இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணக்கம், நல்லெண்ணம் மற்றும் ஆழமான உத்தி சார்ந்த கூட்டாண்மையை அங்கீகரித்து, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, பிப்ரவரி 25 முதல் 26, 2026 வரை இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிரதமருடன் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் சென்றது. பிரதமர் திரு நெதன்யாகுவும், பிரதமர் திரு மோடியும் உத்திசார் கூட்டாண்மையை ‘அமைதி, புதுமை மற்றும் செழிப்புக்கான சிறப்பு உத்தி சார்ந்த கூட்டாண்மை’ என்ற ஒரு புதிய நிலைக்கு உயர்த்த முடிவு செய்தனர்.
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரி தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை, பாதுகாப்பு தளங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் இந்தியா மற்றும் இஸ்ரேலின் முன்னேற்றங்களை ஒருங்கிணைப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை பிரதமர்கள் உறுதிப்படுத்தினர். இந்தக் கூட்டாண்மை, 'தற்சார்பு இந்தியா மற்றும் 2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் தொழில்நுட்ப மாற்றத்தின் அடுத்த அலையையும் பகிரப்பட்ட முன்னேற்றத்தையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இஸ்ரேலின் தொழில்நுட்ப வலிமைகளைப் பாராட்டி, பிரதமர் திரு நெதன்யாகுவும், பிரதமர் திரு மோடியும், இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் தலைமையிலான முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த புதிய முயற்சியை வரவேற்றனர். இந்த முயற்சி, இரு நாடுகளின் தனிப்பட்ட ஆற்றல்களையும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒருங்கிணைத்து, எதிர்காலத்திற்கான கூட்டாண்மையை வளர்க்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
புதுமைப் பணிகளில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த தலைவர்கள், செயற்கை நுண்ணறிவின் திறமை மற்றும் நிபுணத்துவத்தில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இசைவு தெரிவித்தனர். இரு நாடுகளிலும் முன்னணி புதுமை நடவடிக்கைகளில் தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பை எளிதாக்குவது உட்பட, செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் புதுமை நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் வரவேற்றனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். பயங்கரவாதத்தை விரிவான மற்றும் நீடித்த முறையில் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், 2025 ஏப்ரல் 22 அன்று இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரில் உள்ள பஹல்காமில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் 2025 நவம்பர் 10 அன்று புதுதில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த பயங்கரவாத சம்பவம் ஆகியவற்றை அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு நாடுகளின் பிரதமர்களும் மீண்டும் வலியுறுத்தினர். மேலும், அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் டிரம்பின் "காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை" வரவேற்றனர். அமைதி நடவடிக்கை உட்பட பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். மேலும், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதல் மூலம் பிராந்தியத்தில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதி, பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தை நிறுவுவதன் அவசியத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.


