புதிதாக திறக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் அதே பண்டைய பாரம்பரியத்தை நவீன வடிவில் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 'உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.

 

கல்வியை மனித நலனுக்கான கருவியாகக் கருதும் இந்திய பாரம்பரியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். அடுத்து சில நாட்களில் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் பற்றி குறிப்பிட்ட அவர், யோகா தினம் சர்வதேச பண்டிகையாக மாறியுள்ளது என்றார். யோகாவின் பல அம்சங்கள் வளர்ச்சி அடைந்த போதிலும், இந்தியாவில் யாரும் யோகா மீது ஏகபோக உரிமை எதையும் வெளிப்படுத்தவில்லை என்று அவர் கூறினார். அதேபோல், ஆயுர்வேதத்தை இந்தியா உலகம் முழுவதுடனும் பகிர்ந்து கொண்டது என்று அவர் கூறினார். நிலைத்தன்மைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவில், வளர்ச்சியையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் மற்றும் சர்வதேச சூரிய கூட்டணி போன்ற இந்தியாவின் முன்முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார். நாளந்தா வளாகம், முன்னோடியான முன்முயற்சிகளான பசுமை எரிசக்தி, பூஜ்ஜிய உமிழ்வு, நீர் சேமிப்பு உள்ளிட்ட நிலையான சூழல் பாதுகாப்பு அம்சங்களை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் கூறினார்.

கல்வியின் வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் வேர்களை ஆழப்படுத்த வழிவகுக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இது வளர்ந்த நாடுகளின் அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் இந்தியா, தனது கல்வி முறையை மாற்றி வருகிறது என்று அவர் கூறினார். "உலகின் கல்வி மற்றும் அறிவின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே தமது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார். உலகின் மிக முக்கியமான அறிவு மையமாக இந்தியா மீண்டும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாக அவர் கூறினார். ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு சேவை வழங்கும் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள், சந்திரயான் மற்றும் ககன்யான் உருவாக்கிய அறிவியல் மீதான ஆர்வம், ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற முன்முயற்சிகள் இந்தியாவில் 1.30 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் உருவாக வழிவகுத்துள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார். சாதனை எண்ணிக்கையிலான காப்புரிமைகள் பெறப்பட்டு ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 1 லட்சம் கோடி ரூபாய் ஆராய்ச்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

 

உலகிலேயே மிகவும் மேம்பட்ட ஆராய்ச்சி சார்ந்த உயர்கல்வி முறையுடன், முழுமையான திறன் மேம்பாட்டு முறையை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். உலக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் மேம்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் எட்டப்பட்டுள்ள சாதனைகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், க்யூஎஸ் தரவரிசையில் 9  நிறுவனங்களே இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது 46 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதைக் குறிப்பிட்டார். உயர் கல்வி தரவரிசையிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழிற்பயிற்சி நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மூன்று நாளிலும் ஒரு அடல் டிங்கரிங் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதே போல் ஒவ்வொரு நாளும் இரண்டு புதிய கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் 23 ஐஐடிக்கள் உள்ளன என்றும், ஐஐஎம்களின் எண்ணிக்கை 13 லிருந்து 21 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். எய்ம்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்து 22 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 10 ஆண்டுகளில், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், புதிய கல்விக் கொள்கை,  இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது என்றார். இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், போன்ற சர்வதேச பல்கலைக்கழகங்களின் புதிய வளாகங்கள் இந்தியாவில் திறக்கப்படுவது போன்றவற்றையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த அனைத்து முயற்சிகளாலும், இந்திய மாணவர்கள் உள்நாட்டிலேயே சிறந்த உயர் கல்வியைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் நமது நடுத்தர வர்க்கத்தினரின் பணம் சேமிக்கப்படுகிறது என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்கள் உலக அளவில் பல நாடுகளில் தங்களது வளாகங்களை சமீபத்தில் நிறுவியதைக் குறிப்பிட்ட பிரதமர், நாளந்தா பல்கலைக்கழமும் இதே பணியைச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

