இன்று, உலக விண்வெளி-விமான ஒருங்கிணைப்பில் இந்தியா ஒரு முன்னணி சக்தியாக வளர்ந்து வருகிறது: பிரதமர்
இந்தியா இன்று உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக உள்ளது: பிரதமர்
உடான் திட்டத்தின் வெற்றி இந்திய சிவில் விமானப் போக்குவரத்தில் ஒரு பொற்கால அத்தியாயம்: பிரதமர்
உலகின் முன்னணி விமான நிறுவனங்களுக்கு, முதலீட்டிற்கான சிறந்த வாய்ப்பை இந்தியா வழங்குகிறது: பிரதமர்

உலகத்தரம் வாய்ந்த விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், இணைப்பை அதிகப்படுத்துவதற்கும், பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) 81வது  வருடாந்திர பொதுக் குழு கூட்டம்  மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின் அமர்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், விருந்தினர்களை வரவேற்று, நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு இந்தியாவில் நடப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில்  ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவர் வலியுறுத்தியதுடன், இன்றைய இந்தியா எப்போதும் இல்லாத அளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். உலகளாவிய விமானப் போக்குவரத்து சூழலியலில் இந்தியாவின் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், இது ஒரு பரந்த சந்தையாக மட்டுமல்லாமல், கொள்கை சார்ந்த தலைமை, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் அடையாளமாகவும் உள்ளது, என்று கூறினார். கடந்த பத்தாண்டுகளில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகவும், அவை நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த பிரதமர், "இன்று, விண்வெளி-விமான ஒருங்கிணைப்பில் இந்தியா ஒரு உலகளாவிய தலைமையாக வளர்ந்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

 

இந்த உச்சிமாநாடும், உரையாடலும் விமானப் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய ஒத்துழைப்பு, காலநிலை உறுதிப்பாடுகள் மற்றும் சமமான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாகவும்  செயல்படுகின்றன என்பதை வலியுறுத்திய திரு மோடி, உச்சிமாநாட்டில் நடைபெறும் விவாதங்கள் உலகளாவிய விமானப் போக்குவரத்துக்கு புதிய திசையை வழங்கும், அதன் எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கு வித்திடும் மற்றும் அதன் திறனை மேம்படுத்தும் என்று கூறினார். பரந்த தூரங்களையும் கண்டங்களுக்கு இடையேயான பயணங்களையும் சில மணிநேரங்களில் கடக்கும் மனிதகுலத்தின் திறன் குறித்து அவர் குறிப்பிட்டார், 21 ஆம் நூற்றாண்டின் விருப்பங்கள் வழக்கமான பயணங்களுக்கு அப்பால் தொடர்ந்து உருவாகி வருகின்றன என்பதை வலியுறுத்தினார். புதுமை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விரைவான வேகத்தைக் குறிப்பிட்ட பிரதமர், வேகம் அதிகரிக்கும் போது, ​​தொலைதூர இடங்கள் நமது இலக்காக மாறி வருவதாகக் கூறினார்.

 

விண்வெளி விமானங்கள் மற்றும் கோள்களுக்கு இடையேயான பயணங்களை வணிகமயமாக்கும் லட்சியங்கள் அதிகரித்து வருவதால், பூமியில் உள்ள நகரங்களுடன் மட்டுமே பயணம் இனி நின்றுவிடாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு. மோடி, இத்தகைய முன்னேற்றங்கள் நேரம் எடுக்கும் அதே வேளையில், அவை விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தை, மாற்றம் மற்றும் புதுமைக்கான மையமாக எடுத்துக்காட்டுகின்றன, இதற்காக இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது என்று உறுதி படத் தெரிவித்தார். இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை இயக்கும் மூன்று அடிப்படைத் தூண்களை பிரதமர் கோடிட்டுக் காட்டினார், முதலாவது, ஒரு பரந்த சந்தை. இது வெறும் நுகர்வோரின் தொகுப்பு அல்ல, ஆனால் இந்தியாவின் லட்சிய சமூகத்தின் பிரதிபலிப்பு. இரண்டாவதாக, இளம் கண்டுபிடிப்பாளர்கள் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் சுத்தமான எரிசக்தி ஆகியவற்றில் முன்னேற்றங்களை முன்னோடியாகக் கொண்ட ஒரு வலுவான மக்கள்தொகை மற்றும் திறமைக் குழு. மூன்றாவதாக, தொழில்துறை வளர்ச்சியை செயல்படுத்தும் வகையில் ஒரு திறந்த மற்றும் ஆதரவான கொள்கை சூழலியல். இந்த வலிமைகளுடன், இந்தியா தனது விமானப் போக்குவரத்துத் துறையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு கொண்டு செல்ல தயாராக உள்ளது என்று திரு. மோடி வலியுறுத்தினார்.

