கேப்டனுக்கு ஒரு அஞ்சலி!

Published By : Admin | January 3, 2024 | 08:41 IST

மிகவும் போற்றப்பட்ட, மதிக்கப்பட்ட தலைவரான திரு விஜயகாந்த் அவர்களை சில நாட்களுக்கு முன்பு, நாம் இழந்தோம். அனைவருக்கும் கேப்டனாகத் திகழ்ந்த அவர், மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததுடன், தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தலைமைப்பண்பைக் கொண்டிருந்தார்.

தனிப்பட்ட முறையில், மிகவும் அன்பான நண்பராக விளங்கிய அவருடன் நான் பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாகப் பழகியதுடன், அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன்.
கேப்டன் பன்முக ஆளுமைத்தன்மை கொண்டவர். இந்திய சினிமா உலகில் விஜயகாந்த் அளவுக்கு அழியாத முத்திரை பதித்த நட்சத்திரங்கள் வெகு சிலரே. அவரது ஆரம்ப கால வாழ்க்கை, திரைப் பிரவேசம் ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். எளிமையான ஆரம்பத்திலிருந்து தமிழ் சினிமாவின் உச்சம் வரையிலான அவரது பயணம், வெறுமனே ஒரு நட்சத்திரத்தின் கதையாக மட்டுமல்லாமல், இடைவிடாத முயற்சி மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வரலாறாக அமைந்தது. புகழுக்காக அவர் சினிமா உலகில் நுழையவில்லை. ஆர்வத்தாலும் விடாமுயற்சியாலும் உந்தப்பட்ட பயணம் அவருடையது. அவரது ஒவ்வொரு படமும் பொழுதுபோக்காக மட்டும் அமையாமல், அவரது சமகால சமூக நெறிமுறைகளையும் பிரதிபலித்ததுடன் பரந்த அளவிலான ரசிகர்கள் மனதில் ஆழமாக எதிரொலித்தது.

கேப்டன் ஏற்று நடித்த பாத்திரங்களும் அவற்றை அவர் பிரதிபலித்த விதமும் சாமானிய குடிமக்களின் போராட்டங்களைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டியது. அநீதி, ஊழல், வன்முறை, பிரிவினைவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய கதாபாத்திரங்களில் அவர் அடிக்கடி தோன்றினார். அவரது திரைப்படங்கள் சமூகத்தில் நிலவும் நற்பண்புகளையும், தீமைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கின என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பொழுதுபோக்கு மற்றும் சமூக கருத்துக்களின் இந்த தனித்துவமான கலவை அவரை பிற நடிகர்களிடமிருந்து வேறுபடுத்தி தனித்துவமாக காட்டியது.

இந்த இடத்தில், கிராமப்புற வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் மீது அவர் கொண்டிருந்த அன்பை நான் குறிப்பாக முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மகத்தான புகழைப் பெற்ற பிறகும், உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகும், கிராம வாழ்க்கை மற்றும் பாரம்பரிய நெறிமுறைகள் மீதான அவரது காதல் மாறாமல் அப்படியே இருந்தது. அவரது திரைப்படங்கள், கிராமங்களுடனான அவரது அனுபவத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டின. கிராமப்புற சூழலைப் பற்றிய நகர்ப்புற மக்கள் கொண்டிருந்த கருத்தை மேம்படுத்த அவர் அடிக்கடி மேற்கொண்ட முயற்சிகள் அலாதியானவை.

