கூட்டுறவு சந்தைப்படுத்தல், கூட்டுறவு விரிவாக்கம் மற்றும் மேம்பட்ட ஆலோசனை சேவைகளுக்காக இணையவழி வர்த்தக இணையதளங்களின் ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்தினார்
‘’கூட்டுறவு உணர்வு அதில் அடங்கியுள்ள ஒவ்வொருவரின் முயற்சியையும் வெளிப்படுத்துகிறது’’
"மலிவு விலையில் உரம் கிடைப்பதை உறுதி செய்வது வாக்குறுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், விவசாயிகளின் வாழ்க்கையை மாற்ற சீரிய முயற்சிகள் தேவை என்பதையும் காட்டுகிறது"
‘’அரசும், கூட்டுறவும் இணைந்து வளர்ந்த இந்தியா என்ற கனவுக்கு இரட்டிப்பு பலத்தை அளிக்கும்’’
‘’வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தின் முன்மாதிரியாக கூட்டுறவுத் துறை மாற வேண்டியது அவசியம்"
"உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிறு விவசாயிகளுக்கு பெரும் சக்தியைக் கொடுக்கப் போகின்றன. இவை சிறு விவசாயிகளை சந்தையில் மிகப்பெரிய சக்தியாக மாற்றும்’’
"இன்று இயற்கை விவசாயம் அரசின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது"

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்று புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். 17-வது இந்திய கூட்டுறவு மாநாட்டின் கருப்பொருள் ‘அமிர்த காலம்: துடிப்பான இந்தியாவின் வளங்களை கூட்டுறவின் மூலம் பெறுதல்’ என்பதாகும். கூட்டுறவு சந்தைப்படுத்தல், கூட்டுறவு விரிவாக்கம், ஆலோசனை சேவைகளுக்காக இணையவழி வர்த்தக இணையதளங்களின் ஆன்லைன் சேவைகளையும் பிரதமர் திரு.மோடி தொடங்கி வைத்தார். 

இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, ‘வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியா’ என்ற இலக்கை நோக்கி நாடு செயல்பட்டு வருவதாகக் கூறினார். இந்த இலக்குகளை அடைவதில் அனைவரின் முயற்சியும் தேவை என வலியுறுத்திய பிரதமர், கூட்டுறவு உணர்வில்  ஒவ்வொருவரின் முயற்சியும்  அடங்கியுள்ளதைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவை உலகின் முன்னணி பால் உற்பத்தியாள நாடாக மாற்றுவதில் பால் கூட்டுறவு சங்கத்தின் பங்களிப்பையும், உலகின் சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவை முதன்மையான நாடாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்களின் பங்கையும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிறு விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மிகப்பெரிய ஆதரவாக மாறியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். பால் உற்பத்தி துறையில் பெண்களின் பங்களிப்பு தோராயமாக 60 சதவீதமாக உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார். எனவே, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். கூட்டுறவுத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, பட்ஜெட் ஒதுக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும், அதன் விளைவாக கூட்டுறவுத்துறைக்கு கார்ப்பரேட் துறைக்கு இணையான முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிய பிரதமர், வரி விகிதங்கள் குறைப்பு குறித்தும் குறிப்பிட்டார். கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு உதாரணமாக புதிய கிளைகள் திறப்பது எளிமையாக்கப்பட்டதையும், வங்கிச் சேவைகள் நேரடியாக வீட்டிலேயே கிடைப்பதையும் அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டதைக் குறிப்பிட்ட பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். இடைத்தரகர்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிரமங்கள் களையப்பட்டு, தற்போது, கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு கிசான் சம்மன் நிதி நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 2.5 லட்சம் கோடி ரூபாய் வெளிப்படைத் தன்மையுடன் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளின் மொத்த விவசாய பட்ஜெட் 90 ஆயிரம் கோடி ரூபாய்க்குக் குறைவாக இருந்ததாகக் கூறிய பிரதமர், அதனுடன் ஒப்பிடும்போது, ரூ.2.5 லட்சம் கோடி என்பது பெரிய தொகை என்று குறிப்பிட்டார். அதாவது குறிப்பிட்ட ஐந்தாண்டுகளின் மொத்த விவசாய பட்ஜெட்டை விட மூன்று மடங்கு தொகை ஒரு திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் உர விலைகளால் விவசாயிகளின் சுமை அதிகரிக்காமல்  இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் பிரதமர் விளக்கினார். ஒரு மூட்டை யூரியா விலை வங்கதேசத்தில் ரூ.720, பாகிஸ்தானில் ரூ.800, சீனாவில் ரூ.2100, அமெரிக்காவில் ரூ.3000 என உள்ள நிலையில் இந்தியாவில் இன்று ஒரு விவசாயி ஒரு மூட்டை யூரியாவை ரூ.270-க்கு வாங்குவதாகப் பிரதமர் சுட்டிக் காட்டினார். "வாக்குறுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், விவசாயிகளின் வாழ்க்கையை மாற்ற சீரிய முயற்சிகள் தேவை என்பதையும் இது காட்டுகிறது" என்று அவர் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் உர மானியத்துக்காக ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை வழங்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதை எடுத்துரைத்த பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் விளைபொருட்களை அரசு  குறைந்தபட்ச ஆதார விலையில் அதிகமாக கொள்முதல் செய்து 15 லட்சம் கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது என்றார். "சராசரியாக, அரசு விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடிக்கும் மேல் செலவழிக்கிறது" என்று பிரதமர் கூறினார். "நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு வகையில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுவதை அரசு உறுதி செய்து வருகிறது" என்றும் பிரதமர் கூறினார்.

