இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தும் அவர்களை தற்சார்புடையவர்களாக மாற்றும் திறன்களை வளர்த்தும் இந்தியாவை உலக கண்டுபிடிப்பு மையமாக நிலைநிறுத்துவதே எங்களது முயற்சியாகும்: பிரதமர்
21 -ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் கல்வி முறையை நவீனப்படுத்தி வருகிறோம்: பிரதமர்
புதிய தேசிய கல்விக் கொள்கை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியின் உலகளாவிய தரத்தை மனதில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது: பிரதமர்
ஒரே நாடு, ஒரே சந்தா திட்டமானது இளைஞர்களுக்கு அவர்களின் தேவைகளை அரசு புரிந்து கொள்கிறது என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. இன்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களை எளிதாகப் பெற முடிகிறது: பிரதமர்
இந்தியாவின் பல்கலைக்கழக வளாகங்கள் யுவசக்தியின் புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்லும் துடிப்பான மையங்களாக உருவாகி வருகின்றன: பிரதமர்
திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்: பிரதமர்
யோசனையிலிருந்து முன்மாதிரி வரையிலான பயணத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டியது முக்கியமாகும்: பிரதமர்
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவோம் என்ற தொலைநோக்குப் பார்வையை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். செயற்கை நுண்ணறிவை இந்தியாவுக்கு வேலை செய்ய வைப்பதே எங்கள் நோக்கம்: பிரதமர்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஒய்யுஜிஎம் புத்தாக்க  மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களிடையே உரையாற்றிய பிரதமர் "ஒய்.யு.ஜி.எம்" என்பது பங்குதாரர்களின் சங்கமம் என்றார்.

வளர்ந்த இந்தியாவிற்கான எதிர்கால தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என வர்ணித்தார். இந்தியாவின் புத்தாக்கக் கண்டுபிடிப்புத்  திறனை மேம்படுத்தும் முயற்சிகள் மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்பத்தில் அதன் பங்களிப்பு ஆகியவை இந்த நிகழ்வின் மூலம் வேகம் பெறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் உயிரி அறிவியல், உயிரி தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் ஐ.ஐ.டி பம்பாய் ஆகியவற்றில் சூப்பர் மையங்கள் தொடங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து ஆராய்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் வாத்வானி  புத்தாக்க நெட்வொர்க் தொடங்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். வாத்வானி அறக்கட்டளை, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்த முயற்சிகளில் ஈடுபட்ட அனைவரையும் பிரதமர் பாராட்டினார். தனியார் மற்றும் பொதுத் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் மூலம் நாட்டின் கல்வி முறையில் நேர்மறையான மாற்றங்களை ஊக்குவிப்பதில் திரு ரொமேஷ் வாத்வானியின் அர்ப்பணிப்பு மற்றும் செயலூக்கமான பங்களிப்புக்காக அவருக்கு சிறப்பு பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

