எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். தேசம் எவ்வாறு தன் முழுபலத்தோடு கோவிட் 19க்கு எதிராகப் போராடி வருகிறது என்பதை நாம் கண்டு வருகிறோம். கடந்த 100 ஆண்டுக்காலத்தின் மிகப்பெரிய பெருந்தொற்று இது; இந்த pandemicஆன இந்தப் பெருந்தொற்றுக்கு இடையே பாரதம், பல இயற்கைப் பேரிடர்களையும் உறுதிப்பாட்டோடு எதிர்கொண்டும் இருக்கிறது. இதற்கிடையே அம்ஃபான் புயல் வந்தது, நிஸர்க் புயல் வந்தது, பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, சிறிய-பெரிய பூகம்பங்கள் பல ஏற்பட்டன, நிலச்சரிவுகள் நிகழ்ந்தன. கடந்த 10 நாட்கள் முன்பாகத் தான் மீண்டும் இரண்டு பெரிய புயல்களை நாடு எதிர்கொள்ள வேண்டி வந்தது. மேற்குக் கரையோரத்தில் தாஊ தே புயலும், கிழக்குக் கரைப்பகுதியில் யாஸ் புயலும் வந்தன. இந்த இரண்டு சூறாவளிகளும் பல மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தின. நாடும் நாட்டுமக்களும் இவற்றை முழுபலத்தோடு எதிர்கொண்டு, குறைந்தபட்ச உயிரிழப்புக்களோடு தப்பினார்கள். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் அதிகபட்ச உயிர்களை நம்மால் காப்பாற்ற முடிந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. இடர்கள் நிறைந்த இந்தக் கடினமான-அசாதாரணமான சூழ்நிலையில், புயலால் பாதிப்படைந்திருக்கும் அனைத்து மாநில மக்களும் தங்களுடைய நெஞ்சுரத்தை வெளிப்படுத்தி இருப்பது, இந்த சங்கடமான வேளையைப் பொறுமையோடும், ஒழுங்குமுறையோடும் எதிர்கொண்டிருப்பது……இதன் பொருட்டு நான் குடிமக்கள் அனைவருக்கும் மரியாதை கலந்த, என் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாரெல்லாம் தாமாகவே முன்வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டார்களோ, அப்படிப்பட்டவர்கள் அனைவரையும் எத்தனை பாராட்டினாலும் அது குறைவு தான். அவர்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். மத்திய-மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புக்களும் இணைந்து இந்தப் பேரிடரை எதிர்கொள்ள ஒன்றுபட்டார்கள். தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேரிடர்களின் இழப்பைச் சந்தித்தவர்கள் அனைவருக்கும் இந்த சிரமமான கட்டத்தில் நாமனைவரும் உற்ற துணையாக இருக்கிறோம்.

எனதருமை நாட்டுமக்களே, சவால் எத்தனை பெரியதாக இருக்கிறதோ, அதற்கு இணையான பலத்தோடு, பாரதத்தின் மனவுறுதிப்பாடும் விளங்குகிறது. தேசத்தின் சமூக சக்தியும், சேவையுணர்வும் தாம், தேசத்தை ஒவ்வொரு புயலிலிருந்தும் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள வீரர்கள் அனைவரும், தங்களைப் பற்றிக் கவலையேதும் படாமல், இரவுபகலாகப் பணியாற்றினார்கள், பணியாற்றியும் வருகிறார்கள். இவை அனைத்திற்கும் இடையே, கொரோனாவின் இரண்டாவது அலையோடு போராடுவதில் மேலும் பலருடைய மிகப்பெரிய பங்களிப்பும் இருக்கிறது. என்னிடத்தில் மனதின் குரலின் பல நேயர்கள் நமோ செயலியிலும், கடிதங்கள் வாயிலாகவும், இந்த வீரர்கள் பற்றியும் நான் பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

நண்பர்களே, இரண்டாவது அலை வந்த போது, திடீரென்று ஆக்சிஜனுக்கான தேவை பல மடங்கு அதிகரித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மருத்துவப் பயன்பாட்டு ஆக்சிஜனை, தேசத்தின் அனைத்துத் தொலைவான பாகங்கள் வரை கொண்டு சேர்ப்பது மட்டுமே ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆக்சிஜன் டேங்கர்கள் விரைவாகச் சென்று சேர வேண்டும். சின்னதாக ஒரு தவறு கூட ஏற்படுமேயானால், அதனால் பெரிய ஒரு வெடிப்பு ஏற்படும் ஆபத்தும் உண்டு. தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் ஆக்சிஜனைத் தயாரிக்கும் பல ஆலைகள் தேசத்தின் கிழக்குப் பகுதிகளில் இருக்கின்றன, இவற்றை அங்கிருந்து பிற மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க பல நாட்களாகி விடும். இந்த நிலையில் தேசத்தின் முன்பாக எழுந்த இந்த சவாலில் உதவியவர்கள், குளிர்ந்த நிலையில் இருக்கும் cryogenic tanker இயக்கும் ஓட்டுநர்கள், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், இந்திய விமானப்படை பைலட்டுகள் ஆகியோர். இப்படி அநேகம் பேர்கள், போர்க்கால விரைவோடு பணியாற்றி, ஆயிரக்கணக்கான-இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்கள். இன்றைய மனதின் குரலில், நம்மோடு இப்படிப்பட்ட ஒரு நண்பர் இணைந்திருக்கிறார் – உத்தரப் பிரதேசத்தின் ஜோன்பூரில் வசிக்கும் தினேஷ் உபாத்யாயா அவர்கள்……

மோதி ஜி – தினேஷ் ஜி, வணக்கம்.

தினேஷ் உபாத்யாயா ஜி – வணக்கம் ஐயா.

மோதி ஜி – முதன்மையா, நீங்க உங்களைப் பத்திச் சொல்லுங்களேன்.

தினேஷ் உபாத்யாயா ஜி – ஐயா என் பேரு தினேஷ் பாபுல்நாத் உபாத்யாயா. நான் ஜோன்பூர் மாவட்டத்தின் ஜமுவா பகுதியைச் சேர்ந்த ஹஸன்புர் கிராமத்தில வசிக்கறேன்.

மோதி ஜி – உத்திர பிரதேசம், சரியா?

தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. என் குடும்பத்தில எங்க அப்பா அம்மா, என் மனைவி, பிறகு ஒரு மகனும் ரெண்டு மகள்களும் இருக்காங்க.

மோதி ஜி – நீங்க என்ன செய்யறீங்க?

தினேஷ் ஜி – ஐயா நான் ஆக்சிஜன் டேங்கர் ஓட்டறேன், திரவ ஆக்சிஜன் டேங்கர்.

மோதிஜி – பிள்ளைங்க படிப்பு எல்லாம் நல்லாப் போயிட்டு இருக்கில்லையா?

தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. பிள்ளைங்க நல்லா படிச்சுக்கிட்டு இருக்காங்க.

மோதி ஜி – இணையவழி படிப்பு சரியா போயிட்டு இருக்கா?

தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. நல்லவிதமா போயிட்டு இருக்கு. என் பையன் பொண்ணுங்க மூணு பேருமே இணையவழியில தான் படிச்சுட்டு இருக்காங்க. நான் சுமாரா 15லேர்ந்து 17 ஆண்டுகளா இந்த ஆக்சிஜன் டேங்கரை ஓட்டிக்கிட்டு வரேங்கய்யா.

மோதி ஜி – அது சரி. அப்படீன்னா இந்த 15-17 ஆண்டுகளா நீங்க ஆக்சிஜன் டேங்கரோட ஓட்டுநர் மட்டுமில்லை, ஒரு வகையில இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாத்திட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க.

தினேஷ் ஜி – ஐயா, எங்க வேலையே எப்படீன்னா, நாங்க கொண்டு போகற ஆக்சிஜனை குறிப்பிட்ட இடத்தில கொண்டு சேர்த்து, எங்க டேங்கர் காலியான பிறகு ஒரு அலாதியான சந்தோஷமா இருக்குங்கய்யா. எங்க ஆக்சிஜன் டேங்கர் நிறுவனமான ஐனாக்ஸ் நிறுவனம் எங்களை எல்லாம் ரொம்ப அக்கறையோட கவனிச்சுக்கறாங்க.