விவசாயிகளின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் பட்டியலிட்ட பிரதமர், அண்மையில் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் கோடி மதிப்பிலான தொகுப்பு அறிவிக்கப்பட்டதையும், கரும்பு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.315 அறிவிக்கப்பட்டதையும் தெரிவித்தார். இதன் மூலம் 5 லட்சம் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் மக்கள் நேரடியாக பயனடைவர்.

அமிர்த காலத்தின் போது, கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியில் கூட்டுறவுத் துறையின் பங்கு பெரியதாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். அரசும், கூட்டுறவும் இணைந்து வளர்ந்த இந்தியா என்ற கனவுக்கு இரட்டிப்பு பலத்தை வழங்கும் என்று பிரதமர் கூறினார். டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தின் மூலம், அரசு வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, பயனாளிகளுக்கு பலன்கள் நேரடியாக கிடைப்பதை உறுதி செய்துள்ளது என்றும் அவர் விளக்கினார். “இன்று, ஏழைகள்  ஊழலும், வாரிசு முறையும் ஒழிந்துவிட்டதாக நம்புகிறார்கள். நமது விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் இதை அன்றாட வாழ்க்கையில் உணர வேண்டியது அவசியம். வெளிப்படைத் தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தின் முன்மாதிரியாக கூட்டுறவுத் துறை மாற வேண்டியது அவசியம். இதற்காக கூட்டுறவுத் துறையில் டிஜிட்டல் முறைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். 

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகளவில் முன்னணியில் உள்ளதாகவும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இது சந்தையில் வெளிப்படைத் தன்மையையும் செயல்திறனையும் அதிகரிப்பதோடு, சிறந்த போட்டியையும் ஏற்படுத்தும் என்றார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வெளிப்படைத்தன்மையின் முன்மாதிரியாக மாறும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், 60,000-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கூட்டுறவு நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கூட்டுறவுச் சங்கங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாறுவதன் மூலம் நாடு பெரிதும் பயனடையும் என்று குறிப்பிட்டார்.

ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து சாதனை புரிந்து வருவதைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், கூட்டுறவு நிறுவனங்களும் இதில் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உற்பத்தி தொடர்பான கூட்டுறவு சங்கங்களின் ஊக்குவிப்புக்கு இதுவே காரணம் என்றும், அவர்களின் வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சிறந்த ஏற்றுமதி திறனுக்காக பால் துறையைக் குறிப்பிட்ட பிரதமர், நமது கிராமங்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்கு உதாரணமாக சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அண்மையில் நடந்த அரசு விருந்தில், சிறு தானியங்கள் முக்கிய இடம் பிடித்தயையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் சிறுதானியங்களை சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்ல கூட்டுறவு நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

உரிய விலை கிடைக்காதது, உரிய நேரத்தில் பணம் கிடைக்காதது போன்ற கரும்பு விவசாயிகளின் சவால்களை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். ‘விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு, கடந்த 9 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் வாங்கப்பட்டது. மேலும், கரும்பு விலை உயர்விற்கான வரியும் நீக்கப்பட்டுள்ளது’ என்றார். வரி தொடர்பான சீர்திருத்தங்கள் குறித்து பேசிய பிரதமர், ‘’இந்த பட்ஜெட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு பழைய நிலுவைத் தொகையை செலுத்த 10,000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த முயற்சிகள் அனைத்தும் நிலையான மாற்றங்களைக் கொண்டு வந்து இத்துறையை வலுப்படுத்துகின்றன’’ என்றார். 

