மனதின் குரல் 25.12.16

Published By : Admin | December 25, 2016 | 19:40 IST
#MannKiBaat: Prime Minister Modi extends Christmas greetings to the nation
PM Narendra Modi pays tribute to Pt. Madan Mohan Malviya on his Jayanti #MannKiBaat
PM Narendra Modi extends birthday greetings to Bharat Ratna Atal Bihari Vajpayee on his birthday during #MannKiBaat
Country cannot forget Atal ji’s contributions. Under his leadership India conducted nuclear tests: PM Modi during #MannKiBaat
#MannKiBaat: Shri Narendra Modi highlights ‘Lucky Grahak’ & ‘Digi Dhan’ Yojana to promote cashless transactions
Awareness towards online payments and using technology for economic transactions is increasing: PM during #MannKiBaat
Glad to note that there has been 200 to 300 per cent spurt in cashless transactions: PM Modi #MannKiBaat
We should be at the forefront of using digital means to make payments and transactions: PM during #MannKiBaat
PM Modi cautions those spreading lies & misleading honest people on demonetisation during #MannKiBaat
Support of people is like blessings of the Almighty: PM Modi during #MannKiBaat
Government is taking regular feedback from people and it is alright to make changes according to it: PM during #MannKiBaat
We have formulated a very strict law on ‘Benaami’ property: PM during #MannKiBaat
India is the fastest growing large economy today: PM Modi during #MannKiBaat
#MannKiBaat: Because of the constant efforts of our countrymen, India is growing on various economic parameters, says PM
An important bill for ‘Divyang’ people was passed. We are committed to uplifting our ‘Divyang’ citizens: PM #MannKiBaat
Our sportspersons have made the country proud: PM Modi during #MannKiBaat
PM Narendra Modi extends New Year greetings to people across the country during #MannKiBaat

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். உங்கள் அனைவருக்கும் க்றிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இன்றைய நாள் சேவை, தியாகம், கருணை ஆகியவற்றுக்கு நமது வாழ்வினில் மகத்துவம் அளிக்க வேண்டிய நன்னாள். ஏசுநாதர்,  ஏழைகளுக்கு நாம் எந்த உபகாரமும் செய்யத் தேவையில்லை, அவர்களை நாம் ஏற்றுக் கொண்டாலே போதும் என்று கூறியிருக்கிறார். தூய லூக்கா தனது நற்செய்தியில், ஏசுநாதர் ஏழைகளுக்கு சேவை மட்டும் புரியவில்லை, அவர் ஏழைகள் செய்யும் சேவையை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார், என்றார், இது தான் மெய்யான அதிகாரப் பங்களிப்பு. இதனுடன் தொடர்புடைய ஒரு கதை பிரபலமாக இருக்கிறது. ஏசு, கோயில் கஜானா ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்தார். பல செல்வந்தர்கள் வந்தார்கள், ஏகப்பட்ட செல்வத்தை அளித்தார்கள். கடைசியில் ஒரு ஏழை விதவைத் தாய் வந்து இரண்டு செப்புக் காசுகளை இட்டாள். உள்ளபடியே பார்க்கும் போது, அந்த செப்புக் காசுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது தான். அங்கே நின்றிருந்த பக்தர்களின் மனதில் ஆச்சரியம் ஏற்பட்டது என்பது இயல்பானது தான். ஆனால் அப்போது ஏசுநாதரோ, அந்த விதவைப் பெண் தான் மிகப் பெரிய தானம் அளித்திருப்பதாகக் கூறினார்; ஏனென்றால் மற்றவர்கள் ஏராளமான செல்வத்தை அளித்திருந்தாலும் கூட, இந்த விதவைப் பெண் தன்னிடம் இருந்த அனைத்தையும் அளித்திருக்கிறாள் என்றார்.

இன்று டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மதிப்பிற்குரிய மதன் மோஹன் மாளவீயா அவர்களின் பிறந்த நாள். பாரத நாட்டு மக்கள் மனங்களில் மனவுறுதிப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் ஊட்டிய மாளவீயா அவர்கள் நவீன கல்விமுறை வாயிலாக புதியதொரு திசையை அளித்தார். அவர்களின் பிறந்த நாளான இன்று உணர்வுபூர்வமான அஞ்சலிகளை நாம் செலுத்துவோம். இரண்டு நாட்கள் முன்னதாகத் தான் மாளவீயா அவர்களின் தவபூமியான வாராணசியில் பல வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் வாராணசியில், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில், பெருமதிப்பிற்குரிய மதன் மோஹன் மாளவீயா புற்றுநோய் மையத்துக்கான அடிக்கல்லை நாட்டினேன். நிறுவப்படவிருக்கும் இந்த புற்றுநோய் மையம், கிழக்கு உத்திர பிரதேசம் மட்டுமல்லாமல், , ஜார்க்கண்ட், பீஹார் ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இன்று பாரத ரத்னா, முன்னாள் பிரதம மந்திரி பெருமதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களின் பிறந்த நாளும் கூட. இந்த நாடு அடல் அவர்களின் பங்களிப்பை மறக்காது. அவரது தலைமையின் கீழ் நாம் அணுசக்தித் துறையிலும் நாட்டுக்குப் பெருமிதம் சேர்த்தோம். கட்சித் தலைவர் என்ற முறையிலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலும், அமைச்சர் அல்லது பிரதமர் என்ற பதவியின் மூலமாகவும், அடல் அவர்களின் பிரத்யேகமான பங்களிப்பு அவரை ஒரு உதாரண புருஷராக ஆக்கியிருக்கிறது. அடல் அவர்களின் பிறந்த நாளான இன்று நான் அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருக்கு சிறப்பான உடல்நலத்தை வழங்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றேன். ஒரு ஊழியன் என்ற முறையில் அடல் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் பெரும்பேறு எனக்குக் கிட்டியது. அவர் பற்றிய நினைவுகள் பசுமையாக என் மனக்கண்கள் முன்பாக நிழலாடுகிறது. இன்று காலை கூட நான் ட்வீட் செய்த போது ஒரு பழைய வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு எளிய ஊழியனிடத்தில் அடல் அவர்களின் பாசமழை எப்படிப் பொழியும் என்பதற்கு அந்த வீடியோவைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்து விடும்.