மோதி ஜி – ஆனா இப்ப கொரோனா காலத்தில உங்க பொறுப்பு மேலும் அதிகமாயிருச்சு இல்லை?

தினேஷ் ஜி – ஆமாங்கய்யா, ரொம்பவே அதிகமாயிருச்சு.

மோதி ஜி – நீங்க உங்க ட்ரக்கோட ஓட்டுநர் இருக்கையில அமர்ந்திருக்கும் போது உங்க மனசுல என்ன உணர்வு ஓடும்? முன்ன நீங்க ஓட்டினதோட ஒப்பிடுகையில இப்ப அனுபவம் வித்தியாசமா இருக்கா? நிறைய நெருக்கடியா இருக்குமில்லை? மனதளவுல நிறைய அழுத்தம் இருக்குமோ? குடும்பத்தார் பத்தின கவலை, கொரோனா சூழல், மனிதர்கள் தரப்பிலேர்ந்து அழுத்தம்…… எப்படி உணர்றீங்க சொல்லுங்க.

தினேஷ் ஜி – ஐயா எங்களுக்கு எது பத்தின கவலையும் இருக்காது. எங்க சிந்தை எல்லாம் செய்யற வேலையில மட்டுமே கருத்தா இருக்கும், நேரத்துக்குள்ள நம்ம ஆக்சிஜனைக் கொண்டு சேர்த்து, அதனால யாருடைய உயிராவது காப்பாத்தப்படுதுன்னா, இதுவே எங்களுக்குப் பெரிய கௌரவமான விஷயங்கய்யா.

மோதி ஜி – ரொம்ப சிறப்பா நீங்க உங்க உணர்வுகளை வெளிப்படுத்தினீங்க. அப்புறம் இன்னொரு விஷயம்….. இப்ப இந்தப் பெருந்தொற்று நிலவற இந்த வேளையில, உங்க சேவையோட மகத்துவத்தை மக்கள் நேரடியா பார்க்கறாங்க….. முன்ன ஒருவேளை இந்த அளவுக்கு புரிஞ்சுக்காம இருந்திருக்கலாம்….. ஆனா இப்ப மக்கள் புரிஞ்சுக்கறாங்க அப்படீங்கற போது, உங்களைப் பத்தியும், உங்க வேலை பத்தியும் அவங்களோட பார்வையில மாற்றம் ஏதேனும் ஏற்பட்டிருக்கா?

தினேஷ் ஜி – கண்டிப்பாய்யா. முன்ன எல்லாம் ஆக்சிஜன் ஓட்டுனர்களான நாங்க அங்க இங்க போக்குவரத்து நெரிசல்ல சிக்கிக்கிட்டு இருப்போம்; ஆனா இன்னைய வேளையில, நிர்வாகம் எங்களுக்கு ரொம்பவே உதவிகரமா இருக்காங்க. நாங்க எங்க, எப்ப போனாலும், எத்தனை சீக்கிரமா போக முடியுமோ போயி, அங்க உயிர்களைக் காப்பாத்தணும்னு மனசுல ஒரு உத்வேகம் இருக்குதுங்க ஐயா. சாப்பாடு-தண்ணி எது கிடைக்குதோ இல்லையோ, என்ன கஷ்டம் இருந்தாலும், மருத்துவமனைக்குப் போயாகணும்ங்கற உறுதி மனசுல இருக்கும், நாங்க அங்க போய் சேர்ந்தவுடனே, மருத்துவமனைக்காரங்க, அங்க அனுமதிக்கப்பட்டிருக்கறவங்க குடும்பத்தார் எல்லாம் வெற்றின்னு விரல்கள்ல காட்டுவாங்க.

மோதி ஜி – ஆமாமா, வெற்றின்னு தெரிவிக்க V சின்னத்தைக் காமிப்பாங்க இல்லையா?

தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. Vன்னு காமிப்பாங்க, இல்லை சொல்லுவாங்க. எங்களுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும், அப்பாடா, நாம நம்ம வாழ்க்கையில ஏதோ நல்லதைச் செய்திருக்கறதாலேயே இப்படி ஒரு சேவையை செய்யறதுக்கான சந்தர்ப்பம் வாய்ச்சிருக்குன்னு நினைச்சுக்குவேன்.

மோதிஜி – எல்லாக் களைப்பும் பறந்து போயிடும் இல்லை?

தினேஷ் ஜி – ஆமாங்கய்யா, சந்தேகமே இல்லாம.

மோதி ஜி – பிறகு வீட்டுக்கு வந்த பிறகு பசங்க கிட்ட எல்லாத்தையும் பகிர்ந்துப்பீங்களா?

தினேஷ் ஜி – இல்லைங்கய்யா. எங்க பிள்ளைங்க கிராமத்தில வசிக்கறாங்க. நான் இங்க INOX Air Productஇல, ஓட்டுநரா இருக்கேன். 8-9 மாதங்களுக்குப் பிறகு தான் வீட்டுக்குப் போவேன்.

மோதி ஜி – ஆனா ஃபோன்ல பிள்ளைங்க கூட பேசுவீங்க இல்லையா?

தினேஷ் ஜி – ஆமாங்க, கண்டிப்பா பேசுவேங்கய்யா.

மோதி ஜி – அப்பா, கொஞ்சம் பார்த்து கவனமா இருங்கப்பான்னு அவங்க சொல்லுவாங்க இல்லை?

தினேஷ் ஜி – ஆமாங்கய்யா. அப்பா, வேலை பாருங்க, ஆனா பாதுகாப்பா இருங்கப்பா, உங்களையும் கவனிச்சுக்குங்க அப்படீம்பாங்க. எங்களோட மான்காவ் ப்ளாண்டும் இருக்கு. INOX எங்களுக்கு நிறையவே உதவி செய்யறாங்க.

மோதி ஜி – சரி தினேஷ் அவர்களே, உங்க கூட பேசினது எனக்கு ரொம்பவே நல்லா இருந்திச்சு. நீங்க சொல்றதைக் கேட்ட பிறகு, இந்தக் கொரோனாவுக்கு எதிரான போரில எப்படி எப்படி எல்லாம், எந்த வகையா எல்லாம் மனிதர்கள் பணி செய்திட்டு வறாங்க அப்படீன்னு மக்களுக்குத் தெரிய வரும். நீங்க ஒன்பது மாதங்கள் வரை கூட உங்க பிள்ளைங்களை சந்திக்காம இருக்கீங்க, குடும்பத்தாரை சந்திக்கறதில்லை, மக்களோட உயிர்களைக் காப்பாத்தறதுல மட்டுமே ஈடுபட்டு வர்றீங்க. இதை நாடு கேட்கும் போது, இந்தப் போர்ல நாம கண்டிப்பா வெற்றி பெறுவோம் அப்படீங்கற உறுதிப்பாடும், நம்பிக்கையும், பெருமையும் ஏற்படும்; ஏன்னா தினேஷ் உபாத்யாயா மாதிரியான இலட்சக்கணக்கான மனிதர்கள், தங்களோட உயிரைக் கொடுத்து சேவை செய்திட்டு இருக்காங்க அப்படீங்கறதால.

தினேஷ் ஜி – ஐயா, நாம என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா இந்தக் கொரோனாவை தோக்கடிச்சே தீருவோங்கய்யா.

மோதி ஜி – சரி தினேஷ் அவர்களே, உங்களை மாதிரியானவங்களோட உணர்வு தான் தேசத்தோட பலம். ரொம்ப ரொம்ப நன்றி தினேஷ் அவர்களே. உங்க பிள்ளைங்க மூணு பேருக்கும் என்னோட ஆசிகளைத் தெரிவியுங்க.

தினேஷ் ஜி – கண்டிப்பா ஐயா. வணக்கம்.

மோதி ஜி – நன்றி.

தினேஷ் ஜி – வணக்கங்கய்யா.

மோதி ஜி – நன்றி.