உணவுப் பாதுகாப்பு என்பது கோதுமை மற்றும் அரிசியோடு நின்றுவிடவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், மீன், தீவனம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றின் இறக்குமதிக்காக இந்தியா சுமார் 2 முதல் 2.5 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடுவதாகக் கூறினார். கூட்டுறவு சங்கங்கள் சமையல் எண்ணெய் உற்பத்தியில் தேசத்தை தற்சார்பு நாடாக மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்காக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுள்ளதையும்,  பாமாயில் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார். கூட்டுறவு நிறுவனங்கள் அரசுடன் கைகோர்த்து செயல்படும் போது சமையல் எண்ணெய் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும், தகவல்களையும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் வழங்க முடியும் என்று திரு.மோடி பரிந்துரைத்தார்.

பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் சாதனைகளை எடுத்துரைத்த பிரதமர், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்டும் வழியாக இது மாறியுள்ளது என்று குறிப்பிட்டார். மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்துதல், மீன் சுத்திகரிப்பு, மீன் சேமிப்பு போன்ற தொழில்களைப் கொண்ட மீன்பிடித் துறையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு மீன்பிடித் தொழில் இரட்டிப்பாகியுள்ளது என்றும், இதில் கூட்டுறவுத்துறை பங்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மீன் வளர்ப்பு போன்ற பல புதிய துறைகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் பங்கு விரிவடைந்து வருவதாகவும், நாடு முழுவதும் 2 லட்சம் புதிய சங்கங்களை உருவாக்கும் இலக்கில் அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இதன் மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் இல்லாத கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்களையும் கூட கூட்டுறவு அமைப்புகளின் அதிகாரம் சென்றடையும் என்று பிரதமர் கூறினார். 

கடந்த சில ஆண்டுகளில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மீது கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட பிரதமர், 10 ஆயிரம் புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கும் பணி நடந்து வருவதாகவும், இதில் 5 ஆயிரம் அமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “இந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிறு விவசாயிகளுக்கு பெரும் சக்தியை அளிக்கப் போகின்றன. இவை சிறு விவசாயிகளை சந்தையில் பெரிய சக்தியாக மாற்றுவதற்கான வழியாகும். இது ஒரு சிறு விவசாயி விதைப்பது முதல் சந்தைப்படுத்துவது வரை சந்தையிலுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான பிரச்சாரம் என்றும் பிரதமர் கூறினார். இந்தத் துறையில் புதிய வழிமுறைகளை உருவாக்க, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

தேன் உற்பத்தி, இயற்கை உணவுகள், சோலார் பேனல்கள் மற்றும் மண் பரிசோதனை போன்ற விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் மற்ற நடவடிக்கைகளிலும் கூட்டுறவுத் துறையின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இயற்றை விவசாயத்தைப் பரப்புவதற்கும், மாற்று உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அறிவிக்கப்பட்ட பிரதமர் பிரணாம் திட்டத்தை பிரதமர் குறிப்பிட்டார். இதற்கும் கூட்டுறவு சங்கங்களின் ஆதரவு தேவை எனவும் வலியுறுத்தினார். விவசாயத்தில் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 கிராமங்களை தத்தெடுக்க கூட்டுறவு சங்கத்தை கேட்டுக்கொண்டார்.

குப்பைகளை செல்வமாக மாற்றும் வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் கோபர்தன் திட்டத்தை பிரதமர் எடுத்துரைத்தார். மாட்டு சாணம் மற்றும் கழிவுகளை மின்சாரம் மற்றும் இயற்கை உரங்களாக மாற்றுவதற்கான மிகப்பெரிய அமைப்பை அரசு உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட உயிரிவாயு ஆலைகளை பல நிறுவனங்கள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், கோபர்தன் ஆலைகளுக்கு உதவ கூட்டுறவு சங்கங்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனால் மாடு மேய்ப்பவர்களுக்கு மட்டுமின்றி, சாலையோரங்களில் ஆதரவின்றி விடப்பட்ட கால்நடைகளும் பயனடையும் என அவர் குறிப்பிட்டார்.

பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழுமையான பணிகள் குறித்தும் பிரதமர் பேசினார். கூட்டுறவு இயக்கத்தில் கால்நடைப் பராமரிப்பாளர்கள் பெருமளவில் ஈடுபட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கோமாரி நோயை உதாரணமாகக் கூறிய பிரதமர், நீண்ட காலமாக இந்நோய் விலங்குகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதுடன், கால்நடைப் பராமரிப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பையும் ஏற்படுவதாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் இலவச தடுப்பூசி பிரச்சாரத்தை முதன் முறையாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம் 24 கோடி விலங்குகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார் அவர். கோமாரி நோய், வேரிலிருந்து இன்னும் அழிக்கப்படாததையும் அவர் சுட்டிக் காட்டினார். தடுப்பூசி போடுவது அல்லது விலங்குகளை கண்டறிவது போன்ற பணிகளில் ஈடுபட முன் வருமாறு கூட்டுறவு சங்கங்களை அவர் கேட்டுக்கொண்டார். பால்வளத் துறையில் கால்நடைப் பராமரிப்பாளர்களுடன் நமது விலங்குகளும் சம அளவில் முக்கியத்துவம் பெறுவதாக திரு மோடி வலியுறுத்தினார்.

 

அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். அமிர்த நீர் நிலைகள், நீர் பாதுகாப்பு, ஒரு துளி அதிக சாகுபடி, நுண்ணீர் பாசனம் போன்ற திட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

 

சேமிப்பு பற்றியும் பிரதமர் பேசினார். போதிய சேமிப்பு வசதிகள் இல்லாத நிலை பல ஆண்டுகளாக உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நமது மொத்த உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் குறைவான  தானியங்களை மட்டுமே நம்மால் சேமிக்க முடிவதாக அவர் கூறினார். உலகின் மிகப்பெரிய சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும், கடந்த பல தசாப்தங்களாக சேமிக்கப்பட்ட மொத்த 1400 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய திட்டத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 700 லட்சம் டன் சேமிப்புத் திறனை உருவாக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். வேளாண் உள்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை இதில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதில் பெரும்பாலான முதலீடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் ஏற்பட்டிருப்பதாகவும், நேரடி சந்தை உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்கள் இதுபோன்ற மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

தமது உரையின் நிறைவு பகுதியில், புதிய இந்தியாவில் நாட்டின் பொருளாதார ஆதாரத்தின் ஆற்றல் வாய்ந்த ஊடகமாக கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். கூட்டுறவு மாதிரியைப் பின்பற்றி தற்சார்பு கிராமங்களைக் கட்டமைப்பின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். கூட்டுறவு சங்கங்கள் இடையே ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்று யோசனை கூறிய அவர், அரசியல் அல்லாமல், சமூக மற்றும் தேசிய கொள்கைகளை அவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா, கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா, ஆசிய பசிபிக் பகுதிக்கான சர்வதேச கூட்டுறவு கூட்டணியின் தலைவர் டாக்டர் சந்திரபால் சிங் யாதவ், இந்திய தேசிய கூட்டுறவு சங்க தலைவர் திரு திலீப் சங்கானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னணி:

 

“ஒத்துழைப்பின் மூலம் செழுமை” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு இயக்கங்களை பலப்படுத்தும் நோக்கில் கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.  இந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

 

 17-வது இந்திய கூட்டுறவு மாநாடு 2023 ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் கூட்டுறவு இயக்கங்களின் மேம்பாடு, கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை  முறியடிப்பதற்கான சாத்தியக்கூறுகள், இந்திய கூட்டுறவு இயக்கங்களின் வளர்ச்சியை முன்னிறுத்திய எதிர்கால  கொள்கைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இது அமிர்தப்பெருவிழா காலத்தில் ஒத்துழைப்பின் மூலம் துடிப்பான இந்தியாவின் செழுமை என்ற கருப்பொருளின் அடிப்படையில் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளன. தொடக்க கூட்டுறவு சங்கம் முதல் தேசிய அளவிலான கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த 3600-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள், சர்வதேச கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச கூட்டுறவு சார்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு அமைச்சகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO

Media Coverage

India a ‘front-runner’ market, plans to deepen AI and manufacturing presence: Ericsson CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister speaks with Amir of Qatar
March 03, 2026

The Prime Minister, Shri Narendra Modi spoke with H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar.

During the conversation, the Prime Minister conveyed that India stands firmly in solidarity with Qatar and strongly condemns any violation of its sovereignty and territorial integrity.

The two leaders emphasized the urgent need to restore peace and stability in the region through dialogue and diplomacy.

The Prime Minister also conveyed his appreciation for the continued support and care extended by the Qatari leadership to the Indian community in Qatar during this challenging time.

The Prime Minister wrote on X;

“Spoke with my brother, H.H. Sheikh Tamim bin Hamad Al Thani, the Amir of Qatar. We stand firmly in solidarity with Qatar and strongly condemn any violation of its sovereignty and territorial integrity. We emphasized the urgent need to restore peace and stability in the region through dialogue and diplomacy. I also conveyed my appreciation for his continued support and care for the Indian community in Qatar during this challenging time.

@TamimBinHamad”