லக்னோவில் நடைபெற்ற விவசாயிகள் கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திரமோடி இன்று (26.10.2018) காணொளி மூலம் உரையாற்றினார்.
விவசாயிகளின் இந்தக் கூட்டம், புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதற்கும் விவசாயத்துறையில் மேலும் சிறந்த வாய்ப்புக்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச அரசு உணவுதானிய கொள்முதலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்திய முயற்சிகளுக்காக பிரதமர் பாராட்டு தெரிவித்தார். விவசாயிகள்தான் நாட்டை முன்னெடுத்துச்செல்பவர்கள் என்று அவர் கூறினார். 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதில் மத்திய அரசின் உறுதியை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த வகையில் விவசாய இடுப்பொருட்களின் விலையைக் குறைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார். வருங்காலத்தில் நாடெங்கிலும் உள்ள விவசாயப் பண்ணைகளில் பெரிய எண்ணிக்கையிலான சூரிய சக்தி பம்புகள் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். விஞ்ஞானத்தின் நன்மைகளை விவசாயத்திற்கு வழங்க அரசு பாடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வகையில் வாரணாசியில் அமைக்கப்பட்டு வரும் நெல் ஆராய்ச்சி மையம் ஒரு உதாரணம் என்றார் அவர்.
விவசாயத்தில் மதிப்புக்கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவம் பற்றி பிரதமர் பேசினார். உணவுப்பதனீட்டுத் துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் குறிப்பிட்டார். பசுமைப் புரட்சிக்குப்பிறகு தற்போது பால் உற்பத்தி, தேன் உற்பத்தி மற்றும் கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் அவர் கூறினார்.