நண்பர்களே, தினேஷ் அவர்கள் கூறியது போல, உண்மையிலேயே ஒரு டேங்கர் ஓட்டுநர் ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு மருத்துவமனை சென்றடையும் போது, கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதராகவே அவர் காட்சியளிக்கிறார். இந்தப் பணி எத்தனைப் பொறுப்பானது, எத்தனை மன அழுத்தம் தரவல்லது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நண்பர்களே, சவால்கள் நிறைந்த இந்த வேளையில், ஆக்சிஜனைக் கொண்டு சேர்ப்பதை சுலபமாக்க, இந்திய ரயில்வே முன்வந்திருக்கிறது. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், ஆக்சிஜன் ரயிலானது, சாலைகளில் செல்லும் ஆக்சிஜன் டேங்கரை விட அதிக விரைவாகவும், அதிக அளவிலும் ஆக்சிஜனை தேசத்தின் மூலைகளுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது. ஒரு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸானது, முழுக்கமுழுக்க பெண்களாலேயே இயக்கப்படுகிறது என்பதை அறியும் போது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் பெருமையாக இருக்கும். இவர்களுக்கு மட்டுமா, இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை ஏற்படுத்தும். ஆக்சிஜன் எக்ஸ்பிரஸின் ஒரு லோகோ பைலட்டான ஷிரிஷா கஜினி அவர்களை மனதின் குரலுக்கு நான் வரவேற்றிருக்கிறேன்.

மோதி ஜி – ஷிரிஷா அவர்களே வணக்கம்.

ஷிரிஷா – வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?

மோதி ஜி – நான் நல்லாவே இருக்கேன். சரி, ஷிரிஷா அவர்களே, நீங்க ரயில்வே பைலட்டா பணியாற்றிக்கிட்டு இருக்கீங்க, முழுக்க முழுக்க உங்களோட பெண்களின் குழு தான் ஆக்சிஜன் எக்ஸ்ப்ரெஸை இயக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன். ஷிரிஷா அவர்களே, கொரோனா காலகட்டத்தில நீங்க மிகச் சிறப்பான பணியாற்றிக்கிட்டு வர்றீங்க. இந்த வேளையில உங்களை மாதிரி பல பெண்கள், தாங்களே முன்வந்து, கொரோனாவோட போரிட தேசத்துக்கு பலம் அளிச்சிருக்காங்க. நீங்களும் பெண்களோட சக்திக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டா விளங்கறீங்க. சரி, உங்களுக்கு இப்படி செயல்பட எங்கிருந்து உத்வேகம் கிடைக்குதுன்னு நானும் சரி, தேசமும் சரி தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம், சொல்லுங்களேன்!

ஷிரிஷா ஜி – சார், என்னோட உத்வேகமே என் அப்பா-அம்மா தான் சார். எங்கப்பா ஒரு அரசுத்துறை ஊழியர் சார். உள்ளபடியே எனக்கு ரெண்டு மூத்த சகோதரிகள் உண்டு. எல்லாரும் பெண்களாவே இருந்தாலும், எங்கப்பா எங்களை வேலை பார்க்க ரொம்ப ஊக்கப்படுத்துவாரு. என் மூத்த சகோதரி அரசு வங்கியில பணி புரியறாங்க, நான் ரயில்வேயில பணி புரியறேன். எங்க பெற்றோர் தான் எங்களுக்கு ஊக்கமே.

மோதி ஜி – சரி ஷிரிஷா அவர்களே, சாதாரண நாட்கள்லயும் நீங்க ரெயில்வேயுக்கு உங்க சேவைகளை அளிச்சு வந்திருக்கீங்க. ரயிலை இயல்பா இயக்கியிருக்கீங்க ஆனா, ஒரு புறம் ஆக்சிஜனுக்கு இத்தனை தேவை இருக்கற நிலையில, இதைக் கொண்டு போகறது பெரிய பொறுப்பான வேலை இல்லையா, அதிக பொறுப்பா நீங்க உணர்றீங்களா? வாடிக்கையான சரக்குகளைக் கொண்டு போகறது வேற விஷயம், ஆனா ஆக்சிஜன் ரொம்பவே நாசூக்கானது இல்லையா, உங்க அனுபவம் என்ன?

ஷிரிஷா – இந்த வேலையை செய்யறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சார். ஆக்சிஜன் ஸ்பெஷல்னு வரும் போது எல்லாத்திலயும் கவனம் செலுத்துவோம் – பாதுகாப்பு, உரு அமைவு, கசிவு இருக்கான்னு பல கோணங்கள். அடுத்ததா, இந்திய ரயில்வேயும் ஒத்துழைப்பா இருக்காங்க சார். ஆக்சிஜனைக் கொண்டு போக எனக்கு green path, பசுமைப் பாதை அமைச்சுக் கொடுத்திருக்காங்க, இந்த வண்டியை மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில இயக்கலாம். இந்த அளவுக்கு ரயில்வேயும் பொறுப்பேத்துக்கிட்டு இருக்காங்க, நானும் பொறுப்பை மேற்கொண்டிருக்கேன் சார்.

மோதி ஜி – ஆஹா…. சரி ஷிரிஷா அவர்களே உங்களுக்கு பல பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன், உங்க தகப்பனார்-தாயாருக்கு சிறப்பான வகையில என் வணக்கங்களைத் தெரிவிக்கறேன். இவங்க தான் தங்களோட மூன்று பெண்களையும் உத்வேகப்படுத்தி, இந்த அளவுக்கு முன்னேத்தியிருக்காங்க, இப்படி ஒரு தன்னம்பிக்கையை அளிச்சிருக்காங்க. இந்த வகையில நாட்டுக்கு சேவை செய்துவர்ற, உத்வேகத்தோட பணியாற்றற அனைத்து சகோதரிகளுக்கும் சரி, அவங்களைப் பெற்றவங்களுக்கும் நான் என் வணக்கங்களைத் தெரிவிக்கறேன். ரொம்ப ரொம்ப நன்றி ஷிரிஷா அவர்களே.

ஷிரிஷா ஜி – நன்றி சார். தேங்க்யூ வெரி மச். உங்க ஆசீர்வாதம் வேணும் சார் எனக்கு.

மோதி ஜி – ஆண்டவனோட ஆசிகள் என்னைக்கும் உங்களுக்குக் கிடைக்கட்டும்மா. உங்க அப்பா அம்மாவோட ஆசிகள் நிரந்தரமா உங்களோட இருக்கட்டும்மா. ரொம்ப நன்றி.

ஷிரிஷா ஜி – நன்றி சார்.

நண்பர்களே, நாம் இப்போது ஷிரிஷா அவர்கள் கூறியதைக் கேட்டோம். அவருடைய அனுபவங்கள் உத்வேகம் அளிக்கின்றன, உணர்ச்சியில் ஆழ்த்துகின்றன. உள்ளபடியே இந்தப் போர் எத்தனை பெரியதென்றால், இதில் ரயில்வே துறையைப் போலவே, நமது தேசம் நீர், நிலம், வானம் என மூவழிகளிலும் பணியாற்றி வருகிறது. ஒருபுறத்தில் காலியாக இருக்கும் டேங்கர்கள் முதல், ஆக்சிஜன் உற்பத்திக் கருவிகள் வரை இந்திய விமானப் படை விமானங்கள் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகின்றன. மறுபுறத்தில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை உருவாக்குவதற்கான பணிகள் முழுமை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், cryogenic டேங்கர்கள் எனப் பலவும், தேசத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த வகையில் கடற்படையாகட்டும், விமானப்படையாகட்டும், தரைப்படையாகட்டும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம்-DRDOவாகட்டும், நமது பல அமைப்புகளும் இணைந்து பணியாற்றுகின்றன. நமது பல விஞ்ஞானிகள், தொழில்துறை வல்லுநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவரின் பணிகளைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் ஆவல் நாட்டுமக்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்மிடையே இந்திய விமானப் படையின் க்ரூப் கேப்டன் பட்நாயக் அவர்கள் இருக்கிறார்.

மோதி ஜி – பட்நாயக் ஜி, ஜெய் ஹிந்த்.

க்ரூப் கேப்டன் – சார், ஜெய் ஹிந்த் சார். நான் க்ரூப் கேப்டன் ஏ.கே. பட்நாயக், இந்திய விமானப்படையின் ஹிண்டன் நிலையத்திலேர்ந்து பேசறேன் சார்.