இந்திய இளைஞர்கள் மீது உலகத்தின் பார்வை பதிந்துள்ளது என்று கூறிய பிரதமர், இந்தியா புத்த பகவானின் நாடு என்றும், ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்றும் தெரிவித்தார். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் தத்துவம் பல விஷயங்களில் எதிரொலிப்பதாக அவர் கூறினார். ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு என்ற இந்தியாவின் தத்துவம், உலக எதிர்காலத்திற்கான வழியாகக் கருதப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற இந்தியாவின் கொள்கை உலகுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார். உலகளாவிய சகோதரத்துவ உணர்வுக்கு நாளந்தா பல்கலைக்கழம் ஒரு புதிய பரிமாணத்தை வழங்க முடியும் எனவும், இதன் மாணவர்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

நாளந்தா மாணவர்கள், இந்தியாவின் எதிர்காலம் என்று கூறிய பிரதமர், அமிர்த காலத்தின் அடுத்த 25 ஆண்டுகளில் இவர்கள்  முக்கிய பங்காற்றுவார்கள் என்றார். நாளந்தாவின் மதிப்புகளை தங்களுடன் முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு அதன் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்காக செயல்படுமாறு மாணவர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 

நாளந்தாவின் அறிவு, மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக அமையும் என்றும், வரும் காலங்களில் இதன் இளைஞர்கள் உலகம் முழுமைக்கும் வழிகாட்டுவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாளந்தா உலக நலனுக்கான முக்கிய மையமாக மாறும் என்று தாம் நம்புவதாகக் கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

பீகார் ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, பீகார் துணை முதலமைச்சர்கள் திரு விஜய் குமார் சின்ஹா, திரு சாம்ராட் சௌத்ரி, நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அரவிந்த் பனகாரியா மற்றும் நாளந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் திரு அபய் குமார் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி

நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வி வளாகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1900 இருக்கைகள் உள்ளன. தலா 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்கங்கள், சுமார் 550 மாணவர்கள் தங்கக்கூடிய ஒரு மாணவர் விடுதி மற்றும் ஒரு சர்வதேச மையம், 2000 நபர்கள் வரை பங்கேற்கக் கூடிய ஒரு அரங்கம், ஒரு ஆசிரிய மன்றம் மற்றும் ஒரு விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த வளாகம் ஒரு உமிழ்வற்ற பசுமை வளாகமாகும். சூரிய மின்சக்தி அமைப்பு, கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு, 100 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை அமைப்புகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்மைகளுடன் இந்த வளாகம் தனிச்சிறப்புடன் உள்ளது.

 

இப்பல்கலைக்கழகம் ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், மாணவர்கள் தங்கிப் படிக்கும் உலகின் முதல் பல்கலைக்கழகமாக இருந்தது எனக் கருதப்படுகிறது. நாளந்தாவின் பழங்கால சிதைவு எச்சங்கள், 2016-ம் ஆண்டில் ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

 

Click here to read full text speech

 

 

 

 

 

 

 

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI 2.0: India bets big on making more of the smartphone at home

Media Coverage

PLI 2.0: India bets big on making more of the smartphone at home
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets people of Goa on Goa Statehood Day
May 30, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today extended his greetings to the people of Goa on the occasion of Goa Statehood Day.

The Prime Minister said that Goa is widely known for its vibrant culture, rich heritage, natural beauty and warm-hearted people.

The Prime Minister noted that the occasion is an opportunity to remember with gratitude all those who worked tirelessly for the progress and identity of Goa.

The Prime Minister expressed hope that Goa will continue to prosper and play an important role in building a Viksit Bharat.

Shri Modi also prayed for the good health and prosperity of every Goan.

The Prime Minister wrote on X;

“Greetings to the people of Goa on the special occasion of Goa Statehood Day. Goa’s vibrant culture, rich heritage, natural beauty and warm-hearted people are widely known. This day is also an opportunity to remember with gratitude all those who worked tirelessly for its progress and identity. May Goa continue to prosper and play an important role in building a Viksit Bharat. Praying for the good health and prosperity of every Goan.”