உண்மையான வாழ்க்கை என்பது சேவையிலும், தன்னலம் இல்லாமல் இருப்பதிலும் உள்ளது என்று சமஸ்கிருதத்தில் கூறப்பட்டுள்ள புனித நூல்களை மேற்கோள் காட்டிய திரு மோடி, அறிவியலும் தொழில்நுட்பமும் சேவைக்கான ஊடகமாகச் செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். வாத்வானி அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள், திரு ரொமேஷ் வாத்வானி மற்றும் அவரது குழுவினரின் முயற்சிகள், இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைச் சரியான திசையில் கொண்டு செல்வது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். பிரிவினைக்குப் பிந்தைய விளைவுகள், அவரது பிறந்த இடத்திலிருந்து இடப்பெயர்வு, குழந்தைப் பருவத்தில் போலியோவுடன் போராடியது மற்றும் ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க இந்த சவால்களைத் தாண்டி எழுந்தது உள்ளிட்ட போராட்டங்களால் நிறைந்த திரு வாத்வானியின் வாழ்க்கைப் பயணத்தை அவர் எடுத்துரைத்தார். தனது வெற்றியை இந்தியாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்கு அர்ப்பணித்ததற்காக திரு வாத்வானியைப் பாராட்டிய திரு மோடி, இது ஒரு முன்மாதிரியான செயல் என்று கூறினார். பள்ளிக் கல்வி, அங்கன்வாடி தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப முன்முயற்சிகளில் இந்த அறக்கட்டளையின் பங்களிப்பை அவர் புகழ்ந்துரைத்தார். செயற்கை நுண்ணறிவுக்காக வாத்வானி நிறுவனம் நிறுவப்பட்டது போன்ற நிகழ்வுகளில் தனது முந்தைய பங்கேற்பைக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இந்த அறக்கட்டளை தொடர்ந்து பல மைல்கற்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார், மேலும் வாத்வானி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு தமது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டின் எதிர்காலமும் அதன் இளைஞர்களைச் சார்ந்துள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.  இந்தத் தயாரிப்பில் கல்வி முறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், 21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவின் கல்வி முறையை நவீனமயமாக்குவதற்கான முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார். உலகளாவிய கல்வித் தரத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதை எடுத்துரைத்த அவர், இந்திய கல்வி முறையில் அது கொண்டு வந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் குறிப்பிட்டார். தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, கற்றல், கற்பித்தல் பொருட்கள் மற்றும் ஒன்று முதல் ஏழு வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் இ-வித்யா மற்றும் தீக்ஷா தளங்களின் கீழ் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மற்றும் அளவிடக்கூடிய டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பு தளமான 'ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பு' உருவாக்கப்பட்டதை அவர் எடுத்துரைத்தார், இது 30- க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் மற்றும் ஏழு வெளிநாட்டு மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்க உதவும். தேசிய பாடத்திட்ட சட்டக கட்டமைப்பு மாணவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பாடங்களை படிப்பதை எளிதாக்கியுள்ளது, நவீன கல்வியை வழங்குகிறது மற்றும் புதிய வாழ்க்கைப் பாதைகளை திறக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். தேசிய இலக்குகளை அடைய இந்தியாவின் ஆராய்ச்சி சூழல் அமைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மொத்த செலவினத்தை 2013-14 ஆம் ஆண்டின் ரூ .60,000 கோடியிலிருந்து ரூ .1.25 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கியது, அதிநவீன ஆராய்ச்சி பூங்காக்களை நிறுவியது மற்றும் கிட்டத்தட்ட 6,000 உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளை உருவாக்கியது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் புத்தாக்கக் கலாச்சாரத்தின் விரைவான வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட அவர், 2014 ஆம் ஆண்டில் சுமார் 40,000 ஆக இருந்த காப்புரிமை கோரிக்கை  இப்போது 80,000 ஆக அதிகரித்துள்ளது. இது இளைஞர்களுக்கு அறிவுசார் சொத்துரிமை தொடர்பான சூழல் சார் அமைப்பு வழங்கும் ஆதரவை பிரதிபலிக்கிறது. ஆராய்ச்சி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.50,000 கோடியில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டதையும், உயர்கல்வி மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களை அணுக உதவிய "ஒரே நாடு, ஒரே சந்தா" முன்முயற்சி பற்றியும் பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். திறமையான நபர்கள் தங்கள் தொழில்சார் வாழ்க்கையை முன்னேற்றுவதில் எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதை  பிரதமரின் ஆராய்ச்சி உதவித்தொகை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.

 