மோதி ஜி – பட்நாயக் அவர்களே, கொரோனாவுக்கு எதிரான போர்ல, நீங்க மிகப்பெரிய பொறுப்பை நிர்வாகம் செய்திட்டு வர்றீங்க. உலகெங்கிலிருமிருந்து டேங்கர்களைக் கொண்டு வர்றது, அவற்றை இங்க கொண்டு சேர்க்கறதுன்னு. இராணுவத்தைச் சேர்ந்தவர்ங்கற முறையில, நீங்க ரொம்ப வித்தியாசமான வேலைய செய்திருக்கீங்க. மோதல்-சுட்டு வீழ்த்தல்னு சுறுசுறுப்பா இயங்கறது ஒண்ணு, ஆனா இன்னைக்கு நீங்க உயிரைக் காத்தல்ங்கற வகையில பரபரப்பா இயங்கறீங்க. இந்த அனுபவம் எப்படிப்பட்டது?

க்ரூப் கேப் – சார், இந்த சங்கடமான வேளையில நம்ம நாட்டுமக்களுக்கு உதவ முடிஞ்சா, இதை விட எங்களுக்கு வேற என்ன பெரிய பேறு இருக்க முடியும் சார்!! நாங்க மேற்கொள்ளும் செயல் திட்டம், இவற்றை நாங்க ரொம்ப சிறப்பா செயல்படுத்திக்கிட்டு இருக்கோம் சார். எங்களோட பயிற்சி மற்றும் துணை சேவைப்பிரிவுகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கறாங்க. மிகப்பெரிய விஷயம் என்னென்னா, எங்களுக்கு இதில ரொம்ப பெரிய நிலையிலான நிறைவு கிடைக்கறது தான்; இதன் காரணமாவே எங்களால தொடர்ச்சியா செயலாற்ற முடியுது.

மோதி ஜி – கேப்டன், இப்ப நீங்க மேற்கொண்ட முயற்சிகள், அதுவும் ரொம்பவே குறைவான நேரத்தில செய்ய வேண்டி இருந்திச்சு. இதைப் பத்தி உங்க உணர்வுகள் என்ன?

க்ரூப் கேப் – சார், கடந்த ஒரு மாத காலமா நாங்க தொடர்ந்து ஆக்சிஜன் டேங்கர்கள், திரவ ஆக்சிஜன் கண்டெய்னர்களை, உள்நாட்டு இடங்கள் மற்றும் அயல்நாட்டு இடங்கள் – இரண்டு இடங்கள்லேர்ந்தும் எடுத்துகிட்டுப் பயணிக்கறோம். சுமார் 1600க்கும் மேற்பட்ட இப்படிப்பட்ட தனி விமானங்களை இந்திய விமானப்படை இயக்கி முடிச்சிருக்கு. 3000த்திற்கும் மேற்பட்ட மணிநேரத்துக்கு நாங்க பயணம் செஞ்சிருக்கோம். சுமார் 160 சர்வதேச செயல்திட்டங்களை நாங்க செஞ்சு முடிச்சிருக்கோம். முன்ன எல்லாம் ஆக்சிஜன் டேங்கர்கள் உள்நாட்டுல 2 அல்லது 3 நாட்கள்ல கிடைச்சு வந்த நிலை மாறி, இப்ப இவற்றை நாங்க 2 அல்லது 3 மணி நேரத்துக்கு உள்ளாக, தேவையான இன்னொரு இடத்துக்கு இதன் காரணமா கொண்டு சேர்க்க முடியுது சார். மேலும் சர்வதேச செயல்திட்டங்கள்லயும் கூட, 24 மணிநேரம் தொடர்ந்து பணி செய்யறதுல, விமானப் படை முழுக்க இதில ஈடுபட்டிருக்கு. எத்தனை விரைவா அதிகமான டேங்கர்களைக் கொண்டு வர முடியுமோ, தேசத்துக்கு உதவ முடியுமோ, நாங்க செய்யறோம் சார்.

மோதி ஜி – கேப்டன், சர்வதேச அளவுல நீங்க எங்க எங்க எல்லாம் போக வேண்டி இருந்திச்சு?

க்ரூப் கேப் – சார், உத்திரவிட்ட மிகக் குறைவான நேரத்துக்குள்ளா, நாங்க சிங்கப்பூர், துபாய், பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து - இந்த இடங்கள் அனைத்திலயும் பலரக இந்திய விமானப்படைக் குழுக்கள், IL-76, C-17 மற்றும் பிற விமானங்கள் C-130 எல்லாம் மிகக் குறைந்த காலத்தில இந்தத் திட்டங்களுக்காகப் பயணப்பட்டிச்சு. எங்க பயிற்சி மற்றும் உற்சாகம் காரணமா எங்களால இந்த செயல்திட்டங்களை வெற்றிகரமா நிறைவேற்ற முடிஞ்சிச்சு சார்.

மோதி ஜி – இங்க பாருங்க, நீராகட்டும், நிலமாகட்டும், வான்பரப்பாகட்டும்…. நம்மோட இராணுவ வீரர்கள் எல்லாருமே கொரோனாவுக்கு எதிரான போர்ல ஈடுபட்டிருக்காங்கன்னு இந்த முறை தேசம் தாராளமா பெருமிதம் அடையலாம். கேப்டன் நீங்களும் ரொம்ப சிறப்பா உங்க கடமையை நிறைவேத்தி இருக்கீங்க, உங்களுக்கு என் பல பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன்.

க்ரூப் கேப் – சார், தேங்க்யூ சோ மச் சார். முழு அர்ப்பணிப்பு உணர்வோட நாங்க எல்லாரும் முயற்சிகள்ல ஈடுபட்டு வர்றோம் சார். என் பொண்ணும் என் கூட இருக்கா சார், அவ பேரு அதிதி.

மோதி ஜி – ஆஹா. பலே.

அதிதி – வணக்கம் மோதி ஜி.

மோதி ஜி – வணக்கம் செல்லம் வணக்கம். அதிதி, உங்களுக்கு என்ன வயசாகுது?

அதிதி – எனக்கு 12 வயசாகுது, நான் 8ஆம் வகுப்புல படிக்கறேன்.

மோதி ஜி – அப்பா வெளியில போகும் போது சீருடை அணிஞ்சிருப்பாங்களே!!

அதிதி – ஆமா. அவங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க எத்தனை மகத்தான வேலையை செய்யறாங்க!! அவங்க கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு பெரிய அளவுல உதவிட்டு இருக்காங்க, இத்தனை நாடுகள்லேர்ந்து ஆக்சிஜன் டேங்கர்களையும், கண்டெய்னர்களையும் கொண்டு வர்றாங்க.

மோதி ஜி – ஆனா பொண்ணே, நீங்க தான் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுவீங்க இல்லை?

அதிதி – ஆமா, நான் ரொம்பவே மிஸ் பண்றேன். அவங்களால இப்ப எல்லாம் அதிகமா வீட்டுல இருக்க முடியறதே இல்லை; ஏன்னா ஏகப்பட்ட சர்வதேச பயணங்கள்ல போறாங்க, கண்டெய்னர்களையும், டேங்கர்களையும், ஏன், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளையும் கூட கொண்டுட்டு வர்றாங்க. அப்பத்தானே கொரோனாவால பாதிக்கப்பட்டவங்களுக்கு நேரத்தில ஆக்சிஜன் கிடைச்சு, அவங்களால உயிர் பிழைச்சிருக்க முடியும்!!

மோதி ஜி – சரி பொண்ணே, ஆக்சிஜன் காரணமா மக்களோட உயிரைக் காப்பாத்தற பணி பத்தி இப்ப எல்லாருக்கும் நல்லாத் தெரிஞ்சிருக்கு.

அதிதி – ஆமா.

மோதி ஜி – உங்க அப்பா ஆக்சிஜன் கொண்டு சேர்க்கற சேவையில ஈடுபட்டிருக்காங்கன்னு உங்க நட்பு வட்டத்தில, உங்க கூட படிக்கற மாணவர்களும் தெரிஞ்சுக்கும் போது, உங்களையும் ரொம்ப மதிப்போட பார்ப்பாங்க இல்லை?