 

கடந்த ஆண்டுகளில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார். "உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக இந்தியா மாறியுள்ளது" என்று அவர் மேலும் கூறினார். உடான் திட்டத்தின் வெற்றியை, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு பொற்கால அத்தியாயம் என்று கூறிய திரு. மோடி, இந்த முயற்சியின் கீழ், 15 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மலிவு விலை விமானப் பயணத்தால் பயனடைந்துள்ளனர், இதனால் பல குடிமக்கள் முதல் முறையாக விமானப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது என்று கூறினார். இந்திய விமான நிறுவனங்கள் தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், ஆண்டுதோறும் 240 மில்லியன் பயணிகள் பயணிப்பதாகவும், இது உலகளவில் பெரும்பாலான நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டுக்குள், இந்த எண்ணிக்கை 500 மில்லியன் பயணிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த பத்தாண்டுகளின் இறுதிக்குள் இந்த அளவு 10 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்கும் என்றும் திரு. மோடி குறிப்பிட்டார்.

 

இவை வெறும் புள்ளிவிவரங்கள், இந்தியாவின் மகத்தான ஆற்றலின் பிரதிபலிப்பு என்று கூறிய பிரதமர், இந்த ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான எதிர்காலத் திட்ட வரைபடத்தில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக எடுத்துரைத்தார். உலகத் தரம் வாய்ந்த விமான நிலைய உள்கட்டமைப்பில் இந்தியாவின் முதலீட்டை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், 2014 ஆம் ஆண்டில், நாட்டில் 74 செயல்பாட்டு விமான நிலையங்கள் பயன்பாட்டில்  இருந்தன, அவை இப்போது 162 ஆக விரிவடைந்துள்ளன. இந்திய விமான நிறுவனங்கள் 2,000 க்கும் மேற்பட்ட புதிய விமானங்களுக்கு ஆர்டர்களை வழங்கியுள்ளன, இது இந்தத் துறையில் விரைவான வளர்ச்சியைக் குறிக்கிறது என்று திரு மோடி மேலும் குறிப்பிட்டார். இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை ஒரு முக்கியமான கட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத உயரங்களை அடையத் தயாராக இருப்பதால், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்பதை வலியுறுத்திய அவர், இந்த மாற்றம் புவியியல் எல்லைகளைத் தாண்டிச் செல்வது மட்டுமல்லாமல், உலகளவில் நிலைத்தன்மை, பசுமை இயக்கம் மற்றும் சமமான அணுகலையும் ஊக்குவிக்கும் என்று எடுத்துரைத்தார்.

 

"இந்தியாவின் விமான நிலையங்கள் இப்போது ஆண்டுக்கு 500 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளன, மேலும் தொழில்நுட்பம் மூலம் பயனர் அனுபவத்தில் புதிய தரங்களை அமைக்கும் சில நாடுகளில் ஒன்றாகவும் உள்ளன" என்று பிரதமர் கூறினார், பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நிலைத்தன்மைக்கு சமமான முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று கூறினார். நிலையான விமான எரிபொருட்கள், பசுமை தொழில்நுட்பங்களில் முதலீடு மற்றும் கார்பன் தடத்தை குறைப்பதற்கான முயற்சிகளை நோக்கிய இந்தியாவின் மாற்றம் குறித்து அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார். முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் உறுதி செய்வதற்கும், வளர்ச்சிக்கு சமநிலையான அணுகுமுறையை வலுப்படுத்துவதற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார்.