ஆனால் கேப்டனின் தாக்கம் வெள்ளித்திரையுடன் நின்றுவிடவில்லை. அரசியலிலும் நுழைந்து சமூகத்திற்கு மேலும் விரிவான முறையில் சேவை செய்ய அவர் விரும்பினார். அவரது அரசியல் பிரவேசம் மிகுந்த துணிச்சலும் தியாகமும் நிறைந்த வரலாறாகும். தமிழக அரசியலில் அம்மா ஜெயலலிதா அவர்கள், கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆகிய இரு ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் அரசியல் களத்தில் பிரவேசித்தார். இத்தகைய சூழலில், மூன்றாவது மாற்று வாய்ப்பை முன்வைப்பது தனித்துவமானது, துணிச்சலானதும் கூட. ஆனால் அதுதான் கேப்டனின் விசேஷ குணநலன்! - செயல்படுவதில் அவருக்கென்று தனி வழி இருந்தது. 2005-ல் அவர் நிறுவிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் (தே.மு.தி.க.) சித்தாந்தத்தில் தேசியம் மற்றும் சமூக நீதிக்கு அவர் அளித்த முக்கியத்துவம் பிரதிபலித்தது. அவர் மேடையில் பேசும் போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக திரையில் அடிக்கடி குரல் கொடுத்த அவரது திரை ஆளுமையுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியாது. வழக்கமாக வலுவான இரு துருவ போட்டி நிலவிய தமிழக அரசியலில், 2011 ஆம் ஆண்டில், அவர் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே, சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார்.

2014 மக்களவைத் தேர்தலின் போது நான் கேப்டனுடன் பணிபுரிந்தேன், அப்போது எங்கள் கட்சிகள் ஒரு கூட்டணியில் போட்டியிட்டு 18.5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றன - 1989 தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு முக்கிய பிராந்திய கட்சிகளும் இடம் பெறாத தேசிய கூட்டணி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவிகிதம் இதுவாகும்! சேலத்தில் நாங்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் அவரது ஆவேசமான உரையையும் மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பையும் நான் கண்கூடாக கண்டேன். 2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்த மக்களில் அவரும் ஒருவராக இருந்தார். 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் என்னை சந்தித்தபோது, அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

தொழில் ரீதியான சாதனைகளைத் தாண்டி, விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை இளைஞர்களுக்கு மதிப்புமிக்க போதனைகளை வழங்குகிறது. அவரது உறுதிப்பாடு, ஒருபோதும் துவண்டுவிடாத மனப்பான்மை மற்றும் முழுமையான அர்ப்பணிப்பின் மூலம் எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் திறன் ஆகியவை அவரது வாழ்க்கை பிறருக்கு கற்றுத் தரும் மிக முக்கிய பாடங்களாகும். அதேபோன்று அவரது பரந்த மனப்பான்மையும் உத்வேகம் அளிக்கக் கூடியதாகும். வள்ளல் தன்மைக்கு பெயர் பெற்ற இவர், ஈட்டிய தனது புகழையும், செல்வத்தையும் பல வழிகளில் சமூகத்தின் நலனுக்காக வழங்கினார். தமிழ்நாடும் ஒட்டுமொத்த இந்தியாவும் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னோடியாக மாற வேண்டும் என்பதில் அவர் எப்போதும் ஆர்வமாக இருந்தார்.

விஜயகாந்த் அவர்களின் மறைவால், பலரும் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். ஆனால் நான் நேசம் மிகுந்த, மதிநுட்பம் மிக்க ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார். தீரம், கொடைத்தன்மை, கூர்மதி, உறுதிப்பாடு ஆகிய நான்கும் ஒரு வெற்றிகரமான தலைவரின் இன்றியமையாத கூறுகள் என்பதைப் பற்றி குறள் பேசுகிறது. கேப்டன் உண்மையிலேயே இந்தக் குணாதிசயங்களின் உருவகமாகத் திகழ்ந்தார், அதனால்தான் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். அவரது மங்காத புகழும் மாண்பும் ரசிகர்களின் இதயங்களிலும், தமிழ் சினிமா வரலாற்றிலும், பொது சேவையின் வழித் தடத்திலும் நீடித்து நிலைத்து நிற்கும். மேலும், அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் சமூக நீதியை உறுதி செய்யும் அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.

மறைந்த தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் குறித்த மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி எழுதியுள்ள கட்டுரை

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's food services market to reach USD 150 billion by FY31, online share to rise to 18%: Report

Media Coverage

India's food services market to reach USD 150 billion by FY31, online share to rise to 18%: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை
July 06, 2026

தேசிய உணர்வு மற்றும் சுயநலமற்ற சேவை ஆகிய கொள்கைகளைப் போற்றிப் பாதுகாக்கும் மக்களுக்கு ஜூலை 6-ம் தேதியான இன்று ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். பாரத அன்னை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் துணிச்சலுக்கு காலத்தால் அழியாத ஒரு முன்னுதாரணமாக அவரது வாழ்க்கை திகழ்கிறது. நவீன இந்தியாவில், அறிவுத்திறன், பொதுச் சேவை மற்றும் தார்மீக உறுதிப்பாடு ஆகியவற்றின் மிகச்சிறந்த சங்கமமாகத் திகழ்ந்த தலைவர்களில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு நிகரானவர்கள் மிகச் சிலரே.