அதிதி – ஆமா, என் நண்பர்கள் எல்லாரும், உன் அப்பா இத்தனை முக்கியமான வேலை பார்க்கறாங்க, உனக்கு பெருமையா இருக்கும் இல்லையான்னு சொல்லும் போது, எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கும். என் குடும்பத்தார் எல்லாரும்…. எங்கம்மாவோட அப்பா அம்மா, எங்க அப்பாவோட அம்மா எல்லாருக்குமே எங்கப்பாவைப் பத்தி ரொம்பவே பெருமை. எங்கம்மா, இரவு பகலா சேவை செய்யற மருத்துவர்கள், இராணுவத்தார் எல்லாரும், எங்கப்பாவோட ஸ்க்வாட்ரனைச் சேர்ந்த uncles எல்லாரும், இராணுவம் முழுக்க பெரிய வேலையில ஈடுபட்டிருக்காங்க. நாம கண்டிப்பா, எல்லாரோட முயற்சிகள் துணையோட, கொரோனாவுக்கு எதிரான இந்தப் போர்ல வெற்றி பெறுவோம்னு எனக்கும் ரொம்ப நம்பிக்கை இருக்கு.

மோதி ஜி – நம்ம நாட்டுல ஒண்ணு சொல்லுவாங்க, ஒரு பொண் குழந்தை ஒண்ணு சொன்னா, அவ வாக்குல சரஸ்வதி தேவியே வாசம் செய்யறாம்பாங்க. இப்ப அதிதி சொல்றா, நாம கண்டிப்பா கொரோனாவுக்கு எதிரான போர்ல ஜெயிப்போம்னு, இது ஒருவகையில கடவுளோட வாக்கா அமைஞ்சிருக்கு. சரி அதிதி, இப்ப ஆன்லைன்ல படிக்கறீங்க இல்லையா?

அதிதி – ஆமா, இப்ப எல்லாம் ஆன்லைன்ல தான் வகுப்புகள் நடக்குது, நாங்க எல்லாம் வீட்டுலயும் எல்லா முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துக்கறோம், எங்கயாவது வெளிய போகணும்னா, ரெண்டு முகக்கவசங்களை அணிவோம், எல்லா முன்னெச்சரிக்கைகள், தனிநபர் சுகாதாரம்னு எல்லா விஷயங்கள்லயும் கவனமா இருக்கோம்.

மோதி ஜி – சரி செல்லம், உங்க பொழுதுபோக்குகள்லாம் என்ன? உங்களுக்கு என்ன பிடிக்கும்?

அதிதி – என்னோட பொழுதுபோக்குகள்னா, நீச்சல், அப்புறம் கூடைப்பந்து. ஆனா இப்ப இதெல்லாம் தான் நின்னு போயாச்சே. ஆனா இந்த பொது ஊரடங்கு, கொரோனா வைரஸ் காரணமா, எனக்கு விருப்பமான baking மற்றும் சமையல் செஞ்சு, அப்பா வீட்டுக்கு வரும் போது அவருக்காக cookies, cake எல்லாம் செஞ்சு குடுப்பேன்.

மோதி ஜி – சபாஷ், பலே, பலே. சரி செல்லம், ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்பாவோட நேரம் கழிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. ரொம்ப அருமையா இருந்திச்சு, கேப்டன் உங்களுக்கும் நான் என் பல பாராட்டுக்களைத் தெரிவிச்சுக்கறேன், ஆனா நான் கேப்டனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லும் போது, உங்களுக்கு மட்டுமில்லை, நம்ம இராணுவத்தார் – நீர்-நிலம்-வான்படை வீரர்கள் எல்லாருக்கும்…… அவங்க எல்லாருக்கும் சல்யூட் செய்யறேன். நன்றி சகோதரா.

க்ரூப் கேப் – தேங்க்யூ சார்.

நண்பர்களே, நமது இந்த வீரர்கள் ஆற்றியிருக்கும் பணி, இவற்றுக்காக நாடு இவர்களுக்குத் தலை வணங்குகிறது. இதைப் போலவே இலட்சக்கணக்கானோர், இரவுபகலாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் ஆற்றும் பணி, இது அவர்களின் வாடிக்கையான பணியாக இல்லை. இதைப் போன்ற ஒரு பேரிடர் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறது, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இத்தனை பெரிய சங்கடம்! ஆகையால், இது போன்ற ஒரு பணி குறித்து யாரிடத்திலும் எந்த அனுபவமும் கிடையாது. இவற்றின் பின்னணியில் தேச சேவை என்ற வேட்கை இருந்தது, ஒரு உறுதிப்பாடு இருந்தது. இதன் காரணமாக தேசம் செய்திருக்கும் இந்தப் பணி, முன்னெப்போதும் செய்யப்பட்டதில்லை. சற்று நீங்கள் கணக்கிட்டுப் பாருங்கள், சாதாரணமாக நம் நாட்டில் 900 மெட்ரிக் டன், மருத்துவப் பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தியாகி வந்தது. இப்போது இது பத்து மடங்கு அதிகரித்து, கிட்டத்தட்ட 9500 மெட்ரிக் டன் அளவில் தினமும் உற்பத்தி ஆகி வருகிறது. இந்த ஆக்சிஜனை நமது வீரர்கள் தேசத்தின் தொலைவான மூலைகள் வரை கொண்டு சேர்த்து வருகிறார்கள்.

என் மனம் நிறை நாட்டுமக்களே, ஆக்சிஜனைக் கொண்டு சேர்க்க தேசத்தில் இத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இத்தனை பேர்கள் இணைந்து செயல்படுகிறார்கள், ஒரு குடிமகன் என்ற முறையில், இவர்கள் அனைவரும் கருத்தூக்கம் அளிப்பவர்களாக விளங்குகிறார்கள். குழுக்கள் ஏற்படுத்தி, அனைவரும் தங்களுடைய கடமைகளை ஆற்றி இருக்கின்றார்கள். பெங்களூரூவைச் சேர்ந்த ஊர்மிளா அவர்கள், அவருடைய கணவர் பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளர் என்றும், எத்தனையோ சவால்களுக்கும் சிரமங்களுக்கும் இடையே தொடர்ந்து அவர் பரிசோதனைப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நண்பர்களே, கொரோனாவின் தொடக்கக் கட்டத்தில், தேசத்தில் ஒரே ஒரு பரிசோதனைக் கூடம் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றோ 2,500க்கும் மேற்பட்ட கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் சில நூறு பரிசோதனைகளே செய்ய முடிந்தது, ஆனால் இப்போதோ 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் ஒரே நாளில் நடக்கத் தொடங்கி இருக்கின்றன. இதுவரை தேசத்தில் 33 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு விட்டன. இத்தனை பெரிய வேலை, இந்த நண்பர்கள் காரணமாகவே சாத்தியமாகி இருக்கிறது. எத்தனையோ முன்களப் பணியாளர்கள், மாதிரி சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். தொற்று பீடிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கிடையே செல்வது, அவர்களிடமிருந்து மாதிரியை எடுப்பது என்பதெல்லாம் எத்தனை பெரிய சேவை!! தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டி இந்த நண்பர்கள், இத்தனை வெப்பத்திலும் தொடர்ந்து முழுவுடல் பாதுகாப்புக் கவச உடையான PPE KITஐ அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பிறகு இந்த மாதிரியை பரிசோதனைக் கூடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. உங்கள் அனைவரின் ஆலோசனைகள், வினாக்களை நான் வாசித்துக் கொண்டிருந்த போது, இவர்களைப் போன்ற நண்பர்களைப் பற்றியும் நாம் கண்டிப்பாக பேசியே ஆக வேண்டும். இவர்களுடைய அனுபவங்களிலிருந்து நம்மால் நிறைய கற்க முடியும். தில்லியின் ஒரு பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளரான பிரகாஷ் காண்ட்பால் அவர்களோடு உரையாடுவோம் வாருங்கள்.

மோதி ஜி – பிரகாஷ் அவர்களே, வணக்கம்.

பிரகாஷ் ஜி – வணக்கம் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே.