இன்றைய இளைஞர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மட்டுமல்லாமல்,  தங்களைத் தாங்களே தகவமைத்துக் கொள்ளும் வகையில் தயாராக உள்ளனர் என்று குறிப்பிட்ட திரு மோடி, பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் இந்தியாவின் இளம் தலைமுறையினரின் மாற்றத்தக்க பங்களிப்பை வலியுறுத்தினார். இந்திய ரயில்வேயுடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி.யில்  உருவாக்கப்பட்ட 422 மீட்டர் ஹைப்பர்லூப்,  பாதையை அதாவது உலகின் மிக நீளமான ஹைப்பர்லூப் சோதனையை இயக்குவது போன்ற மைல்கற்களை அவர் மேற்கோள் காட்டினார். நானோ அளவில் ஒளியைக் கட்டுப்படுத்த பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்பம் மற்றும் ஒரு மூலக்கூறுவில்  16,000+ தரவை சேமித்து செயலாக்கும் திறன் கொண்ட  தொழில்நுட்பம் போன்ற அற்புதமான சாதனைகள் குறித்து அவர் குறிப்பிட்டார். சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் முதல் உள்நாட்டு எம்ஆர்ஐ இயந்திரம் உருவாக்கப்பட்டதை அவர் மேலும் எடுத்துரைத்தார். "இந்தியாவின் பல்கலைக்கழக வளாகங்கள் யுவசக்தி திருப்புமுனை கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஆற்றல் வாய்ந்த மையங்களாக உருவாகி வருகின்றன" என்று கூறிய திரு மோடி, உலகளவில் தரவரிசையின்படி பட்டியலிடப்பட்டு உள்ள 2,000 கல்வி நிறுவனங்களில் 90 க்கும் மேற்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன என்று பிரதமர்  எடுத்துக்காட்டினார். கியூ.எஸ். தரவரிசையில் 2014-ல் ஒன்பது நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்தியா, 2025-ல் 46 இடங்களுடன் முன்னேறியிருப்பதையும், கடந்த பத்தாண்டுகளில் உலகின் தலைசிறந்த 500 உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார். அபுதாபியில் ஐ.ஐ.டி தில்லி, தான்சானியாவில் ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் துபாயில் வரவிருக்கும் ஐ.ஐ.எம் அகமதாபாத் போன்ற இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் வளாகங்களை நிறுவுவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். முன்னணி உலகளாவிய பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் வளாகங்களைத் திறந்து, கல்வி பரிமாற்றம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் இந்திய மாணவர்களுக்கு பன்முக கலாச்சார கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்" என்று குறிப்பிட்ட  பிரதமர், ஏற்கனவே 10,000 அடல் ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.  இந்த ஆண்டு பட்ஜெட்டில் மேலும் 50,000 ஆய்வகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன போன்ற முன்முயற்சிகளைப் பட்டியலிட்டார். மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான பிரதமர் வித்யா லட்சுமி திட்டம் தொடங்கப்பட்டதையும், மாணவர்களின் கற்றலை நிஜ உலக அனுபவமாக மாற்றுவதற்காக 7,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி பிரிவுகளை  நிறுவியதையும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்களிடையே புதிய திறன்களை வளர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இளைஞர்களின் ஒருங்கிணைந்த திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்ப வலிமை ஆகியவை இந்தியாவை வெற்றியின் உச்சிக்கு இட்டுச் செல்லும் என்று கூறினார்.

 

அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், "யோசனையிலிருந்து முன்மாதிரி மற்றும் தயாரிப்பு வரையிலான பயணத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது" என்று கூறினார். ஆய்வகத்திலிருந்து சந்தைக்கான தூரத்தை குறைப்பது ஆராய்ச்சி முடிவுகளை விரைவாக மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும் ஆராய்ச்சியாளர்களையும் இது ஊக்குவிக்கிறது மற்றும் அவர்களின் பணிக்கு உறுதியான ஊக்கத்தொகைகளை வழங்குகிறது என்று அவர் கூறினார். இது ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றின் சுழற்சியை துரிதப்படுத்துகிறது. வலுவான ஆராய்ச்சி சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிரதமர், கல்வி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறையினர் ஆகியோர் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இளைஞர்களுக்கு வழிகாட்டுதல், நிதி வழங்குதல் மற்றும் புதிய தீர்வுகளை கூட்டாக உருவாக்குதல் ஆகியவற்றில் தொழில்துறை தலைவர்களின் சாத்தியமான பங்கை அவர் எடுத்துரைத்தார். விதிமுறைகளை எளிமைப்படுத்துவதிலும், இந்த முயற்சிகளை மேலும் மேற்கொள்வதற்கான ஒப்புதல்களை விரைவுபடுத்துவதிலும் அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மேம்பட்ட பகுப்பாய்வு, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம் மற்றும் செயற்கை உயிரியல் ஆகியவற்றை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு மோடி, செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் அதை ஏற்று செயல்படுத்துவதில்இந்தியாவின் முன்னணி நிலையை எடுத்துரைத்தார். உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, உயர்தர தரவுத்தொகுப்புகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளை உருவாக்க இந்தியா-  செயற்கை நுண்ணறிவு  இயக்கம் தொடங்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார். முன்னணி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் ஆதரவுடன் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். "செயற்கை நுண்ணறிவை இந்தியாவில் உருவாக்குவோம்" என்ற தொலைநோக்குப் பார்வை மற்றும் "செயற்கை நுண்ணறிவை இந்தியாவுக்கு வேலை செய்ய வைப்பது" என்ற இலக்குக்கான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஐ.ஐ.டி மற்றும் எய்ம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஐ.ஐ.டி இருக்கை திறன்களை விரிவுபடுத்தவும், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்வியை இணைக்கும் மருத்துவ தொழில்நுட்ப படிப்புகளை அறிமுகப்படுத்தவும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முடிவை அவர் இங்கு குறிப்பிட்டார். எதிர்கால தொழில்நுட்பங்களில் "உலகின் மிகச் சிறந்த" நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், இந்த முன்முயற்சிகளை உரிய காலத்தில் முடிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார். தமது உரையை நிறைவு செய்த பிரதமர், கல்வி அமைச்சகம் மற்றும் வாத்வானி அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்பான ஒய்.யு.ஜி.எம் போன்ற முன்முயற்சிகள் இந்தியாவின் புதுமை படைப்பு நிலப்பரப்புக்கு புத்துயிர் அளிக்கும் என்று குறிப்பிட்டார். வாத்வானி அறக்கட்டளையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் இன்றைய நிகழ்வின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை எடுத்துரைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் ஜிதேந்திர சிங், திரு ஜெயந்த் சவுத்ரி, டாக்டர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

