குஜராத்தில் ரயில்வே துறை சார்ந்த பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கிவைத்தார்
திரு எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்
கெவாடியா, உலகின் மிகப்பெரும் சுற்றுலாத்தலமாக வளர்ந்துள்ளது: பிரதமர்
இலக்கை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளின் வாயிலாக இந்திய ரயில்வே மாற்றத்தை சந்தித்து வருகின்றது: பிரதமர்

வணக்கம்! ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கருத்தியலுக்கான மிக அழகிய தோற்றம் இங்கு இன்று காணப்படுகிறது. இன்றைய இந்த நிகழ்ச்சி பரந்த வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ் விரத் ,முதலமைச்சர் திரு விஜய் ரூபானி ஆகியோர் கெவாடியாவில் இருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். குஜராத் சட்டப்பேரவைத் தலைவர் திரு. ராஜேந்திர திரிவேதி பிரதாப்கரில் கலந்து கொண்டிருக்கிறார். குஜராத் துணை முதலமைச்சர் திரு நிதின் பட்டேல் அகமதாபாத்திலிருந்தும், எனது அமைச்சரவை சகாக்கள் திரு பியூஷ் கோயல், திரு எஸ். ஜெய்சங்கர், டாக்டர் ஹர்ஷவர்தன், தில்லி முதலமைச்சர் சகோதரர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தில்லியிலிருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம் ரேவாவில் இருந்து அம்மாநில முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், மும்பையிலிருந்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே, வாரணாசியில் இருந்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இது தவிர, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் மாண்புமிகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரமாண்டமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். சர்தார் வல்லபாய் பட்டேலின் குடும்ப உறுப்பினர்கள் ஆனந்தில் இருந்து கலந்து கொண்டு நம்மை வாழ்த்த வந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். விளையாட்டு சார்ந்த ஏராளமான நட்சத்திரங்களும் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். பிரகாசமான எதிர்கால இந்தியாவின் பிரதிநிதிகளாக இங்கே கலந்து கொண்டிருக்கும் நமது சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் ஆகியோரை கடவுளின் வடிவத்தில் காண்கிறேன். அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

இன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே இடத்திற்கு பல ரயில்கள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டிருப்பது ரயில்வே வரலாற்றில் இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும். கெவாடியா அத்தகைய சிறப்பு மிக்க இடமாகும். ‘ ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற மந்திரத்தின் மூலம் நாட்டை ஒன்றுபடுத்திய சர்தார் பட்டேலின் உலகின் மிக அதிக உயரமான ஒற்றுமை சிலை மூலம் இது அறியப்படுகிறது. ரயில்வேயின் தொலைநோக்குப் பார்வையையும், சர்தார் பட்டேலின் குறிக்கோளையும் இன்றைய நிகழ்வு நிறைவேற்றியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கெவாடியா சென்றடையும் ரயில்களுள் ஒன்று புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. பாரத ரத்னா விருது பெற்ற எம்ஜிஆரின் பிறந்தநாளும் இன்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படத்துறையிலும், அரசியலிலும் சாதனை படைத்த அவர் மக்களின் மனங்களை இன்னும் ஆட்சி செய்கிறார். எம்ஜிஆரின் அரசியல் பயணம் முழுவதும் ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உருவாக்க அவர் அயராது உழைத்தார். அவரது குறிக்கோள்களைப் பூர்த்தி செய்யும் வகையில் நாம் பணியாற்றி வருகிறோம். அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்டியது நினைவிருக்கலாம். பாரதரத்னா எம்.ஜி.ஆருக்கு தலை வணங்குகிறேன். அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

நண்பர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கெவாடியாவுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைத்துள்ள இத்தருணம் பெருமைமிக்கதாகும். சிறிது நேரத்துக்கு முன்பு, சென்னை, வாரணாசி, ரேவா, தாதர், மற்றும் தில்லியிருந்து கெவாடியா விரைவு ரயிலும், அகமதாபாத்தில் இருந்து ஜன சதாப்தி விரைவு ரயிலும் கெவாடியாவுக்கு புறப்பட்டுள்ளன. இதேபோல, கெவாடியா, அகமது நகர் இடையே ஒரு இணைப்பு ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. கெவாடியா- பிரதாப் நகர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவைகள், தபோய்- சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை ஆகியவை கெவாடியாவின் வளர்ச்சி என்னும் புதிய அத்தியாயத்திற்கு வடிவம் கொடுக்கும். இதன்மூலம் சுயவேலைவாய்ப்பும், வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இது உள்ளூர் பழங்குடி மக்கள் பயனடைவார்கள். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள நம்பிக்கையூட்டும் பகுதிகளாகக் கருதப்படும் கர்னாலி, போய்சா, கருடேஷ்வர் ஆகியவையும் இணைக்கப்படும்.