 

டிஜிட்டல் விமானப் போக்குவரத்தின் சிறந்த உதாரணமாக டிஜி யாத்ரா செயலியைக் குறிப்பிட்ட பிரதமர், சர்வதேச விருந்தினர்கள் இதை  அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுமையான, தடையற்ற பயணத் தீர்வை டிஜி யாத்ரா வழங்குகிறது என்றும், பயணிகள் காகித ஆவணங்கள் அல்லது அடையாள அட்டை இல்லாமல் விமான நிலைய நுழைவாயிலில் பயணிகளை அனுமதிக்கும் என்றும் வலியுறுத்தினார். அதிக மக்களுக்கு சேவை செய்வதில் இந்தியாவின் புதுமைகள் மற்றும் அனுபவம் பல நாடுகளுக்கு பயனளிக்கும் என்றும் திரு. மோடி கூறினார். "டிஜி யாத்ரா ஒரு பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான தீர்வாக இருக்கிறது, இது உலகளாவிய தெற்கிற்கு உத்வேகத்தின் மாதிரியாக செயல்படுகிறது" என்றும் அவர் மேலும் கூறினார்.

 

இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறையின் முக்கிய உந்துசக்தியாக நிலையான சீர்திருத்தங்கள் உள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், இந்த தொலைநோக்குப் பார்வையை ஆதரிக்கும் உத்திசார் முயற்சிகளுடன், உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தி இயக்கம், தொழில்துறை வளர்ச்சியில் இந்தியாவின் கவனத்தை வலுப்படுத்துகிறது என்று குறிப்பிட்ட திரு. மோடி, இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விமானப் பொருட்களின் நலன் பாதுகாப்பு மசோதா பற்றி எடுத்துரைத்து, இது இந்தியாவில் கேப் டவுன் மாநாட்டிற்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கிறது, என்றார். இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள உலகளாவிய விமான குத்தகை நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கிஃப்ட் சிட்டியில் வழங்கப்படும் சலுகைகளையும் அவர் சுட்டிக்காட்டினார், இந்த நடவடிக்கைகள் இந்தியாவை விமான குத்தகைக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றியுள்ளன என்று கூறினார்.

 

"புதிய இந்திய விமானச் சட்டம், விமானச் சட்டங்களை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கிறது, நெறிப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு, இணக்கத்தை எளிதாக்குதல் மற்றும் முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க முதலீட்டு வாய்ப்பை வழங்கும் எளிமைப்படுத்தப்பட்ட வரி அமைப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது" என்று திரு மோடி கூறினார். விமானத் துறையின் வளர்ச்சி புதிய விமானங்கள், புதிய வேலைகள் மற்றும் புதிய சாத்தியக்கூறுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார், இந்தத் துறை, விமானிகள், குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள் மற்றும் தரை ஊழியர்களுக்கு விரிவடையும் வாய்ப்புகளை உருவாக்குகிறது என்பதைக் குறிப்பிட்டார். பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆர்ஓ), ஒரு வளர்ந்து வரும் துறையாக உருவெடுப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டி, விமான பராமரிப்புக்கான உலகளாவிய மையமாக இந்தியா முயற்சிகளை துரிதப்படுத்தி வருகிறது என்பதை எடுத்துரைத்தார். 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 96 எம்ஆர்ஓ மையங்கள்இருந்தன, அவை இப்போது 154 ஆக அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் தானியங்கி வழித்தடத்தின் கீழ் 100% அந்நிய நேரடி முதலீடு, ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் வரி சீரமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் எம்ஆர்ஓ துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 2030 ஆம் ஆண்டுக்குள் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான எம்ஆர்ஓ மையத்தை நிறுவுவதற்கான இந்தியாவின் இலக்கை திரு மோடி கோடிட்டுக் காட்டினார், இது நாட்டின் விமான வளர்ச்சி உத்வேகத்தை வலுப்படுத்துகிறது.

 

இந்தியாவை வெறும் விமானச் சந்தையாக மட்டும் பார்க்கக்கூடாது, மாறாக மதிப்புச் சங்கிலித் தலைமையாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், வடிவமைப்பு முதல் விநியோகம் வரை, இந்தியா உலகளாவிய விமான விநியோகச் சங்கிலியின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி வருவதாகக் கூறினார். இந்தியாவின் திசையும் வேகமும் சரியான பாதையில் இருப்பதாகவும், நாட்டின் தொடர்ச்சியான விரைவான முன்னேற்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். உலகளாவிய விமானப் புதுமைகளில் இந்தியாவின் தலைமைத்துவத்தின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில், 'இந்தியாவில் உற்பத்தி செய்தல்' என்பதை மட்டுமல்லாமல் 'இந்தியாவில் வடிவமைத்தல்' என்பதையும் ஏற்றுக்கொள்ளுமாறு விமான நிறுவனங்களை திரு மோடி கேட்டுக் கொண்டார்.

