77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து இன்று உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, "நமது கனவுகள் நிறைவேற வேண்டுமானால், அது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், ஊழல், உறவுச் சார்பு, வஞ்சகத்தன்மை ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராடுவது காலத்தின் தேவை" என்று வலியுறுத்தியுள்ளார்.
முதல் தீமையான ஊழல் என்பதுதான் நமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். ஊழலில் இருந்து விடுதலை, ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிரானப் போராட்டம் என்பது காலத்தின் தேவையாகும். நாட்டுமக்களே, எனதருமை குடும்ப உறுப்பினர்களே, இது மோடியின் உறுதிப்பாடு, ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன் என்ற எனது தனிப்பட்ட உறுதிப்பாடு" என்று பிரதமர் கூறினார்.
இரண்டாவதாக, வாரிசு அரசியல் என்பது நமது நாட்டை சீரழித்துவிட்டது என்று பிரதமர் தெரிவித்தார். "இந்த வாரிசு அமைப்பு முறை நாட்டைக் கவ்விப் பிடித்து, நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.
மூன்றாவது தீமை வஞ்சகத்தன்மை என்று திரு மோடி கூறினார். "இந்த வஞ்சகத்தன்மை என்பது நாட்டின் அடிப்படை சிந்தனையை, நமது இணக்கமான தேசியப் பண்பைக் களங்கப்படுத்திவிட்டது. இத்தகையவர்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். எனவே, இந்த மூன்று தீமைகளுக்கு எதிராக நாம் நமது முழு சக்தியுடன் போராட வேண்டும். ஊழல், உறவுச்சார்பு, வஞ்சகத்தன்மை என்ற சவால்கள் நமது நாட்டு மக்களின் விருப்பங்களை நசுக்கும் வகையில் வேர்விட்டு வளர்ந்துள்ளன”.
இந்தத் தீமைகள் சிலர் எவ்வளவுதான் திறமைசாளிகளாக இருந்தாலும் அவர்களின் திறமைகளைக் கொள்ளையடிக்கின்றன என்றும் அவர் கூறினார். இவை தான் நமது மக்களின் நம்பிக்கைகளை, விருப்பங்களைக் கேள்விக்குறியாக்குகின்றன. ஏழை மக்களாக இருந்தாலும் சரி, தலித் மக்களாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களில் பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பழங்குடி சகோதர சகோதரிகளாக இருந்தாலும் சரி, நமது தாய்மார்களாக இருந்தாலும் சரி, சகோதரிகளாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் நமது உரிமைகளுக்காக இந்த மூன்று தீமைகளில் இருந்து விடுபட வேண்டும்.
ஊழலைத் தாக்கிப் பேசிய பிரதமர், "ஊழலுக்கு எதிரான வெறுப்புச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். பொதுவாழ்வில் இதை விட பெரிய தீமை எதுவும் இருக்க முடியாது. ஊழலை ஒழிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார். பல்வேறு திட்டங்களிலிருந்து 10 கோடி போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டதாகவும், நிதி மோசடி செய்தவர்களின் 20 மடங்கு மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வாரிசு அரசியல், உறவுச் சார்பு பற்றிப் பிரதமர், கடுமையாக விமர்சித்தார். அரசியல் கட்சிகளின் வாரிசு அரசியல் என்பது குடும்பத்தால், குடும்பத்திற்காக என்றாகி திறமைகளைக் கொல்வதாகப் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். இந்தத் தீமையிலிருந்து ஜனநாயகம் விடுபட வேண்டியது அவசியம் என்றார்.
அதே போல், சமூகநீதியையும் வஞ்சகத்தன்மை பெருமளவு சிதைத்துவிட்டது. வஞ்சகத்தன்மையின் சிந்தனையும் அரசியலும், வஞ்சகத்தன்மைக்கான அரசுத் திட்டங்களின் மாதிரியும் சமூகநீதியைக் கொன்றுவிட்டன. அதனால்தான் வஞ்சகத்தன்மையும் ஊழலும் வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரிகளாகப் பார்க்கப்படுகின்றன. நாடு வளர்ச்சியடைய விரும்பினால், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற விரும்பினால், எந்தச் சூழ்நிலையிலும் நாட்டில் ஊழலை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது, இந்த மனநிலையுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று திரு மோடி கூறினார்.
भ्रष्टाचार, परिवारवाद और तुष्टिकरण, हमें इन तीन बुराइयों के खिलाफ पूरे सामर्थ्य के साथ लड़ना होगा। pic.twitter.com/4It6AuWvlC
— Narendra Modi (@narendramodi) August 15, 2023