மோதி ஜி – பிரகாஷ் அவர்களே, முதன்மையா, நீங்க மனதின் குரல் நேயர்களுக்கு உங்களைப் பத்தி சொல்லுங்க. நீங்க எத்தனை காலமா இந்தப் பணியில ஈடுபட்டிருக்கீங்க, கொரோனா காலத்தில உங்க அனுபவம் என்ன; ஏன்னா, நாட்டுமக்களுக்கு டிவியிலயோ, செய்தித்தாள்கள்லயோ இந்த மாதிரியா எல்லாம் யாரும் காட்டறது கிடையாது. இருந்தாலும், ஒரு ரிஷியை மாதிரி நீங்க பரிசோதனைக் கூடத்திலயே இருந்து வேலை பார்க்கறீங்க. இப்படிப்பட்ட நீங்க சொன்னீங்கன்னா, நாட்டுல வேலைகள் எப்படி நடந்திட்டு வருதுன்னு நாட்டுமக்களுக்கும் தகவல்கள் கிடைக்கும்.

பிரகாஷ் ஜி – நான் தில்லி அரசோட சுயாதீனமான Institute of Liver and Biliary Sciences, அப்படீங்கற ஒரு மருத்துவமனையில கடந்த பத்தாண்டுகளா பரிசோதனைக்கூட தொழில்நுட்ப பணியாளரா பணியாற்றிக்கிட்டு இருக்கேன். சுகாதாரத் துறையில எனக்கு 22 ஆண்டுக்கால அனுபவம் உண்டு. ILBSக்கு வர்றதுக்கு முன்னால, நான் தில்லியோட அப்போலோ மருத்துவமனை, ராஜீவ் காந்தி புற்றுநோய் மருத்துவமனை, ரோட்டரி ரத்தவங்கி மாதிரியான பிரபலமான அமைப்புகள்ல பணிபுரிஞ்சிருக்கேன். சார், எல்லா இடங்கள்லயும் நான் ரத்தப் பரிசோதனைத் துறையில பணி செஞ்சிருந்தாலும், கடந்த ஓராண்டுக்காலமா, ஏப்ரல் 1, 2020லேர்ந்து, நான் ILBSஓட, Virology, அதாவது நச்சுநுண்மவியல் துறையின், கோவிட் பரிசோதனைக் கூடத்தில வேலை செஞ்சிட்டு வர்றேன். கோவிட் பெருந்தொற்று, உடல்நலம் மற்றும் இதோட தொடர்புடைய எல்லா விஷயங்கள் மேலயும் அளவுக்கு அதிகமான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்குங்கறதுல சந்தேகமே இல்லை. ஆனா, நான் இந்தப் போராட்டத்தைத் தனிப்பட்ட முறையில ஒரு சந்தர்ப்பமாவே பார்க்கறேன்; ஏன்னா, தேசம், மனித சமூகம், சமுதாயம் எல்லாம் எங்க கிட்ட அதிக பொறுப்புணர்வு, அதிக உதவி, அதிக திறமை, அதிக வல்லமை எல்லாத்தையும் எதிர்பார்க்குது, நம்பிக்கையோட இருக்காங்க. சார், நாங்க தேசம், மனித சமூகம், சமுதாயம் இவங்களோட எதிர்பார்ப்புக்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் ஏற்ப நடப்பது ஒரு மிகச் சிறிய பங்களிப்புத் தான். நாங்க எங்க கடமையைத் தான் செய்யறோம், இதில வெற்றி கிடைக்கும் போது, பெரிய கௌரவ உணர்வு மேலிடுது. சில சமயங்கள்ல குடும்ப உறுப்பினர்களுக்குக் கொஞ்சம் பயம் ஏற்படும் போது, நம்ம நாட்டு இராணுவ வீரர்கள், எப்பவுமே குடும்பத்தை விட்டு விலகி, தொலைவான எல்லைகள்ல, கடினமான, பயங்கரமான சூழ்நிலைகள்ல நாட்டுக்குப் பாதுகாப்பளிப்பதில ஈடுபட்டிருக்காங்க அப்படீங்கற போது, அதோட ஒப்பிட்டுப் பார்க்கையில, நாங்க மேற்கொண்டிருக்கற காரியத்தில சிரமம் ஒண்ணுமே இல்லை அப்படீன்னு சொல்லிப் புரிய வைப்பேன். அப்ப அவங்களும் புரிஞ்சுக்குவாங்க, என்னோட இணைஞ்சு, எனக்கு உதவிகரமா இருப்பாங்க, இந்த பயங்கரமான சூழ்நிலையில தங்களோட பங்களிப்பை அளிப்பாங்க.

மோதி ஜி – பிரகாஷ் அவர்களே, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்க அப்படீன்னு ஒருபுறத்தில அரசு இடைவிடாம சொல்லிட்டு வருது. ஆனா நீங்களோ, நோய்க்கிருமிக்கு முன்னாலயே இருந்துக்கிட்டு, கொரோனா நுண்கிருமிகளுக்கு இடையிலேயே வசிக்க வேண்டியிருக்கு. இதுவே உயிருக்குப் பேராபத்தான விஷயம்ங்கற போது, குடும்பத்தார் கவலைப்படுறதுல அர்த்தம் இருக்கு. ஆனாலும் கூட, பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளர்ங்கற பணி ஒரு வாடிக்கையான, சாதாரணமான ஒண்ணு. ஆனா இப்படிப்பட்டப் பெருந்தொற்று வேளையில நீங்க பணியாற்றிக்கிட்டு இருக்கீங்க அப்படீங்கற போது நிலைமையே வேற. பணிபுரியும் நேரம் அதிகமா இருக்கும் இல்லையா? இரவுபகலா பரிசோதனைக்கூடத்திலயே கழிக்க வேண்டியிருக்கும், ஏன்னா, ஏகப்பட்ட மனிதர்களை பரிசோதனை செய்யணுங்கற பணிச்சுமை இருக்குமே? ஆனா உங்க பாதுகாப்புக்கு நீங்க என்னவெல்லாம் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்றீங்க?

பிரகாஷ் ஜி – கண்டிப்பா மேற்கொள்றோம் சார். எங்க ILBS பரிசோதனைக்கூடம் உலக சுகாதார நிறுவனத் தரச்சான்று பெற்றது. அந்த வகையில எல்லா நெறிமுறைகளும் சர்வதேச தரநிலைகளுட்பட்டவை. நாங்க மூன்று நிலைகள் உடைய உடுப்பை அணிஞ்சுக்கிட்டுத் தான் கூடத்துக்குள்ளவே போவோம், இதைப் போட்டுக்கிட்டுத் தான் வேலை பார்ப்போம். இவற்றை முழுமையா நிராகரிக்க, முத்திரையிட, சோதிச்சுப் பார்க்கன்னு முழுமையான நெறிமுறைகள் இருக்கு, இது பிரகாரம் நாங்க பணியாற்றறோம். சார், இறைவனோட அருளால, என் குடும்பமும் சரி, எனக்கு வேண்டியப்பட்டவங்க குடும்பங்கள் பெரும்பாலும் இந்தப் பெருந்தொற்றிலிருந்து காப்பாத்தப் பட்டிருக்காங்க. ஒரு விஷயம் என்னென்னா, எச்சரிக்கையா இருந்தோம்னு சொன்னா, கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிச்சோம்னு சொன்னா, கணிசமான அளவுக்கு இதிலேர்ந்து நம்மைத் தற்காத்துக்கலாம்.

மோதி ஜி – பிரகாஷ் ஜி, உங்களை மாதிரி ஆயிரக்கணக்கான பேர்கள் கடந்த ஓராண்டுக்காலமா பரிசோதனைக்கூடத்திலேயே இருந்து, கடினமா உழைச்சுக்கிட்டு வர்றீங்க. நிறைய பேர்களைக் காப்பாத்தற பணியை செஞ்சுக்கிட்டு வர்றீங்க. இதை இன்னைக்கு தேசம் தெரிஞ்சுக்கிட்டு இருக்கு. பிரகாஷ் அவர்களே, உங்க மூலமா, உங்களை மாதிரியான பணியில ஈடுபட்டிருக்கற உங்களோட நண்பர்கள் எல்லாருக்கும் என் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன். நாட்டுமக்கள் தரப்பிலிருந்தும் நான் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன். நீங்க ஆரோக்கியமா இருங்க, உங்க குடும்பத்தார் எல்லாரும் ஆரோக்கியமா வாழட்டும், என்னோட பல நல்வாழ்த்துக்கள்.

பிரகாஷ் ஜி – நன்றி பிரதமர் அவர்களே. இந்த ஒரு நல்வாய்ப்பை எனக்குத் தந்ததுக்காக நான் உங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கேன்.