சகோதர, சகோதரிகளே, இன்று கெவாடியா ஏதோ ஒரு தொலைதூர பகுதியின் சிறிய இடம் என்று நினைக்க முடியாத அளவுக்கு உலகளவில் மிகப் பெரும் சுற்றுலாத்தலமாக வளர்ச்சி அடைந்துள்ளது. சுதந்திர தேவி சிலையைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட ஒற்றுமை சிலையைக் காண அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஒற்றுமை சிலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதிலிருந்து 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். கொரோனா பரவல் மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இணைப்புகள் மேம்படுத்தப்பட்ட பிறகு கெவாடியாவிற்கு சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சி மற்றும் சூழலியலின் சிறப்பான எடுத்துக்காட்டாக இந்தச் சிறிய, அழகிய கெவாடியா விளங்குகிறது.

 

நண்பர்களே, முதன்முதலில் கெவாடியாவை முக்கிய சுற்றுலாத்தலமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அது ஒரு கனவாகத் தோன்றியது. சாலை இணைப்புகள், தெரு விளக்குகள், ரயில், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான இடங்கள் ஆகியவை இல்லாததே இவ்வாறு எண்ணுவதற்குக் காரணமாக இருந்தன. ஆனால் தற்போது முழு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று கெவாடியா பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. ஒற்றுமை சிலை, சர்தார் சரோவர், பரந்த சர்தார் பட்டேல் உயிரியல் பூங்கா, ஆரோக்கிய வனம் மற்றும் வனப் பயணம், ஊட்டச்சத்து பூங்கா ஆகிய சுற்றுலாத் தலங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. மின் விளக்குகளால் ஜொலிக்கும் தோட்டம், ஒற்றுமை படகு சேவை, நீர் விளையாட்டுகள் ஆகியவையும் உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பதை அடுத்து, பழங்குடி இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இதனால், உள்ளூர் மக்களுக்கு நவீன வசதிகள் கிடைக்கின்றன. ஒற்றுமை வணிக வளாகத்தில் உள்ளூர் கைவினைப் பொருட்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பழங்குடி கிராமங்களில் தங்குவதற்காக 200 அறைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கெவாடியா ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அமைந்துள்ள பழங்குடி கலைக்கூடம், பார்வையிடும் கூடத்திலிருந்து ஒற்றுமை சிலையைக் காணலாம்.

நண்பர்களே, இலக்கை மையமாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் இந்திய ரயில்வேயில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தலங்களையும் ரயில்வே நேரடியாக இணைத்து வருகிறது. அகமதாபாத்-கெவாடியா ஜன்சதாப்தி உள்ளிட்ட ஏராளமான ரயில்களில் வான் பகுதியைப் பார்வையிடும் வகையிலான கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய கண்கவர் ‘விஸ்தா – டூம் சுற்றுலாப் பெட்டிகள்’ இடம்பெறும்.

ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அணுகுமுறையிலும் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள உள்கட்டமைப்பை இயக்குவதில் மட்டுமே முன்னதாக கவனம் செலுத்தப்பட்டது. புதிய சிந்தனைகள் அல்லது புதிய தொழில்நுட்பங்களில் போதிய அக்கறை காட்டப்படவில்லை. இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமானது. அண்மைக் காலங்களில் முழு ரயில்வே துறையிலும் விரிவான மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நிதி மற்றும் புதிய ரயில்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் நில்லாமல், ஏராளமான பிரிவுகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பலதரப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் குறுகிய நேரத்தில் நிறைவேற்றப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

நண்பர்களே, பிரத்தியேக சரக்கு போக்குவரத்து வழித்தடம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும். இது, முந்தைய காலங்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையின் காரணமாக சாத்தியமாகியுள்ளது. கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய பிரத்தியேக சரக்குப் போக்குவரத்து வழித்தடங்கள் அண்மையில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. இத்திட்டத்திற்காக 2006-2014-ஆம் ஆண்டு வரையில் ஒரு கிலோமீட்டர் தூரம் கூட சரக்கு ரயில் பாதை அமைக்கப்படவில்லை. தற்போது மொத்தம் 1100 கிலோமீட்டர் தூரப் பணிகள் வரும் சில நாட்களில் நிறைவடைய உள்ளன.

