ஜம்மு-காஷ்மீர், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் ரயில் கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்படுவது சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், சமூக-பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்: பிரதமர்
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டுவதில் ரயில்வே துறையின் வளர்ச்சி முக்கியமானது: பிரதமர்
இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சி நான்கு அளவுருக்களில் கணக்கிடுப்படுகிறது. முதலாவது- ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தல், 2-வது பயணிகளுக்கான நவீன வசதிகள், 3-வது நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில்சேவை கிடைத்தல், 4-வது- வேலைவாய்ப்பு உருவாக்கமும் தொழிற்துறைக்கு உதவுதல்: பிரதமர்
நாடு முழுவதும் ரயில்பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் ஏறக்குறைய 100 சதவீதத்தை எட்டுகிறது : பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்து பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். புதியதாக ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய ரயில் முனையத்தையும் தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவரது போதனைகளும் வாழ்க்கை முறைகளும்  வளமான தேசத்திற்கான தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. தில்லியில் அண்மையில் தொடங்கப்பட்ட நமோ பாரத் ரயில் சேவையையும், தில்லி மெட்ரோ ரயில் திட்டங்களையும் குறிப்பிட்ட அவர், ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, தெலங்கானா மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ள  திட்டங்கள் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு பிராந்தியங்களுக்கான நவீன போக்குவரத்து இணைப்பில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். அனைவரும் ஒன்றிணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் வளர்ச்சியடைந்த  இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வையை நனவாக்க இவை உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். இத்தகைய முன்னேற்றங்களுக்காக மாநிலங்களின் மக்களுக்கும், இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

 

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த இலக்கை எட்ட ரயில்வே துறையின் வளர்ச்சி இன்றியமையாதது.  கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அடைந்துள்ளது.  இதன் காரணமாக நாட்டின் மீதான மதிப்பும் உயர்ந்து வருவதுடன் மக்களின் மன உறுதியும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.  இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியை நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டு அளவிட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

முதலாவது- ரயில்வே உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்தல், 2-வது பயணிகளுக்கான நவீன வசதிகள், 3-வது நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரயில்சேவையை உறுதி செய்தல், 4-வது- வேலைவாய்ப்பு உருவாக்கமும் தொழிற்துறைக்கு உதவுதல் என்று பிரதமர் கூறினார்.  இன்றைய நிகழ்ச்சி இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும்.  புதிய பிரிவுகள் ரயில்வே முனையங்கள் போன்ற  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் ரயில்வே துறையை 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப நவீனமயமாக்குவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்று அவர் கூறினார்.  இது பொருளாதார முன்னேற்றத்திற்கான சூழல் அமைப்பை மேம்படுத்துவதுடன் அதிக முதலீட்டு வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அவர் கூறினார்.  

வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள், நமோ பாரத் ரயில் ஆகியவை இந்திய ரயில்வே துறையின் நவீன கட்டமைப்புகளுக்கான புதிய அளவுகோலாக அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். விருப்பங்கள் நிறைந்த இன்றைய இந்தியா, குறைந்த நேரத்தில் அதிகம் சாதிக்க விரும்புகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். தற்போது, வந்தேபாரத் ரயில் 50க்-கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. 136 சேவைகள் மூலம் ரயில் பயணிகளுக்கு இனிமையான பயண அனுபவத்தை இது வழங்குகிறது. சில நாட்களுக்கு முன்பு வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோ மீட்டர்  வேகத்தில் ஓடும் புதிய படுக்கை வசதியுடன் கூடிய காணொலி காட்சியை பார்த்ததாக பிரதமர் தெரிவித்தார். இதுபோன்ற சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ள செய்வதாக  உள்ளது என்று  அவர் கூறினார். இந்த சாதனைகள் அனைத்தும் ஒரு தொடக்கமாக உள்ளது என்று கூறிய பிரதமர், முதலாவது புல்லட் ரயில் இயக்கப்படுவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்தார்.

