மேன்மைமிக்கவரே,
நான் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்திப்பதை எப்போதும் நினைவு கூரக்கூடிய அம்சமாக நான் உணர்கிறேன். பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பை இது அளித்துள்ளது.
நாம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இரு நாடுகளுக்கு இடையே வழக்கமாக பல்வேறு உயர்நிலைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் எங்களுடைய 23-வது உச்சி மாநாட்டிற்காக உங்களை வரவேற்க 140 கோடி இந்தியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேன்மைமிக்கவரே,
இது நமது சிறப்புமிக்க மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான உத்திசார்ந்த கூட்டாண்மையின் ஆழத்தையும் நோக்கத்தையும் பிரதிபலிக்கிறது. மிகவும் கடினமான சூழல்களில் கூட, இந்தியாவும் ரஷ்யாவும் எப்போதும் உறுதுணையாக இருக்கின்றன. நமது நெருங்கிய ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானது மட்டுமல்ல, உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை, வளமைக்கானதும் கூட.

மேன்மைமிக்கவரே,
தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் மோதல் தொடர்பாக நாம் வழக்கமாக விவாதித்துள்ளோம். அமைதியை ஏற்படுத்தக்கூடிய சமீபத்திய முயற்சிகள் அனைத்தையும் நாம் வரவேற்கிறோம். அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நோக்கி முன்னேறுவார்கள் என்று நாம் நம்புகிறோம். இந்த மோதலுக்கு தீர்வு காண நீடித்த அமைதியை நிலைநாட்ட வழிவகைகளைக் கண்டறிய வேண்டும். இது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் விருப்பமாகும்.
மேன்மைமிக்கவரே,
மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நான் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