நண்பர்களே, நாட்டில் இதுவரை ரயில்வேயால் இணைக்கப்படாத பகுதிகள் தற்போது இணைக்கட்டு வருகின்றன. அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளும், மின்மயமாக்கல் பணிகளும் வேகமாகவும், உத்வேகத்துடனும் நடைபெறுகின்றன. அதிவிரைவு ரயில்களை இயக்குவதற்கான தண்டவாளங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக ஓரளவு அதிவிரைவு ரயில்களை இயக்குவது சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. அதிவிரைவு ரயில்களின் இயக்கத்தை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். இதற்காக பன்மடங்கு நிதி உயர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ரயில்வே செயல்பட உறுதி செய்யப்பட்டுள்ளது. பசுமைக் கட்டிட சான்றிதழுடன் நிறுவப்படும் நாட்டின் முதல் ரயில் நிலையம் என்ற பெருமையை கெவாடியா நிலையம் பெற்றுள்ளது.

சகோதர, சகோதரிகளே, ரயில்வே தொடர்பான உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் தற்சார்பு அடைவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த முயற்சியில் நல்ல பலன் கிடைத்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் அதிக குதிரை திறன் கொண்ட மின்சார இன்ஜின்களின் வாயிலாக உலகின் முதல் இரட்டை அடுக்குப் பெட்டக ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ரயில்கள் தற்போது இந்திய ரயில்வேயில் இயக்கப்பட்டு வருகின்றன.

நண்பர்களே, ரயில்வேயில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திறமைவாய்ந்த, சிறந்த மனித ஆற்றலும், தொழில் வல்லுனர்களும் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த தேவைதான் வதோதராவில் நிகர்நிலை ரயில்வே பல்கலைக்கழகத்தை உருவாக்க உந்துசக்தியாக இருந்தது. இதுபோன்ற பிரத்யேக நிறுவனங்கள் அமைந்துள்ள ஒரு சில நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. ரயில் போக்குவரத்து, பல்முனை ஆராய்ச்சி, பயிற்சி ஆகிய துறைகளில் நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய மற்றும் எதிர்கால ரயில்வே துறையை சரியான பாதையில் செலுத்துவதற்காக 20 மாநிலங்களைச் சேர்ந்த திறமையான இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. புதுமை, ஆராய்ச்சி வாயிலாக ரயில்வே துறையை நவீன மயமாக்க இது உதவிகரமாக இருக்கும்.

இந்திய ரயில்வே, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. புதிய ரயில்வே வசதிகளுக்காக, குஜராத் உள்ளிட்ட நாடு முழுவதையும் நான் வாழ்த்துகிறேன். ஒற்றுமை சிலை அமைந்துள்ள இந்தப் புனித தலத்துக்கு, பல்வேறு மொழி பேசும், பல்வேறு உடைகளை அணிந்த, இந்தியாவின் மூலை, முடுக்குகளைச் சேர்ந்தவர்கள் வரும் போது, அதில் இந்தியாவின் ஒற்றுமையைக் காணலாம். சர்தார் சாகேப்பின் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதற்கு ஏற்ப ஒரு சிறிய இந்தியாவை இங்கு நாம் காணமுடியும். கெவாடியாவுக்கு இன்று ஒரு சிறப்பு தினம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காப்பதற்கு மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. மீண்டும் ஒரு முறை ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன்.

நன்றிகள் பல!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How PM Modi Turned India's Ordnance Factories Into Atmanirbhar Powerhouse

Media Coverage

How PM Modi Turned India's Ordnance Factories Into Atmanirbhar Powerhouse
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister meets Trustees of Indira Gandhi National Centre for the Arts
March 19, 2026

Prime Minister Shri Narendra Modi met with the Trustees of the Indira Gandhi National Centre for the Arts (IGNCA) today to discuss various aspects relating to further popularising India’s diverse culture.

The Prime Minister met Trustees of the Indira Gandhi National Centre for the Arts and explored ways to bring more people into the journey of cultural promotion. During the interaction, the Prime Minister and the Trustees discussed strengthening outreach through digital and grassroots initiatives, and emphasized the importance of supporting artists and scholars in preserving and promoting India's rich heritage.

The Prime Minister wrote on X:

"Met Trustees of IGNCA and discussed various aspects relating to further popularising India’s diverse culture. We also explored ways to bring more people into this journey, strengthen outreach through digital and grassroots initiatives and support artists and scholars in preserving and promoting our rich heritage."