மோதி ஜி – நன்றிகள் சகோதரா.

நண்பர்களே, ஒருவகையில், நான் பிரகாஷ் என்ற ஒரு சகோதரனோடு மட்டுமே பேசினேன் என்றாலும், இவரது சொற்களில் ஆயிரக்கணக்கான பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளர்களின் சேவையின் மணம் கமழ்வதை என்னால் உணர முடிந்தது. இந்த வார்த்தைகளில் ஆயிரக்கணக்கான-இலட்சக்கணக்கான மனிதர்களின் சேவையுணர்வு பளிச்சிடுகிறது, நம்மனைவரின் பொறுப்புக்களை இது நினைவூட்டுகிறது. எத்தனை கடுமையாகவும், ஈடுபாட்டோடும் சகோதரர் பிரகாஷ் பணியாற்றி வருகின்றாரோ, அதே அளவு முனைப்போடு அவருடைய ஒத்துழைப்பு, கொரோனாவை முறியடிக்க பேருதவி புரியும்.

என் உளம்நிறை நாட்டுமக்களே, நாம் தற்போது கொரோனா வீரர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். கடந்த ஒண்ணரை ஆண்டுக்காலமாக நாம் இவர்களின் முழுமையான அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கண்கூடாகக் கண்டு வந்திருக்கிறோம். ஆனால் இந்தப் போரிலே, மிகப்பெரிய பங்களிப்பு, தேசத்தின் பல துறைகளில் பல வீரர்களுக்கும் கூடச் சொந்தமானது. சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே, நம்முடைய தேசத்தில் இத்தனை பெரிய சங்கடம் பூதாகாரமாக வடிவெடுத்திருக்கிறது, இது பாதிக்காத அமைப்போ துறையோ எதுவுமே இல்லை என்ற நிலையில், விவசாயத் துறை இந்தத் தாக்குதலிலிருந்து கணிசமாகத் தன்னைத் தற்காத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் முன்னேற்றமும் கண்டிருக்கிறது. இந்தப் பெருந்தொற்றிலும் கூட விவசாயப் பெருமக்கள் சாதனை அளவிலான உற்பத்தியை செய்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? விவசாயிகள் சாதனை அளவிலான உற்பத்தியும் செய்திருக்கிறார்கள் என்பது ஒருபுறம் என்றால், தேசத்தில் இதுவரை வரலாறு காணாத வகையில் உணவுதானியக் கொள்முதலும் நடந்திருக்கிறது. இந்த முறை பல இடங்களில் கடுகு உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை விடவும் அதிக விலை கிடைத்திருக்கிறது. சாதனை படைத்த உணவுதானிய உற்பத்தி காரணமாகவே நமது தேசத்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதரவு அளிக்க முடிந்திருக்கிறது. இன்று இந்த சங்கடக் காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன, எந்த ஒரு ஏழையின் வீட்டிலும் அடுப்பு எரியாமல் இருக்கக்கூடாது என்பதே இதன் நோக்கம்.

நண்பர்களே, இன்று நமது நாட்டின் விவசாயிகள், பல துறைகளில் புதிய அமைப்புக்களால் ஆதாயம் அடைந்து அற்புதங்களை அரங்கேற்றி வருகிறார்கள். அகர்தலாவின் விவசாயிகளையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த விவசாயிகள் மிகச் சிறப்பான வகையில் பலாப்பழ சாகுபடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவற்றுக்கான தேவை உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் இருக்கலாம் என்பதால், இந்த முறை அகர்தலாவின் விவசாயிகள் பலாப்பழத்தை ரயில்கள் வாயிலாக குவாஹாட்டிக்குக் கொண்டு வந்தார்கள். குவாஹாட்டியிலிருந்து இந்தப் பலாப்பழங்கள் லண்டன் மாநகருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதைப் போன்றே பிஹாரின் ஷாஹி லீச்சிப் பழங்களின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 2018ஆம் ஆண்டு அரசாங்கம் இந்த ஷாஹி லீச்சிப் பழங்களுக்கு புவியியல் அடையாளமான GI Tagஇனை அளித்தது; இதற்கென ஒரு பலமான அடையாளமும், விவசாயிகளுக்கு அதிக ஆதாயமும் ஏற்பட வேண்டும் என்பதை முன்னிட்டு இவ்வாறு செய்தது. இந்த முறை பிஹாரின் இந்த ஷாஹி லீச்சி, வான் வழியாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிழக்கிலிருந்து மேற்கு, வடக்கிலிருந்து தெற்கு…. என நமது தேசத்தில் இப்படிப்பட்ட அருமையான சுவைகளும், உற்பத்திப் பொருட்களும் நிறைந்திருக்கின்றன. தென்னிந்தியாவில், விஜயநகரத்தின் மாம்பழம் பற்றி நீங்கள் கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மாம்பழத்தை யார் தான் உண்ண விரும்ப மாட்டார்கள்!! ஆகையால் இப்போது விவசாயிகள்-ரயில், ஆயிரக்கணக்கான டன் விஜயநகர மாம்பழங்களை தில்லிக்குக் கொண்டு சேர்த்து வருகிறது. தில்லி மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்கு, விஜயநகர மாங்கனிகள் உண்ணக் கிடைக்கும், விஜயநகர விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் உண்டாகும். விவசாயிகள் ரயில் இதுவரை கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் டன் விளை பொருட்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இப்போது விவசாயிகளுக்கு மிகக் குறைவான செலவில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை தேசத்தின் தொலைவான பகுதிகளுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, இன்று மே மாதம் 30ஆம் தேதியன்று நாம் மனதின் குரலில் ஈடுபட்டிருக்கும் வேளையில்…… நமது அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது ஒரு தற்செயல் நிகழ்வுப் பொருத்தம். இப்போதெல்லாம் தேசம் அனைவரையும் இணைத்து, அனைவருக்குமான முன்னேற்றம், அனைவரின் நம்பிக்கை என்ற மந்திர வாக்கின்படி பயணித்து வருகிறது. நாமனைவருமே ஒவ்வொரு கணமும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றோம். மனதின் குரலின் 7 ஆண்டுக்காலப் பயணத்தில் உங்களுடைய-நம்முடைய இந்தப் பயணம் குறித்துப் பேச வேண்டும் என்று கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். நண்பர்களே, இந்த ஏழாண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகள், நாட்டின் சாதனைகள், நாட்டுமக்களின் சாதனைகள். நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் எத்தனையோ பெருமிதமான கணங்களை நாமனைவரும் இணைந்து அனுபவித்திருக்கிறோம். நம்முடைய பாரதம் பிற நாடுகளின் கருத்து-எண்ணம்-அழுத்தத்திற்கு மசிவதில்லை, தனது உறுதிப்படியே அது நடக்கிறது என்பதைக் காணும் போது, அனைவருக்கும் பெருமிதம் உண்டாகிறது. இப்போதெல்லாம் பாரதம் தனக்கெதிராக சூழ்ச்சிகளைப் பின்னுவோருக்கெல்லாம் தாடையைத் தவிடுபொடியாக்கும் பதிலடியைக் கொடுக்கிறது என்பதைப் பார்க்கும் போது, தன்னம்பிக்கை வளர்கிறது. தேசியப் பாதுகாப்பு விஷயங்களில் பாரதம் விட்டுக் கொடுப்பதில்லை, நமது படைகளின் சக்தி அதிகரிக்கிறது என்பதை நோக்கும் போது, நாம் சரியாகவே பயணிக்கிறோம் என்று நமக்குப் படுகிறது.