க்றிஸ்துமஸ் நன்னாளான இன்று, நாட்டுமக்களுக்குப் பரிசாக இரண்டு திட்டங்களின் பயன்கள் கிடைக்க இருக்கின்றன. ஒரு வகையில் பார்க்கப் போனால் இவை இரண்டையும் புதிய திட்டங்களின் தொடக்கம் எனக் கொள்ளலாம். கிராமமாகட்டும், நகரமாகட்டும், படித்தவர்களாகட்டும், பாமரர்களாகட்டும், ரொக்கமில்லா பரிவர்த்தனை என்றால் என்ன, ரொக்கமில்லா வியாபாரத்தை எப்படி செய்வது, ரொக்கமில்லாமல் எப்படிப் பொருட்களை வாங்குவது என்பது தொடர்பான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஒட்டுமொத்த நாட்டிலும் நிலவி வருவதை நாம் காண முடிகிறது. ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரிடமிருந்து இது தொடர்பான வழிமுறைகளை கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். இதற்கு ஊக்கமளிக்கும் வகையில், மொபைல் வங்கிச் சேவைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, e-payment, மின்னணு பணம் செலுத்தல் என்ற பழக்கம் உருவாக வேண்டும் என்று பாரத அரசு கருதுகிறது. இதை முன்னிட்டு,  நுகர்வோருக்கும் சரி, சிறிய வியாபாரிகளுக்கும் சரி ஊக்கமளிக்கும் விதமாக ஒரு திட்டத்தை அரசு இன்று தொடக்க இருக்கிறது. நுகர்வோருக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திட்டம் தான் lucky நுகர்வோர் திட்டம்; இதே போல வியாபாரிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஏற்படுத்தியிருக்கும் திட்டம் Digiதன் வியாபாரத் திட்டம்.

டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பரிசு என்ற வகையில், 15000 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசுகள் கிடைக்கும்; அந்த 15000 நபர்கள் ஒவ்வொருவருவரின் வங்கிக் கணக்குகளில் தலா ஆயிரம் ரூபாய் பரிசாக போடப்படும். இது ஏதோ இன்று மட்டும் நடக்கக் கூடிய ஒன்றல்ல; இந்தத் திட்டம் இன்று தொடங்கி 100 நாட்கள் வரை நடைபெறவுள்ள ஒன்று. ஒவ்வொரு நாளும் 15000 நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் பரிசுத் தொகை கிடைக்கவிருக்கிறது. 100 நாட்களில், இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசுகளாக கொண்டு சேர்க்கப்படவிருக்கிறது, ஆனால் நீங்கள் மொபைல் வங்கிச் சேவைகள், மின்னணு வங்கிச் சேவைகள், RuPay அட்டை, UPI, USSD போன்ற டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுபவர், இது போன்ற சேவைகளைப் பயன்படுத்துபவர் என்றால் தான் இந்தப் பரிசுகளைப் பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவீர்கள், அப்போது தான் உங்கள் பெயர் குலுக்கலில் இடம் பெறும்.  இதோடு கூடவே, வாரம் ஒரு நாள் பெரியதொரு குலுக்கல் நடைபெறும், அதில் பரிசுத் தொகையும் இலட்சக்கணக்கில் இருக்கும், இப்படி 3 மாதங்கள் நிறைவடையும் வேளையில், ஏப்ரல் மாதம் 14ஆம் தேதியன்று, பாபாசாஹேப் அம்பேட்கர் அவர்களின் பிறந்த நாளன்று, ஒரு பம்பர் பரிசுக் குலுக்கல் நடைபெறும்; இதில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். Digi தன் வியாபாரத் திட்டம் முக்கியமாக வியாபாரிகளுக்கானது. வியாபாரிகள் தாங்களே இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, தங்கள் வியாபாரத்தை ரொக்கமில்லா பரிவர்த்தனையாக மாற்றும் வகையில் நுகர்வோரையும் இதில் இணையச் செய்யலாம். இப்படிப்பட்ட வியாபாரிகளுக்கு என பிரத்யேகமான பரிசுகள் அளிக்கப்படும், இந்தப் பரிசுகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். வியாபாரிகளின் வியாபாரமும் அமோகமாய் நடக்கும், பரிகளைத் தட்டிச் செல்லும் அருமையான வாய்ப்பும் கிட்டும். இந்தத் திட்டம், சமுதாயத்தின் அனைத்து வர்க்கத்தினர், குறிப்பாக ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்ட ஒன்று; யாரெல்லாம் 50 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை பெறுமானமுள்ள பொருட்களை வாங்குகிறார்களோ, அவர்களுக்குத் தான் இதன் பலன் சென்று சேரும். 3000 ரூபாய்க்கு அதிகமாக பொருட்களை வாங்குவோருக்கு இது கிடையாது. கடைநிலை ஏழை கூட USSD, feature phone, எளிமையான ஃபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும், அவற்றை விற்க முடியும், தொகையை செலுத்த முடியும், இவர்கள் அனைவருமே இந்தத் திட்டத்தால் பயன் பெறுவார்கள். கிராமப்புறப் பகுதிகளில் இருப்போர், AEPS வாயிலாக பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியும், பரிசுகளை வெல்லவும் முடியும். இன்று பாரதத்தில் சுமார் 30 கோடி RuPay அட்டைகள் இருக்கின்றன என்பதும், அவற்றில் 20 கோடி அட்டைகள் ஏழைக் குடும்பங்கள், ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுடையவை என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இந்த 30 கோடி மக்கள் உடனடியாக இந்தப் பரிசுத் திட்டத்தில் பங்கெடுக்க முடியும். நாட்டுமக்கள் இந்த வழிமுறையில் நாட்டம் கொள்வார்கள் என்பதிலும், தங்கள் அக்கம் பக்கம் இருக்கும் இளைஞர்களிடம் தேவையான தகவல்களைப் பெற்று ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அட, இதென்ன பெரிய விஷயம், உங்கள் குடும்பத்திலேயே கூட 10ஆவது, 12ஆவது படித்த பிள்ளை இருந்தால், அவர்களுக்கே கூட இந்தப் பயன்பாடுகள் பற்றி நன்கு தெரிந்திருக்கும், அவர்கள் உங்களுக்குக் கற்றுத் தந்து விடுவார்கள். இது மிகவும் எளிமையானது – நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் WhatsApp மூலம் தகவல் அனுப்புவது போல எளிமையானது.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நாட்டில் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது, மின்னணு முறையில் பணத்தை எப்படி செலுத்துவது, ஆன்லைன் மூலம் தொகையை எப்படி செலுத்துவது ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு வேகமாகப் பரவி வருவதைக் காணும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக ரொக்கமில்லா வியாபாரம் என்பது 200 முதல் 300 சதவீதம் வரை வளர்ச்சி கண்டிருக்கிறது. இதை மேலும் முன்னெடுத்துச் செல்ல பாரத அரசு மிகப் பெரிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறது. இந்தத் தீர்மானம் எத்தனை பெரிய ஒன்று என்பதை வியாபாரிகள் மிக நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். எந்த வியாபாரி டிஜிட்டல் முறையில் கொடுக்கல் வாங்கல்களைச் செய்கிறாரோ, தனது வியாபாரத்தில் ரொக்கப் பயன்பாட்டுக்கு பதிலாக ஆன்லைன் முறையில் தொகை செலுத்தி வருகிறாரோ, அப்படிப்பட்ட வியாபாரிகளுக்கு வருமான வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