 

பயண அனுபவத்தை மேம்படுத்துவதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதற்கென நாடு முழுவதும் 1300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக கூறினார். 2014-ம் ஆண்டில் 35 சதவீதமாக இருந்த ரயில் பாதைகள் கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக  கூறினார். 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான  புதிய ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான சாலை மேம்பாலங்கள், தரைப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். அகல ரயில்பாதைகளில் உள்ள அனைத்து ஆளில்லா கடவுப்பாதைகள் அகற்றப்பட்டதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளதுடன் விபத்துகளும் குறைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு போக்குவரத்திற்கான வழித்தடம் போன்ற நவீன ரயில் கட்டமைப்பு பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட்டு வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த சிறப்பு வழித்தடங்கள் வழக்கமான தடங்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்திடும் என்றும், அதிவேக ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவிடும் என்றும் அவர் கூறினார்.  இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் ரயில்வே துறை மேம்பாடு அடைந்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறினார். மெட்ரோவுக்கும் இதர ரயில் போக்குவரத்துக்கும் தேவையான நவீன  ரயில்பெட்டிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  ரயில் நிலையங்களில் சூரிய மின் உற்பத்திக்கான தகடுகள் நிறுவப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ரயில் நிலையங்களில் 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' என்ற அடிப்படையில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். இந்த முயற்சிகள் அனைத்தும் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. கடந்த பத்தாண்டுகளில், லட்சக்கணக்கான இளைஞர்கள் ரயில்வே துறையில் நிரந்தரப் பணிகளைப் பெற்றுள்ளனர். புதிய ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களுக்கான தேவை பிற துறைகளிலும் அதிக வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

நாட்டின் முதலாவது விரைவுசக்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். ரயில்வே போக்குவரத்து கட்டமைப்பு விரிவடைவதால், ஜம்மு, காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், லே-லடாக் போன்ற பகுதிகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய பிரிவுகள், தலைமையகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில்பாதை மூலம் ரயில்வே உள்கட்டமைப்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலம் லே-லடாக் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரயில் போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. இந்த மேம்பாலம் பிற பகுதிகளுடன் இப்பகுதியை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

 

நாட்டின் முதலாவது கேபிள் அடிப்படையிலான ரயில்வே பாலமான அஞ்சி காட் பாலமும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்  என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.  செனாப் பாலமும், அஞ்சி காட் பாலமும் இந்த மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், வளத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும். பொறியியல் துறையின்  இணையற்ற எடுத்துக்காட்டுகளாக அவை அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.

ஒடிசா மாநிலம் ஏராளமான இயற்கை வளங்களையும், பெரிய கடற்கரையையும் கொண்டுள்ளது என்றும், சர்வதேச வர்த்தகத்திற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ரூ70,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல ரயில்வே திட்டங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழு விரைவு சக்தி சரக்குப் போக்குவரத்துக்கான  முனையங்களை நிறுவுவதுடன், அவை வர்த்தகம் தொழில்துறையை மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.

ஒடிசாவில் ராயகடா ரயில்வே பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். இது அம்மாநிலத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் மேம்படுத்தும். ஒடிசா மாநிலத்தில் தென்பகுதியில் குறிப்பாக பழங்குடியின குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகள் மேம்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய ரயில் முனையத்தை தொடங்கி வைத்த பிரதமர், வெளிவட்டச் சாலையை இணைப்பதன் மூலம் மண்டல வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான அதன் திறனை எடுத்துரைத்தார். வெளிவட்ட சாலையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், இப்பகுதியில் வளர்ச்சியை கணிசமாக அதிகரிக்கும், என்று அவர் கூறினார். நிலையத்தின் நடைமேடைகள், மின்தூக்கிகள், நகரும் மின் படிக்கட்டுகள், சூரிய சக்தி பயன்பாடு உள்ளிட்ட நவீன கட்டமைப்பு வசதிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார். இது நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒரு முன்னோக்கிய படியாகும் என்றார். இந்த புதிய முனையம் செகந்திராபாத், ஹைதராபாத், கச்சிகுடாவில் தற்போதுள்ள ரயில் நிலையங்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும், மக்களுக்கு பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றும் என்றும் அவர் மேலும் எடுத்துரைத்தார்.