இளம் வயது சியாமா பிரசாத், பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை உறுதிசெய்யக்கூடிய சூழலில் பிறந்தார். அவரது தந்தையான சர் அசுதோஷ் முகர்ஜி, அக்காலத்தின் மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். விதி அவருக்குச் சலுகைகள் நிறைந்த ஒரு பாதையை அமைத்துத் தந்திருந்த போதிலும், அவரது மனசாட்சி, அவரை, தியாகம் மற்றும் தேச சேவையுடன் கூடிய பாதையை நோக்கி வழிநடத்தியது. காலனித்துவம், வகுப்புவாதம், மனிதாபிமானச் சவால்கள் போன்று அக்காலக்கட்டத்தில் நிலவிய கொந்தளிப்பான சூழலின் மௌன சாட்சியாக இருக்க முடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இத்தகைய வாழ்க்கைப் பயணத்தின்போது, ​​பச்சிளம் குழந்தையையும், பிற்காலத்தில் தனது மனைவியையும் இழந்தது போன்ற ஆழமான தனது தனிப்பட்ட துயரங்களையும் அவர் எதிர்கொண்டார். இருந்தபோதும், இந்தத் துயரங்கள் அவரது உறுதியை மேம்படுத்தியதுடன், சேவை செய்வதற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தின.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பொதுவாழ்வை எல்லாவற்றிற்கும் மேலாக வரையறுத்த ஒரு கொள்கை உண்டென்றால், அது இந்தியாவின் பிரிக்க முடியாத தன்மையாகத்தான் இருக்க முடியும். இந்தியப் பிரிவினையின் சவாலான சூழலிலும், மேற்கு வங்கம், இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்தப் பகுதியாகத் தொடர்வதை உறுதி செய்வதில் அவர் உறுதியாக இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பின், அதே உறுதியான கொள்கைதான் அவரை ஜம்மு-காஷ்மீரை நோக்கி ஈர்த்தது. சிறைவாசம், அவரைத் தடுத்து நிறுத்தவில்லை; தனிமைப்படுத்தப்பட்ட சூழலும் அவரது மனவுறுதியை சீர்குலைக்கவில்லை. எண்ணற்ற மக்களின் நலனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்த டாக்டர் முகர்ஜி, அவர்களிடமிருந்து வெகு தொலைவில், சிறைக்காவலில் இருந்தபோதே திடீரென உயிர்நீத்தார். வரலாற்றில் சில தருணங்களில், ஒரு தனிநபரின் உயிர்த் தியாகம், அரசியலைக் கடந்து தேசத்தின் கூட்டு நினைவில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது. டாக்டர் முகர்ஜியின் இறுதிப் பயணமும் அத்தகைய ஒரு தருணமாகத் திகழ்கிறது. தாம் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்த ஒரு லட்சியத்திற்காகவே டாக்டர் முகர்ஜி தம் உயிரைத் தியாகம் செய்தார் என்று ஆச்சார்ய வினோபா பாவே குறிப்பிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின், 2019-ல் அரசியலமைப்பின் 370 மற்றும் 35(ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு, அவரது தியாகத்திற்குச் செலுத்தப்பட்ட உன்னதமான மரியாதையாக அமைந்தது.