நண்பர்களே, நாட்டுமக்கள் பலர் அனுப்பியிருக்கும் செய்தி, அவர்களின் கடிதங்கள் நாட்டின் பல இடங்களிலிருந்தும் வந்த வண்ணம் இருக்கின்றன. 70 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் கிராமத்தில் முதன்முறையாக மின்சாரம் வந்திருக்கிறது, தங்களுடைய குழந்தைகளால் மின்விளக்கைக் காண முடிகிறது, மின்விசிறி கீழமர்ந்து அவர்களால் படிக்க முடிகிறது என்று எத்தனையோ பேர்கள் தேசத்துக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறார்கள். எங்களுடைய கிராமம் செப்பனிடப்பட்ட சாலை காரணமாக இப்போது நகரத்தோடு இணைந்து விட்டது என்று எத்தனையோ பேர்கள் கூறுகிறார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது….. ஒரு பழங்குடியினப் பகுதியைச் சேர்ந்த சில நண்பர்கள் எனக்கு ஒரு தகவலைத் தெரிவித்திருந்தார்கள்….. அதாவது சாலை போடப்பட்ட பிறகு, முதன்முறையாக தாங்களும் பாக்கி உலகத்தோடு இணைந்து விட்டதாக ஒரு உணர்வு ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தார்கள். இதே போல எங்கோ பலர் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள், வேறு சிலர் பல்வேறு நலத்திட்டங்களின் உதவியோடு புதிய வேலையைத் தொடங்கிய பிறகு, சந்தோஷமாக எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டப்படி வீடு கிடைத்த பிறகு, புதுமனைப் புகுவிழாவிற்கு எத்தனையோ அழைப்பிதழ்கள், நாட்டுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இந்த ஏழாண்டுகளில், உங்களனைவரின் இந்தக் கோடிக்கணக்கான சந்தோஷங்களில் நான் பங்கெடுத்து வந்திருக்கிறேன். சில நாட்கள் முன்பாக, ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார், ஜல்ஜீவன் திட்டத்தின்படி, வீட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர்க் குழாயை படம்பிடித்து எனக்கு அனுப்பியிருந்தார்கள். இதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பு என்ன தெரியுமா? என்னுடைய கிராமத்தின் உயிரூற்று. இப்படி எத்தனையோ குடும்பங்கள் உண்டு. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது தேசத்தின் வெறும் மூணரை கோடி கிராமப்புற மக்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் கடந்த 21 மாதங்களில் மட்டும் நாலரை கோடிக் கிராமப்புற வீடுகளுக்கு, குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 15 மாதங்கள், கொரோனாக் காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போன்றே மேலும் ஒரு புதிய நம்பிக்கை, தேசத்தின் ஆயுஷ்மான் திட்டம் வாயிலாகவும் பிறந்திருக்கிறது. ஒரு ஏழை, இலவச சிகிச்சை வாயிலாக குணமடைந்து வீடு திரும்பும் போது, தனக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்திருப்பதாக உணர்வார். தேசம் அவருக்கு உற்ற துணையாக இருக்கிறது என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படும். இப்படி எத்தனையோ குடும்பங்களின் நல்லாசிகள், கோடானுகோடி தாய்மார்களின் நல்லாசிகளின் துணையோடு, நமது தேசம் மிகுந்த பலத்தோடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடுகிறது.

நண்பர்களே, இந்த ஏழாண்டுகளில் பாரதம் மின்னணு பரிவர்த்தனைகளில் உலகிற்கு ஒரு புதிய திசையைக் காட்டியிருக்கிறது. இன்று எந்த ஒரு இடத்திலிருந்தும், சொடுக்குப் போடும் நேரத்தில் நீங்கள் மின்னணு முறையில் பணம் செலுத்திவிட முடியும். கொரோனா சமயத்தில் இது மிகப் பயனுடையதாக நிரூபணமாகி வருகிறது. இன்று தூய்மை தொடர்பாக நாட்டுமக்கள் மத்தியில் தீவிரத்தன்மையும், விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. நாம் வரலாறு காணாத அளவிற்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறோம், அதே சாதனை படைக்கும் அளவுக்கு சாலைகளையும் உருவாக்கி வருகிறோம். இந்த ஏழாண்டுகளில் தேசத்தின் பலகாலமாக நிலுவையிலேயே இருந்த பிரச்சனைகளை, முழுமையான அமைதியோடும், சகோதரத்துவத்தோடும் தீர்க்க முடிந்திருக்கிறது. வடகிழக்கு தொடங்கி கஷ்மீரம் வரை அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஒரு புதிய நம்பிக்கை விழிப்படைந்திருக்கிறது. 70 ஆண்டுக்காலமாக நடக்கவே நடக்காத பணிகள், இந்த ஏழாண்டுகளில் எப்படி சாத்தியமானது என்று நீங்கள் சிந்தியுங்கள். நாம், அரசாங்கம் -- குடிமக்கள் என்று தனித்தனியாக செயல்படுவதை விட அதிகமாக, ஒரு தேசமாக, ஒரு குழுவாகப் பணியாற்றியிருக்கிறோம், டீம் இண்டியா என்று செயல்பட்டிருக்கிறோம். தேசத்தை முன்னெடுத்துச் செல்வதில், ஒன்றிரண்டு படிகள் முன்னெடுக்கும் முயற்சிகளில், ஒவ்வொரு குடிமகனும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆம், எங்கே எல்லாம் வெற்றிகள் கிடைக்கின்றனவோ, அங்கே எல்லாம் சோதனைகளும் இருக்கத் தானே செய்யும்!! இந்த ஏழாண்டுக்காலத்தில் நாமனைவருமாக இணைந்து பல கடினமான சோதனைகளையும் எதிர்கொண்டோம், ஒவ்வொரு முறையும் நாம் மேலும் பலமடைந்தவர்களாகவே வெளிப்பட்டோம். கொரோனா பெருந்தொற்று வடிவில் இத்தனை பெரிய சோதனை தொடர்ந்து வருகிறது. இது எப்படிப்பட்ட சங்கடம் என்றால் இது, உலகம் முழுவதையும் சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது, இதனால் பலர் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்து வாடுகிறார்கள். பெரியபெரிய தேசங்கள் எல்லாம் இதன் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியவில்லை. இந்த உலகளாவிய பெருந்தொற்றுக்கு இடையே, சேவையும், உதவியும் என்ற உறுதிப்பாட்டோடு பாரதம் முன்னேறி வருகிறது. நாம் முதல் அலையின் போதும், முழு நம்பிக்கையோடும் உறுதிப்பாட்டோடும் போரிட்டோம். இந்த முறையும், வைரஸ் கிருமிக்கு எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கும் இந்தப் போரில் பாரதம் வெல்லும். நான்கடி இடைவெளி, முகக்கவசத்தோடு தொடர்புடைய விதிமுறைகள் ஆகட்டும், அல்லது தடுப்பூசி தொடர்பானவையாகட்டும், நாம் கண்டிப்பாக தளர்ச்சியைக் காட்டக் கூடாது. இதுவே நமது வெற்றிக்கான பாதை. அடுத்த முறை மனதின் குரலுக்காக நாம் இணையும் போது, நாட்டுமக்களின், உத்வேகம் அளிக்கும் பல எடுத்துக்காட்டுக்களோடு பேசுவோம், புதிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்போம். உங்கள் ஆலோசனைகளை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வாருங்கள். நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருங்கள், தேசத்தை இதே போன்று முன்னேற்றப் பாதையில் செலுத்திக் கொண்டே வாருங்கள். பலப்பல நன்றிகள்.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
On Puri’s Grand Road, a devotee’s submission

Media Coverage

On Puri’s Grand Road, a devotee’s submission
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister speaks with the Amir of Qatar
July 16, 2026
PM conveys heartfelt condolences on the passing of the Father Amir of Qatar
PM recalls the Father Amir’s visionary leadership and his contribution to strengthening India-Qatar relations
The two leaders reaffirm their resolve to carry forward the Father Amir’s legacy

Prime Minister Shri Narendra Modi had a telephone conversation today with the Amir of the State of Qatar, H.H. Sheikh Tamim bin Hamad Al Thani.

Prime Minister conveyed his heartfelt condolences on the passing of H.H. Sheikh Hamad bin Khalifa Al Thani, the Father Amir of Qatar.

Recalling the Father Amir’s significant contributions as the chief architect of modern Qatar, Prime Minister paid tribute to his visionary leadership, and recalled his pivotal role in strengthening India-Qatar relations over the years as well as his deep affection for India and the Indian community in Qatar.

The Amir of Qatar thanked Prime Minister for his call and conveyed his appreciation for the words of support in this difficult hour.

The two leaders reaffirmed their resolve to carry forward the Father Amir’s legacy and further strengthen the India-Qatar Strategic Partnership and people-to-people ties.

They agreed to remain in close touch.