பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2025-26-ம் நிதியாண்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், வட்டி மானியம் தொடர்பான அம்சங்களைத் தொடர இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் என்பது வேளாண் கடன் அட்டை மூலம் குறைவான வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் கிடைப்பது உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ்:
• விவசாயிகள் வேளாண் கடன் அட்டைகள் மூலம் 7% மானிய வட்டி விகிதத்தில் ரூ.3 லட்சம் வரை குறுகிய கால கடன்களைப் பெற்றுள்ளதுடன், தகுதியுள்ள கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5% வட்டி மானியமும் வழங்கப்பட்டது.
• கூடுதலாக, கடன்களை உடனடியாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகள், வேளாண் கடன் அட்டை மூலம் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4% - மாகக் குறைக்கும் வகையில், உரியமுறையில் திருப்பிச் செலுத்துவதற்கான ஊக்கத்தொகை என 3% வரை ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
• கால்நடை வளர்ப்பு அல்லது மீன்பிடித் தொழிலுக்காக பிரத்தியேகமாக பெறப்பட்ட கடன்களுக்கு, வட்டி பலனாக ரூ.2 லட்சம் வரை பொருந்தும்.
இத்திட்டத்தின் கட்டமைப்பு அல்லது பிற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் முன்மொழியப்படவில்லை.
நாட்டில் 7.75 கோடிக்கும் அதிகமான வேளாண் கடன் அட்டை கணக்குகள் உள்ளன. இதுபோன்ற கடன் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் விவசாயத்திற்கான நிறுவனக் கடன் செயல்பாடுகளைத் தக்க வைத்துக்கொள்ள மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். இது உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதிசார் உள்ளடக்கத்தை உறுதி செய்வதற்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
விவசாயக் கடனின் முக்கிய சிறப்பம்சங்கள்:
• வேளாண் கடன் அட்டை மூலம் வழங்கப்படும் நிறுவனக் கடன் தொகை 2014 - ம் ஆண்டில் ரூ.4.26 லட்சம் கோடியிலிருந்து 2024 - ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ரூ. 10.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
• ஒட்டுமொத்த விவசாய கடன் நடவடிக்கைகள் 2013-14 - ம் நிதியாண்டில் ரூ. 7.3 லட்சம் கோடியிலிருந்து 2023-24 - ம் நிதியாண்டில் ரூ.25.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
• 2023 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வேளாண் ரின் இணையதளம் தொடங்கப்பட்டது போன்ற டிஜிட்டல் சீர்திருத்த நடவடிக்கைகள் வாயிலாக உரிமைகோரல் தொடர்பான செயலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தியுள்ளன.
தற்போதைய கடன் செலவு குறித்த போக்குகள், சராசரி குறைந்த வட்டி அல்லது நிதி சார்ந்த கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் ரெப்போ வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, வட்டி மானிய விகிதத்தை 1.5% - த்தில் தக்கவைத்துக் கொள்வது கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளை ஆதரிப்பதற்கும் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் தொடர்ந்து கடன் வழங்குவதற்கும் வகை செய்கிறது.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கும், கிராமப்புற கடன் சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், சரியான தருணத்தில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதன் மூலம் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் மத்திய அரசின் வலுவான உறுதிப்பாட்டை எடுத்துரைப்பதாக உள்ளது.