இந்தியாவிற்கும், இந்திய மாண்புகளுக்கும் டாக்டர் முகர்ஜி முன்னுரிமை அளித்தார். அக்காலகட்டத்தின் வழக்கமான சிந்தனைப் போக்குகளுக்கு மாற்றாக அமைந்த நிறுவனங்களை உருவாக்கியும், புதிய நடைமுறைகளை வளர்த்தெடுத்தும், அவர் இதனைச் செயல்படுத்தினார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இளம் துணைவேந்தராக அவர் பொறுப்பேற்றார். தேசப்பற்று மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஆக்கபூர்வமான மாற்றங்களை அவர் தனது தனித்துவமான பாணியில் முன்னெடுத்தார். கல்வியாளர்களின் மாநாடு ஒன்றில் காலந்துகொண்டுப் பேசிய டாக்டர் முகர்ஜி, “எழுத்தர்களையோ, குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களையோ உருவாக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே கல்வி நிறுவனங்களைக் கருதுவது தவறு. நகராட்சிகள், மாநில மற்றும் மத்திய சட்டமன்றங்கள் போன்ற சுயாட்சி அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் திறனும், அதேவேளையில் நிதி, வணிகம் மற்றும் தொழில் போன்ற பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை வழிநடத்தும் திறனும் கொண்ட மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்", என்று அற்புதமாக உரையாற்றினார்.

அவரது தலைமையின் கீழ், கல்கத்தா பல்கலைக்கழகம், நூலகக் கட்டமைப்பின் மேம்பாடு, அறிவியல் துறையில் ஆராய்ச்சிகளின் அதிகரிப்பு, தொல்பொருட்கள் குறித்த ஆய்வுகளின் ஊக்குவிப்பு மற்றும் வேளாண்மைப் பாடப்பிரிவுகளின் அறிமுகம் போன்ற தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டது. விளையாட்டு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் நலன் போன்ற துறைகளிலும் அவர் கவனம் செலுத்தினார். மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜனவரி 24-ஐ பல்கலைக்கழகத்தின் நிறுவன நாளாகக் கொண்டாடும் வழக்கத்தை அவர் தொடங்கினார். பல்கலைக்கழகத்திற்காக ஒரு பாடலை இயற்றித் தருமாறு அவர் குருதேவ் தாகூரையே கேட்டுக்கொண்டார்.

அவரது வாழ்வின் பிற்பகுதியில், 'பாரதிய ஜன சங்கம்' என்ற கட்சியைத் தொடங்க அவர் எடுத்த முடிவை, இந்த மனப்பான்மைக்கு மற்றொரு சான்றாகக் கூறலாம். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்த அக்காலக்கட்டத்தில், நமது கலாச்சார வேர்களுடன் இணைந்திருந்தவாறே இந்தியாவின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுக்க ஒரு மாற்றுக்குரல் தேவை என்பதற்கான காரணங்கள் இன்னும் வலுவாக இருப்பதாக அவர் கருதினார். அந்தக் கட்சியின் சின்னமாக 'தியா' எனப்படும் அகல் விளக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது, மிகவும் பொருத்தமானதாக அமைந்தது. ஒரு சிறிய அகல் விளக்கு பார்ப்பதற்கு எளிமையானதாகத் தோன்றினாலும், தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் தாண்டி இருளை அகற்றும் வல்லமை அதற்கு உண்டு. கட்சி இயங்கிய காலத்திலும், அதற்குப் பின்னரும் கூட ஜன சங்கம் அதைத்தான் செய்தது.

இந்தியாவின் முதல் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி வகித்த பதவிக்காலம், வளர்ச்சி பற்றிய அவரது கண்ணோட்டம் எவ்வளவு விரிவானதாகவும், மனிதத்தன்மை நிறைந்ததாகவும் இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டிற்கு கண்ணியம், வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மீட்டளிப்பதற்கான ஒரு வழியாகவே அவர் தொழில்துறையைக் கருதினார். செல்வம் உருவாக்குவதையும், மதிப்புக்கூட்டலையும் அவர் பெரிதும் மதித்தார். தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம், சிந்திரி உரத் தொழிற்சாலை மற்றும் வலுவான தொழில் கொள்கை போன்ற முன்னோடி முன்முயற்சிகள் மூலம் நவீன தொழில்சார் இந்தியாவின் அடித்தளத்தை அமைத்த அதே வேளையில், இந்தியாவின் பாரம்பரிய வலிமைகளும் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை அவர் உறுதி செய்தார். கைத்தறித் துறை, குடிசைத் தொழில்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் துறைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு அவர் ஒரு உறுதியான ஆதரவாளராகத் திகழ்ந்தார்.