 

இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை அதன் உள்ளடக்கிய மாதிரியால் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் 15% க்கும் மேற்பட்ட விமானிகள், பெண்கள் என்றும், இது உலகளாவிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம் என்பதையும்  பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கேபின் குழுவில் பெண்களின் உலகளாவிய சராசரி சுமார் 70% ஆக இருந்தாலும், இந்தியாவின் எண்ணிக்கை 86% ஆக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் எம்ஆர்ஓ துறையில் பெண் பொறியாளர்கள் உலகளாவிய சராசரியை விட அதிகமாக உள்ளனர் என்றும், இது தொழில்துறையில் வளர்ந்து வரும் பெண்களின் பங்களிப்பை நிரூபிக்கிறது என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

 

விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தின் முக்கிய அங்கமாக ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளது என்பதையும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்திற்கு இந்தியா அதைப் பயன்படுத்தி வருகிறது என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், விவசாயம், விநியோக சேவைகள் மற்றும் பல்வேறு துறைகளில் பெண்களின் சுயஉதவிக் குழுக்களை மேம்படுத்தவும், அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

 

“விமானப் பாதுகாப்பு எப்போதும் இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்தியா தனது விதிமுறைகளை சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் (ஐசிஏஓ) உலகளாவிய தரநிலைகளுடன் இணைத்து வருகிறது” என்று திரு மோடி கூறினார். சர்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஐசிஏஓவின் சமீபத்திய பாதுகாப்பு தணிக்கை, விமானப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்தியாவின் முயற்சிகளை அங்கீகரித்ததாகவும், ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டில் தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் எடுத்துரைத்தார். உலகளாவிய விமானப் போக்குவரத்து சிறப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இது மேலும் சான்றாகும்.

 

இந்தியா தொடர்ந்து திறந்த வானம் மற்றும் உலகளாவிய இணைப்பை ஆதரிப்பதாக பிரதமர் கூறினார். சிகாகோ மாநாட்டின் கொள்கைகளை இந்தியா ஆதரிப்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் இணைக்கப்பட்ட மற்றும் அணுகக்கூடிய விமான வலையமைப்பை ஆதரித்தார். விமானப் பயணம் அனைவருக்கும் அணுகக்கூடிய, மலிவான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்குதாரர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். விமானப் பயணத்தை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான புதிய தீர்வுகளை உருவாக்கும் துறையின் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அனைத்து பங்குதாரர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

மத்திய அமைச்சர்கள் திரு கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, திரு முரளிதர் மோஹோல், ஐஏடிஏ வாரிய குழுவின் தலைவர் திரு. பீட்டர் எல்பர்ஸ், தலைமை இயக்குநர் திரு. வில்லி வால்ஷ், இண்டிகோவின் நிர்வாக இயக்குநர் திரு ராகுல் பாட்டியா உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

பின்னணி:

 

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாடு ஜூன் 1 முதல் 3 வரை நடைபெறுகிறது. இந்தியாவில் 42 ஆண்டுகளுக்கு முன்பு, 1983 இல் பொதுக் குழு கூட்டம் கடைசியாக நடைபெற்றது. இது உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையின் உயர்மட்டத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சர்வதேச ஊடக பிரதிநிதிகள் உட்பட 1,600 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கிறது.

 

விமானத் துறையின் பொருளாதாரம், விமான இணைப்பு, எரிசக்தி பாதுகாப்பு, நிலையான விமான எரிபொருள் உற்பத்தி, கார்பன் குறைப்பிற்கு நிதி உதவி, புத்தாக்கம் உள்ளிட்ட விமானத் துறை எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாடு கவனம் செலுத்தும். உலகெங்கிலும் உள்ள விமானப் போக்குவரத்துத் தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும், நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பையும் காண வாய்ப்பு கிடைக்கும்

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI 2.0: India bets big on making more of the smartphone at home

Media Coverage

PLI 2.0: India bets big on making more of the smartphone at home
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 29, 2026
May 29, 2026

Every Sector, Every Citizen: How PM Modi’s Vision is Transforming India Across All Fronts