    நான் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் தத்தமது வழிகளில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு, அவர்கள் பல திட்டங்கள் குறித்து பரிசீலனை செய்து வருகிறார்கள். அதே வேளையில் அரசுகளும் கூட தங்கள் தங்கள் வகைகளில் பல திட்டங்களைத் தொடக்கி இருக்கிறார்கள், அமல் படுத்தியும் வருகிறார்கள். சொத்து வரி, வியாபார உரிமக் கட்டணம் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் செலுத்துவோருக்கு 10 சதவீத வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அஸாம் மாநில அரசு அறிவித்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. . கிராமப்புற வங்கிகளின் கிளைகள், தங்களின் 75 சதவீத கணக்குதாரர்களைக் கொண்டு ஜனவரி முதல் மார்ச் முடிய குறைந்த பட்சம் இரண்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்தால், அரசு தரப்பிலிருந்து 50000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31க்கு உள்ளாக 100 சதவீதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்ற நிலையை எட்டிய கிராமங்களுக்கு அரசு தரப்பிலிருந்து Digi பணப்பரிவர்த்தனைக்கான உன்னதமான பஞ்சாயத்து என்ற வகையில் 5 இலட்சம் ரூபாய் வெகுமதியாக வழங்கப்படும் என்று அந்தக் குழு அறிவித்திருக்கிறது. அவர்கள் விவசாயிகளுக்கு டிஜிட்டல் விவசாய சிரோமணி என்ற ஒரு திட்டத்தையும் தீர்மானித்திருக்கிறார்கள். விதையும் உரமும் வாங்க முழுமையாக டிஜிட்டல் முறையில் தொகை செலுத்தும் 10 முதன்மை விவசாயிகளுக்கு தலா 5000 ரூபாய் வெகுமதியாக அளிப்பதாக அஸாம் மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. நான் அஸாம் மாநில அரசுக்கு என் பாராட்டுதல்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், இதே போன்ற முனைப்புகள் பலவற்றை மேற்கொண்டிருக்கும் அனைத்து அரசுகளுக்கும் என் பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன்.

பல அமைப்புகள் கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு டிஜிட்டல் முறையிலான கொடுக்கல் வாங்கலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் வெற்றிகரமான செயல்பாடுகளை செய்து வருகின்றன. Gujarat Narmada Valley Fertilizers & Chemicals நிறுவனம் முக்கியமாக உரத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது; அவர்கள் உர விற்பனை செய்யுமிடத்தில் விவசாயிகள் வசதிக்காக, ஆயிரம் point of sale POS, விற்பனை முனையக் கருவிகளை அமைத்திருக்கிறார்கள்; சில நாட்களிலேயே 35000 விவசாயிகள் 5 இலட்சம் உர மூட்டைகளுக்கான தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்தி இருக்கிறார்கள்; இது மட்டுமல்ல, இவையனைத்துமே இரண்டே வாரங்களில் செய்யப்பட்டிருக்கிறது. இதில் சுவையான விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டு GNFCயின் உர விற்பனையோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு 27 சதவீதம் விற்பனையில் அதிகரிப்பு காணப்பட்டிருக்கிறது என்பது தான்.