 

இத்தகைய திட்டங்கள் வாழ்க்கையை எளிதாக்குவது மட்டுமின்றி, இந்தியாவின் விரிவான உள்கட்டமைப்பு இலக்குகளுடன் இணைந்து, எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிப்பதாகவும் பிரதமர்  வலியுறுத்தினார். விரைவுச் சாலைகள், நீர்வழி போக்குவரத்துகள், மெட்ரோ கட்டமைப்புகள் உள்ளிட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு விரிவாக்க நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டில் 74-ஆக இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 150-க்கும் மேலாக உயர்ந்துள்ளது என்றும், நாடு முழுவதும் 5 நகரங்களில் இருந்து 21 நகரங்களுக்கு மெட்ரோ சேவைகள் விரிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இது தற்போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை தெரிவித்த பிரதமர், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மத்திய ரயில்வே, தகவல், ஒளிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர், பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அமைச்சர் திரு வி.சோமன்னா, இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு, மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், ஒடிசா ஆளுநர் திரு திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, தெலங்கானா ஆளுநர் திரு ஹரிபாபு கம்பம்பதி ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, தெலங்கானா முதலமைச்சர் திரு ஏ ரேவந்த் ரெட்டி ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்தப் பிராந்தியத்தில் போக்குவரத்துத் தொடர்பை மேலும் அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டப் பிரிவை பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.

பதான்கோட் - ஜம்மு - உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா, போக்பூர் சிர்வால் - பதான்கோட், படாலா - பதான்கோட் மற்றும் பதான்கோட் முதல் ஜோகிந்தர் நகர் வரை 742.1 கிலோமீட்டர் நீளமுள்ள ஜம்மு ரயில்வே கோட்டத்தை உருவாக்குவது, ஜம்மு காஷ்மீர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கணிசமாக பயனளிக்கும். மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுடன், இந்தியாவின் பிற பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பையும் மேம்படுத்தும். இது வேலைவாய்ப்புகளை உருவாக்குதுடன், உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாவை மேம்படுத்துதல், இப்பகுதியின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

தெலுங்கானாவின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள சார்லபள்ளி புதிய முனைய நிலையம் சுமார் 413 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது நுழைவு வசதியுடன் புதிய பயிற்சி முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான நல்ல வசதிகளைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முனையம், நகரில் தற்போதுள்ள செகந்திராபாத், ஹைதராபாத், கச்சிகுடா போன்ற பயிற்சி முனையங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்.

கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே கோட்ட கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தி, இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

 

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Freed Banks From NPA Illness': PM Modi Discusses Reforms, Economy, Trade Deals, World Order

Media Coverage

Freed Banks From NPA Illness': PM Modi Discusses Reforms, Economy, Trade Deals, World Order
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi shares a Sanskrit Subhashitam Invoking Blessings for Health, Longevity and Service to the Nation
February 06, 2026

Prime Minister Shri Narendra Modi today drew upon India’s timeless civilizational wisdom, invoking a prayer that reflects the nation’s collective aspiration for health, longevity, and devotion to service.

The Prime Minister emphasized that this invocation embodies the spirit of India’s cultural heritage—where reverence for the Earth, commitment to well‑being, and dedication to service form the foundation of national progress.

Quoting an ancient Sanskrit verse, the Prime Minister said:

“उपस्थास्ते अनमीवा अयक्ष्मा अस्मभ्यं सन्तु पृथिवि प्रसूताः।

दीर्घं न आयुः प्रतिबुध्यमाना वयं तुभ्यं बलिहृतः स्याम॥“