ஒரு தனிப்பட்ட அனுபவத்தை இங்கு நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சுயசார்பு என்ற தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் டாக்டர் முகர்ஜி நிறுவிய சிந்திரி ஆலை, பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தது. அந்த ஆலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் வாய்ப்பு எங்கள் அரசிற்குக் கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது உண்மையிலேயே மிகவும் சிறப்பான தருணங்களில் ஒன்றாகும்.

நீண்ட காலமாகவே இந்தியாவின் நாகரிக மரபு, உரையாடல்களையும் விவாதங்களையும் போற்றி வந்துள்ளது. டாக்டர் முகர்ஜி, இந்த ஜனநாயக உணர்வின் அடையாளமாகத் திகழ்ந்தார். தொடக்கக் காலங்களில், தேசத்தைக் கட்டமைக்கும் பணி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று கருதி, அவர் பண்டித நேருவின் அமைச்சரவையில் இணைந்தார். அவர் நேர்மையுடனும் ஆக்கபூர்வமான மனப்பான்மையுடனும் பணியாற்றினார். ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் வேறுபட்ட அணுகுமுறை தேவை என்று உணர்ந்தபோது, ​​அவர் கண்ணியத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், நாட்டிற்குத் தேவை என்று தான் நம்பிய அரசியல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
75 ஆண்டுகளுக்கு முன், பண்டித நேரு கொண்டுவந்த முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், பேச்சுரிமையின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்தது. இது குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் டாக்டர் முகர்ஜியும் ஒருவர். காங்கிரஸ் கட்சியால் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன் அந்த முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர்கள்தான், 1975-ல் அவசரநிலையை அமல்படுத்தினர். இதுமட்டுமின்றி, 50 ஆண்டுகளுக்கு முன் 42-வது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, தாராளவாத ஜனநாயக மாண்புகளின் அடிப்படையையே மீண்டும் தாக்கினர்.

தனது மனிதாபிமானப் பணிகளுக்காகவும் டாக்டர் முகர்ஜி தனித்து விளங்கினார். 1943-ல் வங்காளத்தில் மிகக் கொடிய பஞ்சம் ஏற்பட்டபோது, ​​பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய்வதில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மக்களுக்கு உணவளிப்பதற்கு, பல்வேறு உணவகங்களும், நிவாரண மையங்களும் திறக்கப்படுவதை அவர் உறுதிசெய்தார். ஒருபுறம் மக்களின் துயரநிலை அவரைக் கடும் வேதனைக்குள்ளாக்கியது. மறுபுறம், காலனித்துவ ஆட்சியாளர்களின் உணர்வற்ற செயல்பாடு அவரை மிகுந்த அதிருப்திக்குள்ளாக்கியது. தனது வேதனையை வெளிப்படுத்தும் வகையில் 'பஞ்சஷர் மான்வந்தர்' என்ற நூலையும் அவர் எழுதினார். 1942-ல் மெதினிப்பூரைத் தாக்கிய கடும் புயலுக்குப் பின், இயல்பு நிலையை மீட்டெடுக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் பரவலாகப் போற்றப்பட்டன.

கொல்கத்தாவில் உள்ள ஒரு கல்லூரியில் உரையாற்றிய டாக்டர் முகர்ஜி, "நீங்கள் எந்தப் பணியை மேற்கொண்டாலும், அதில் முழு ஈடுபாட்டுடனும், முழுமையாகவும், சிறப்பாகவும் செய்யுங்கள்; அப்பணியை அரைகுறையாகவோ மேற்கொள்ளமலோ விட்டுவிடாதீர்கள். உங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்திச் சிறப்பாகச் செய்து முடிக்கும் வரை மனநிறைவு கொள்ளாதீர்கள்", என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறிவரும் வேளையில், அவர் ஆழமாக நம்பிய வலிமையான, ஒற்றுமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் கருணைமிக்க இந்தியாவை உருவாக்க நாள்தோறும் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகச்சிறந்த அஞ்சலியாகும். இன்றைய இளைஞர்களைப் பற்றி நான் நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு அதைச் சரியாகச் செய்து முடிப்பார்கள் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.