என் சகோதர சகோதரிகளே, நமது பொருளாதார அமைப்பில், நமது வாழ்க்கை முறையில், முறை சாராத் துறை என்பது மிகப் பெரிய ஒன்று; இங்கே பெரும்பாலானோருக்கு உழைப்புக்கான ஊதியம், வேலைக்கான சம்பளம், ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது; இதன் காரணமாக தொழிலாளிகள் மீது அநீதி இழைக்கப்பட்டு வருவதை நாமனைவரும் அறிவோம். 100 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் 80 ரூபாயும், 80 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் 50 ரூபாயும் கிடைப்பதோடு, காப்பீடு, உடல்நலம் ஆகியவற்றின் வசதிகளிலிருந்து வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இப்போதோ ரொக்கமில்லா முறையில் பணம் அளிக்கப்படுகிறது. பணம் நேரடியாக வங்கிக் கணக்குகளைச் சென்று சேர்கிறது. ஒரு வகையில் முறைசாரா துறை, இப்போது முறை சார் துறையாக மாற்றம் கண்டு வருகிறது. அநீதிக்கு ஒரு முடிவு கட்டப்பட்டு வருகிறது. வெட்டு என்று சொல்லப்படும் பங்கு அளிக்கப்பட வேண்டிய அவல நிலை முடிவுக்கு வருகிறது. இதனால் தொழிலாளி, கைவினைஞர்கள் போன்ற ஏழை எளிய மக்களுக்கு முழுத் தொகையும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தவிர மற்ற பயன்களுக்கும் அவர்கள் சொந்தக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள்.

    நமது நாடு இளைஞரக்ள் பெரும்பான்மையாக உள்ள நாடு. தொழில்நுட்பம் என்பது நமக்குக் கைவந்த கலை. பாரதம் போன்ற ஒரு நாடு இந்தத் துறையில் அனைத்து நாடுகளைக் காட்டிலும் முன்னணியில் இருக்க வேண்டும். நமது இளைஞர்கள் start up மூலமாக கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். இது டிஜிட்டல் இயக்கத்துக்கான பொன்னான வாய்ப்பு. நமது இளைஞர்கள் புதிய புதிய கருத்துக்களையும், புத்தம்புதிய தொழில்நுட்பத்தோடும், நவீனமான வழிமுறைகளைத் துணை கொண்டும் இந்தத் துறைக்கு எத்தனை வலு சேர்க்க முடியுமோ, அதைச் சேர்க்க வேண்டும்; அதே சமயம், கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறும் இயக்கத்தோடு முழு சக்தியுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும் வேண்டும்.

    என் பாசம்மிகு நாட்டுமக்களே, உங்கள் ஆலோசனைகளைத் தாருங்கள், உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள் என ஒவ்வொரு மாதமும் மனதின் குரலுக்கு முன்பாக உங்களிடம் நான் வேண்டுவது வழக்கம்; இதன்படி பல்லாயிரக்கணக்கான கடிதங்கள் MyGovஇலும், narendramodiappஇலும் இந்த முறை ஆலோசனைகளாக வந்து குவிந்திருக்கின்றன; இவற்றில் 80-90 சதவீத ஆலோசனைகள் ஊழல் மற்றும் கருப்புப் பண ஒழிப்பு, நாணய விலக்கல் ஆகியவற்றோடு தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன. இவையனைத்தையும் பார்த்த பிறகு, இவற்றை மூன்று விதமாக பொதுவாக வகைப்படுத்தலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நாணய விலக்கல் காரணமாக குடிமக்களுக்கு என்னென்னவெல்லாம் சங்கடங்களும், கஷ்டங்களும் ஏற்பட்டு வருகிறது என்பது தொடர்பாக விரிவான முறையில் சிலர் எழுதியிருக்கிறார்கள். இன்னொரு வகையினரோ, இத்தனை அருமையான பணி, இத்தனை சிறப்பான வேலை, நாட்டு நலன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட இந்தக் காரியம், இத்தனை புனிதமான பணி நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் ஏய்ப்பு நடவடிக்கைகளையும், முறையற்ற செயல்பாடுகளையும் அரங்கேற்ற புதிய புதிய வழிகளை எப்படி கயவர்கள் கைகொள்கிறார்கள் என்பதைப் பற்றி இவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். வேறு வகையினரோ, நடந்திருக்கும் நாணய விலக்கலுக்கு முழு ஆதரவு அளித்ததோடு, இந்தப் போர் மேலும் தொடர வேண்டும் என்றும், ஊழல், கருப்புப் பணம் ஆகியன முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இதன் பொருட்டு எத்தனை தீவிரமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி எழுதியிருக்கிறாரகள்.