YUGM (சமஸ்கிருதத்தில் "சங்கமம்" என்று பொருள்) என்பது அரசு, கல்வி, தொழில்துறை மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு சூழல்சார் அமைப்பின் தலைவர்களை அழைக்கும் முதல் வகையான மாநாடு ஆகும். வாத்வானி அறக்கட்டளை மற்றும் அரசு நிறுவனங்களின் கூட்டு முதலீட்டுடன் சுமார் 1,400 கோடி ரூபாய் கூட்டுத் திட்டத்தால் இயக்கப்படும் இந்தியாவின் கண்டுபிடிப்பு பயணத்திற்கு இது பங்களிக்கும்.

 

தற்சார்பு மற்றும் புதுமை சிந்தனை கொண்ட இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடங்கப்படும். அவற்றில் ஐஐடி கான்பூர் (AI & நுண்ணறிவு அமைப்புகள்) மற்றும் ஐஐடி பம்பாய் (பயோசயின்சஸ், பயோடெக்னாலஜி, ஹெல்த் & மெடிசின்) ஆகியவற்றில் உள்ள சூப்பர் மையங்கள்  அடங்கும்; வாத்வானி இன்னோவேஷன் நெட்வொர்க்  ஆராய்ச்சி வணிகமயமாக்கலை இயக்க சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் மையங்கள்; மற்றும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையுடன்  கூட்டாக மொழிபெயர்ப்புத் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் புதுமையை ஊக்குவித்தல்.

இந்த மாநாட்டில் உயர்மட்ட வட்டமேசைகள் மற்றும் அரசு அதிகாரிகள், உயர்மட்ட தொழில்துறை மற்றும் கல்வித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட குழு விவாதங்களும் அடங்கும்; தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சியின் விரைவான மொழிபெயர்ப்பை செயல்படுத்துவது குறித்த செயல் சார்ந்த உரையாடல்; இந்தியா முழுவதிலுமிருந்து அதிநவீன கண்டுபிடிப்புகளைக் கொண்ட தொழில்நுட்ப புத்தொழில்கள், ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைகளைத் தூண்டுவதற்கு துறைகளில் பிரத்யேக கட்டமைப்பு  வாய்ப்புகள் ஆகியவை இடம்பெறும்.

 

இந்தியாவின் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் பெரிய அளவிலான தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது; எல்லைப்புற தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி-க்கு-வணிக மயமாக்கலைத் துரிதப்படுத்துதல்; கல்வி-தொழில்-அரசு கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல்; ஏ.என்.ஆர்.எஃப் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ கண்டுபிடிப்பு போன்ற தேசிய முயற்சிகளை முன்னெடுத்தல்; நிறுவனங்களிடையே புதுமை அணுகலை ஜனநாயகப்படுத்துதல்; வளர்ந்த இந்தியாவை நோக்கி ஒரு தேசிய கண்டுபிடிப்பு சீரமைப்பை வளர்க்கும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era

Media Coverage

India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister condoles loss of lives in building collapse at Satya Niketan in Delhi
September 06, 2026

Prime Minister Shri Narendra Modi today expressed deep distress over the collapse of a building at Satya Niketan in Delhi.

The Prime Minister extended his condolences to the families of those who lost their loved ones and prayed for the speedy recovery of the injured. He further noted that authorities are actively working at the site and providing assistance to all those affected by the incident.

In a post on X, the Prime Minister's Office shared:

"The collapse of a building at Satya Niketan, Delhi is distressing. Condolences to those who lost their loved ones. Praying for the speedy recovery of the injured. Authorities are working at the site and assisting those affected in the mishap: PM @narendramodi"