    என் நாட்டுமக்களான நீங்கள் இத்தனை கடிதங்களை எனக்கு எழுதி பேருதவி செய்திருக்கிறீர்கள், இதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் மக்களே. ”கருப்புப் பணத்தைக் கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த வழி பாராட்டுக்குரியது. குடிமக்களான எங்கள் அனைவருக்கும் சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பது உண்மை தான் என்றாலும், நாங்கள் அனைவரும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் களம் இறங்கியிருக்கின்றோம், இந்தப் போரில் நாங்கள் அளிக்கும் ஒத்துழைப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் ஊழல், கருப்புப் பணம் போன்றவற்றுக்கு எதிராக, இராணுவப் படையினர் போர் புரிவதைப் போல போரிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று குருமணி கேவல் அவர்கள் mygov தளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். குருமணி கேவல் அவர்கள் எழுதி இருப்பது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும் எதிரொலிக்கும் மக்கள் குரல். நாமனைவரும் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் துயரங்களை, சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, எந்த மனிதனுக்குத் தான் துயரமாக இது இருக்காது!! உங்களுக்கு எந்த அளவு துன்பமளிப்பதாக இது இருக்கிறதோ, அதே அளவு துன்பமும் துயரமும் எனக்கும் ஏற்படுகிறது!! ஆனால் ஒரு உத்தமமான இலக்கை அடைய, ஒரு உன்னதமான நோக்கத்துக்காக, தூய்மையான குறிக்கோளுக்காக நாமனைவரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்; கஷ்டங்களுக்கு இடையேயும், துக்கங்களுக்கும், துயரங்களுக்கும் இடையேயும் என் இனிய நாட்டுமக்கள் மனவுறுதிப்பாட்டோடு திடமாக எதிர்கொண்டு வருகின்றார்கள். இவர்கள் தாம் மெய்யான மாற்றமேற்படுத்தும் காரணிகள், agents of change. பல சிரமங்களைத் தாங்களே பொறுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், மக்களைத் தவறான திசையில் இட்டுச் செல்லும் முயற்சியில் ஈடுபட்ட சிலருக்கு கறாரான பதிலடி கொடுத்த நல்லோருக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னென்ன வகையான புரளிகள் பரப்பப்பட்டன!! ஊழல், கருப்புப் பணம் போன்றவற்றுக்கு எதிரான போருக்கு மதவாதச் சாயம் பூச பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன! ரூபாய்த் தாளில் எழுத்துப்பிழை இருக்கிறது என்று ஒருவர் புரளி பரப்பினார், வேறு ஒருவரோ உப்பு விலை ஏறி விட்டது என்று புரட்டை அவிழ்த்து விட்டார், இன்னொருவரோ 2000 ரூபாய் நோட்டும், 500, 100 ரூபாய் நோட்டும் கூட வழக்கொழிந்து போகவிருக்கின்றன என்று சரடு விட்டார்; ஆனால் ரகம் ரகமான ஏகப்பட்ட புரளிகளையும் புரட்டுக்களையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்கள் எதற்கும் அசைந்து கொடுக்காமல் எதிர்கொண்டார்கள் என்பதை நான் கண்கூடாகக் கண்டேன். இது மட்டுமல்லாமல், பலர் களத்தில் குதித்து, தங்கள் படைப்புத்திறனையும், புத்திக்கூர்மையையும் பயன்படுத்தி, புரளி பரப்புபவர்களின் முகத்திரைகளைக் கிழித்துப் போட்டார்கள், உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்.  நான் மக்களின் இந்த வல்லமைக்கு அனந்த கோடி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பாசம்மிகு நாட்டுமக்களே, இதை நான் தெளிவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொரு கணமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். 125 கோடி என் நாட்டு மக்கள் என்னோடு இணைந்திருக்கும் போது, சாத்தியமில்லாத ஒன்று என்று ஏதாவது இருக்க முடியுமா என்ன!? மகேசனான மக்களின் ஆசிகள் இருந்தால், அது ஈசனின் ஆசிக்கு ஈடல்லவா? நான் நாட்டுமக்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்களுக்கு என் வணக்கங்களை உரித்தாக்குகிறேன், ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான இந்த மஹாயாகத்தில் மக்கள் முழு உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஊழல், கருப்புப் பணம் ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்தப் போர் குறித்து அரசியல் கட்சிகளுக்காக, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நிதி தொடர்பாக, விரிவான முறையில் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். அவையில் அமர்வுகள் நடந்திருந்தால், கண்டிப்பாக இது தொடர்பான விவாதம் நடந்திருக்கும்.. அரசியல் கட்சிகளுக்கு அனைத்து வகையிலும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று யாரெல்லாம் புரளிகளைக் கிளப்புகிறார்களோ, அவர்கள் கூறுவது முற்றிலும் தவறு. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது, அது தனிநபராகட்டும், அமைப்பாகட்டும், அல்லது அரசியல் கட்சியாகட்டும், அனைவரும் சட்டத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும்,, அப்படிச் செய்தே ஆக வேண்டும். யாரெல்லாம் வெளிப்படையாக ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் ஆதரவாக செயல்பட முடியவில்லையோ, அவர்கள் அரசின் குறைகளைத் தேடிக் கொண்டிருப்பதில் தங்கள் முழுக் கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் அடிக்கடி விதிமுறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த அரசு மகேசர்களான மக்களுக்காக இயங்கும் அரசு. பொதுமக்களிடமிருந்து கருத்துக்களைத் தொடர்ந்து செவிமடுத்த வண்ணம் இருக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. எங்கே பொதுமக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படுகிறது, எந்த விதி காரணமாக சிரமங்கள் ஏற்படுகின்றன, அவற்றுக்கான தீர்வை எப்படி கண்டாக முடியும் – இதன் காரணமாகவே புரிந்துணர்வு கொண்ட இந்த மக்கள்நல அரசு, மக்களின் சௌகர்யங்களை மனதில் கொண்டு தேவைப்படும் அளவு விதிகளை மாற்றியமைக்கிறது; இதன் மூலம் மக்களின் சிரமங்கள் குறைய வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள். முதல் நாளான, 8ஆம் தேதி அன்றே, இந்தப் போர் நிகரானவர்களுக்கு இடையே நடைபெறும் போர் அல்ல என்று நான் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். 70 ஆண்டுகளாக முறைகேடுகளும் ஊழலும் மலிந்த கயமையான செயல்பாடுகளோடு எந்த மாதிரியான சக்திகள் இணைந்திருக்கின்றன, அவற்றின் ஆற்றல் எத்தகையது என்பதெல்லாம்  நன்கு தெரிந்து தான் இப்படிப்பட்ட நபர்களுக்கு எதிராக நான் போர் முரசு கொட்டினேன், அவர்களும் வாளாவிருக்கவில்லை, அரசை முறியடிக்க நாளொரு உத்தி எனப் புதிய புதிய குயுக்திகளைக் கைக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் புதிய புதிய உத்திகளைக் கையாளும் போது, நாமும் அவர்கள் தீய எண்ணத்தை முறியடிக்க புதிய புதிய வழிமுறைகளை கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. விடாக் கண்டன், கொடாக்கண்டன் என்ற வகையில் நடைபெற்று வரும் இந்தப் போரில், ஊழல் பெருச்சாளிகளுக்கும், கயமையான நடைமுறைகளுக்கும், கருப்புப் பணத்துக்கும் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.

மற்றொரு புறத்தில், என்ன மாதிரியான மோசமான நடைமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன, என்ன மாதிரியான புதிய வழிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறித்தும் பலரிடமிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன. என் பிரியமான நாட்டுமக்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை நான் இந்த வேளையில் காணிக்கையாக்குகிறேன். தினமும் புதிய புதிய நபர்கள் பிடிபட்டு வருகிறார்கள், ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன, அதிரடி சோதனைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன, பெரும்புள்ளிகள் சிக்கி வருகிறார்கள் என்பதை எல்லாம் நீங்கள் இப்போது டிவியிலும் செய்தித் தாள்களிலும் பார்த்து வருகிறீர்கள், இல்லையா? இது எல்லாம் எப்படி சாத்தியமாகி இருக்கிறது? நான் அந்த ரகசியத்தை உங்களுக்குக் கூறுகிறேன். ரகசியம் என்ன தெரியுமா? இந்தத் தகவல்கள் எல்லாம் எனக்கு மக்களான உங்களிடமிருந்து தான் கிடைத்து வருகின்றன. அரசு அமைப்பு மூலமாக கிடைக்கப் பெறும் தகவல்களை விடப் பல மடங்கு அதிகத் தகவல்கள் எளிய பொதுமக்களிடமிருந்து இப்போது கிடைத்து வருகின்றன, இதனால் தான் எங்களுக்கு அதிக அளவு வெற்றியும் கிட்டி வருகிறது. இவையனைத்தும் எளிய பொதுமக்களின் விழிப்புணர்வு காரணமாகவே நடைபெற்று வருகிறது. என் இனிய நாட்டின் விழிப்புணர்வு மிக்க குடிமக்கள், இப்படிப்பட்ட ஊழல் முடைநாற்றத்தில் ஊறித் திளைக்கும் பெருச்சாளிகளின் முகத்திரைகளைக் கிழித்துப் போட என்னவெல்லாம் அபாயங்களை எதிர்கொண்டு தகவல்களைத் தருகிறார்கள் என்பதை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இப்படிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்ள அரசு பிரத்யேகமாக ஒரு மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தவிர நீங்க MYGov இணையதள முகவரியிலும் அனுப்பி வைக்கலாம். அரசு நீங்கள் சுட்டிக் காட்டும் தீமைகள் போன்ற அனைத்து வகை தீமைகளுக்கு எதிராகவும் தோள் தட்டிப் போர் புரிய கச்சை கட்டியிருக்கிறது. உங்கள் ஒத்துழைப்பு நீங்காமல் இருக்கும் போது, போர் புரிவது மிக எளிதானது தான்.

கடிதம் எழுதிய மூன்றாவது வகைப்பட்டவர்களும் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். “மோதி அவர்களே, நீங்கள் அயர்ந்து விடாதீர்கள், தயங்கி விடாதீர்கள், எத்தனை தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் மேற்கொள்ளுங்கள் கவலையில்லை, ஆனால் பயணிப்பது என்று முடிவு செய்து பாதையில் கால் பதித்து விட்டால், முடிவை எட்டியே தீர வேண்டும், பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று எழுதியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கடிதங்களை எழுதி இருப்பவர்கள் அனைவருக்கும் நான் சிறப்பான வகையில் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்; ஏனென்றால் அவர்கள் கடிதங்களில் ஒரு வகையான நம்பிக்கையும் இருக்கிறது, ஆசிகளும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கம் தான், முடிவல்ல; இந்தப் போரில் நாம் வெற்றி பெற்றேயாக வேண்டும், அயர்ந்து போவது என்ற பேச்சுக்கே இடமில்லை; நின்று தாமதிப்பது என்ற எண்ணத்துக்கே வழியில்லை. எந்த விஷயத்தில் எனக்கு 125 கோடி நாட்டுமக்களின் பூரணமான நல்லாசிகள் இருக்கிறதோ, அந்த விஷயத்தில் முன்வைத்த காலைப் பின்னெடுப்பது என்ற நினைப்புக்கே இடமில்லை. நம் நாட்டில் 1988ஆம் ஆண்டில் பினாமி சொத்து தொடர்பான ஒரு சட்டம் இயற்றப்பட்டது, ஆனால் அதற்கான விதிகள் ஏதும் இயற்றப்படவில்லை, அது அறிவிக்கை செய்யப்படவுமில்லை, அப்படியே கிடப்பில் போடப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாங்கள் அதை தூசி தட்டி வெளியிலெடுத்தோம், அதை நன்கு மேம்படுத்தி, பட்டை தீட்டி, பினாமிச் சொத்துச் சட்டத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இனிவரும் காலகட்டத்தில் அந்தச் சட்டமும் தனது பணியை ஆற்றத் தொடங்கும். நாட்டு நலனுக்காக, மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதுவே எங்கள் முதன்மைப் பணியாக இருக்கும்.

என் நேசம் மிகுந்த நாட்டுமக்களே, கடந்த முறை மனதின் குரல் ஒலித்த போதே கூட, இத்தனை இடர்களுக்கு இடையேயும் கூட நமது விவசாயத் தோழர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு விதை நடவில் கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பதிவுகளை முறியடித்துச் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தேன். விவசாயத் துறை என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது, இது சுபமான அறிகுறி தான். இந்த நாட்டின் தொழிலாளியாகட்டும், விவசாயியாகட்டும், இளைஞனாகட்டும், இவர்கள் அனைவரின் கடும் முயற்சிகள் நாட்டுக்குப் புது மெருகேற்றி வருகின்றன. சில நாட்கள் முன்பாக உலக பொருளாதார மேடையில் பாரதம் பல துறைகளில் தனது பெயரை பெருமிதம் நிறைந்த வகையில் பொறித்திருக்கிறது. தனித்தனிக் குறியீடுகள் மூலமாக உலகதர வரிசைப் பட்டியலில் பாரதம் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது நம் திறன்மிகு நாட்டுமக்களின் தொடர் முயற்சிகளின் பலனாகவே அமைந்திருக்கிறது. தங்குதடையற்ற வர்த்தகம் செய்வது பற்றிய உலக வங்கி அளித்த அறிக்கையில் பாரதத்தின் தரநிலை உயர்ந்திருக்கிறது. நாம் பாரதத்தின் வர்த்தக செயல்பாடுகளை உலக செயல்பாடுகளுக்கு இணையாக ஆக்க விரைந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம், இதில் நமக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது. UNCTAD, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு அளித்திருக்கும் உலக முதலீட்டு அறிக்கைப்படி 2016-18 ஆண்டுகளுக்கான தலைசிறந்த எதிர்கால பொருளாதாரங்கள் பட்டியலில் பாரதம் 3ஆம் நிலையை எட்டியிருக்கிறது.  , உலகம் தழுவிய போட்டித்தன்மை குறித்த உலக பொருளாதார அமைப்பின் அறிக்கையில் பாரதம் 32 இடங்களைத் தாண்டி உயர்ந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டுக்கான உலகம் தழுவிய செயல்பாட்டுக் குறியீட்டில் நாம் 16 இடங்கள் முன்னேறி இருக்கிறோம், 2016ஆம் ஆண்டுக்கான உலக வங்கியின் கட்டமைப்புச் சேவைகள் செயல்பாட்டுக் குறியீட்டில் 19 இடங்கள் முன்னேறி இருக்கிறோம். வேறு பல அறிக்கைகளும் இதே மதிப்பீட்டையே சுட்டிக் காட்டுகின்றன. பாரதம் வேகமாக வளர்ந்து வருகிறது.

என் பாசமிகு நாட்டுமக்களே, இந்த முறை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீது நாட்டுமக்களின் கோபப்பார்வை படிந்தது. அனைத்து இடங்களிலும் நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்பான கோபம் வெளிப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணை தலைவர் ஆகியோர் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இத்தகைய சூழ்நிலையிலும் கூட, சில நல்ல விஷயங்கள் நடக்கும் போது, மனது சந்தோஷப்படுகிறது. நாடாளுமன்றத்தின் அமளிக்கு இடையேயும் கூட நடைபெற்ற ஒரு உன்னதமான பணி மீது நாட்டின் கவனம் திரும்பவில்லை. சகோதர சகோதரிகளே, மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு என்ற குறிக்கோளை மனதில் கொண்டு அரசின் முயற்சி அமைந்து வந்திருக்கிறது, இதோடு தொடர்புடைய ஒரு மசோதா இப்போது நிறைவேறியிருக்கிறது என்பதைக் கூறுகையில் எனக்கு சந்தோஷமும், பெருமிதமும் ஒருசேர ஏற்படுகிறது. இதை நிறைவேற்றியதற்காக மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு நான் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், நாட்டின் கோடானுகோடி மாற்றுத் திறனாளிகள் தரப்பில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகள் நலனில் இந்த அரசு முனைப்போடு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதன் வேகத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் உரிமையும், கௌரவமும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோளாக இருந்தது. Paralympics போட்டிகளில் 4 பதக்கங்களை வென்று, நமது முயற்சிகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகள் வலு சேர்த்தார்கள். அவர்கள் தங்கள் வெற்றிகள் வாயிலாக நாட்டுக்கு கௌரவத்தை மட்டும் ஈட்டித் தரவில்லை, தங்கள் திறமை வாயிலாக மக்களை ஆச்சரியக் கடலில் ஆழ்த்தவும் செய்திருக்கிறார்கள். நமது மாற்றுத் திறன் படைத்த சகோதர சகோதரிகளும் நாட்டின் ஏனைய குடிமக்களைப் போலவே நமது விலைமதிப்பில்லாத சொத்துக்கள், விலைமதிப்பில்லாத ஆற்றல்கள். மாற்றுத் திறனாளிகள் நலன் பொருட்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பது அதிகரித்திருக்கிறது. அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு வரையறை 4 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் வாயிலாக மாற்றுத் திறனாளிகள் கல்வி,, வசதிகள், புகார்கள் ஆகியவற்றுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் 4350 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, 352 கோடி ரூபாய் செலவில் 5,80,000 மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கு கருவிகள் அளிக்கப்பட்டது என்பதிலிருந்தே மாற்றுத் திறனாளிகளிடத்தில் அரசு எந்த அளவுக்கு புரிந்துணர்வோடு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணர்வினை அடியொற்றி ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது,. முன்பெல்லாம், மாற்றுத் திறனாளிகள் 7 நிலைகளில் வகைப்படுத்தப்பட்டார்கள், ஆனால் இப்போது சட்டம் இயற்றியிருப்பதன் வாயிலாக, இதை 21 விதமாக ஆக்கி இருக்கிறோம். இதில் 14 புதிய நிலைகள் மேலும் இணைக்கப் பட்டீருக்கின்றன. சில வகை மாற்றுத் திறனாளிகளை இதில் இணைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு முதன் முறையாக நீதி கிடைத்திருக்கிறது, வாய்ப்பு கிட்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, Thalassemia, Parkinson’s, பாதிப்புகளுக்கு உள்ளானவர்களையும், பிறப்பிலேயே குட்டையான உருவம் கொண்டவர்கள் போன்றவர்களையும் இணைத்திருக்கிறோம்.

என் இளைய  தோழர்களே, கடந்த சில வாரங்களாக விளையாட்டு மைதானம் நமக்கு அளித்து வரும் செய்திகள் நம்மை பெருமிதத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு இந்தியர் என்ற முறையில் நாம் பெருமிதம் கொள்வது என்பது இயல்பான ஒன்று தான். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4க்குப் பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. இதில் சில இளைய வீரர்களின் ஆட்டம் பாராட்டுக்குரியதாக அமைந்திருக்கிறது. நம் தேச இளைஞரான கருண் நாயர் 3 சதம் அடித்தார். KL Rahul 199 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் கேப்டன் விராட் கோஹ்லி நன்கு பேட்டிங் செய்தது மட்டுமல்லாமல், நன்றாகத் தலைமையும் தாங்கினார். இந்திய க்ரிக்கெட் அணியின் off spinnerஆன பந்து வீச்சாளர் ஆர். அஸ்வினின் பெயரை சர்வதேச க்ரிக்கெட் குழு ICC 2016ஆம் ஆண்டுக்கான Cricketer of the Year, மற்றும் Best Test Cricketer என அறிவித்தது. இவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் பலப்பல, என் நல்வாழ்த்துக்கள் ஏராளம். ஹாக்கித் துறையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருமையான, சிறப்பான செய்தி கிடைத்திருக்கிறது. ஜூனியர் ஹாக்கி அணி உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த சாதனையை படைத்த அனைத்து இளைய ஹாக்கி வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்கள். இந்தச் சாதனை பாரத ஹாக்கி அனியின் எதிர்காலத்துக்கான சுபமான அறிகுறியாக இருக்கிறது. கடந்த மாதம் நமது பெண் வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். பாரதத்தின் பெண்கள் ஹாக்கி அணி ஆசிய சாம்பியன் கோப்பையை வென்றார்கள் என்றால், சில நாட்கள் முன்பாக 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை போட்டியில் பாரதத்தின் பெண் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது. நான் க்ரிக்கெட் மற்றும் ஹாக்கி அணிகளைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் உள்ளம் நிறைந்த நாட்டுமக்களே, 2017ஆம் ஆண்டு புதிய உற்சாகமும், புதிய பொலிவும் உடையதாக மலரட்டும், உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேறட்டும், வளர்ச்சியின் புதிய சிகரங்களை நாம் கடந்து செல்வோம், அமைதியான வாழ்வு வாழ கடைநிலையில் இருக்கும் ஏழைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும், இப்படிப்பட்ட ஒரு ஆண்டாக நமது 2017ஆம் ஆண்டு முகிழ்க்கட்டும். மொட்டவிழ இருக்கும் 2017ஆம் ஆண்டுக்காக,  நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets

Media Coverage

PM Modi Praises Farmers For Taking India's Rich Mango Heritage To Global Markets
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister hold talks with Myanmar President U Min Aung Hlaing
June 01, 2026

The Prime Minister, Shri Narendra Modi, today held productive talks with the President of Myanmar, U Min Aung Hlaing.

The Prime Minister noted that India is honoured that President U Min Aung Hlaing chose India for his first foreign visit as President. He also expressed happiness that the President began his programme in India from Bodh Gaya with the blessings of Lord Buddha.

During the talks, the two leaders reviewed the full range of India-Myanmar relations and discussed ways to further strengthen bilateral cooperation.

The discussions covered avenues to deepen cooperation in trade, rare earths, healthcare, connectivity, heritage restoration and capacity building. The two sides also agreed to work closely in areas such as maritime security, cyber security and other sectors of mutual interest.

The Prime Minister underlined that Myanmar is vital to India’s ‘Neighbourhood First’, ‘Act East’ and Indo-Pacific policies, reaffirming the importance India attaches to its relations with Myanmar.

The Prime Minister wrote on X;

“Had a productive meeting with President U Min Aung Hlaing of Myanmar. We in India are honoured that he has chosen India for his first foreign visit as President. Equally gladdening is the fact that he began the visit from Bodh Gaya, with the blessings of Lord Buddha. We reviewed the full range of India-Myanmar relations. Myanmar is vital to India’s policies of ‘Neighbourhood First’, ‘Act East’ and Indo-Pacific.”

“Our talks covered ways to deepen cooperation in trade, rare earths, healthcare, connectivity, heritage restoration and capacity building. We also agreed to work closely in areas such as maritime security, cyber security and more.”