எனதருமை 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, 

 

உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் அதே போல்   மக்கள் தொகை பின்னணியிலும் நாம் முதலாவது இடத்தில்  இருப்பதாக நம்பிக்கைக் கொண்டுள்ளோம். அத்தகைய மகத்தான தேசம் இன்று தனது 140 கோடி சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் சுதந்திரத் திருநாளைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான, புனிதமான தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், நமது தேசமான இந்தியாவை நேசிக்கும், மதிக்கும் மற்றும் பெருமை கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

ஒத்துழையாமை, / சட்டமறுப்பு / சத்தியாகிரக இயக்கம் ஆகியவற்றில் நமது 'பூஜ்யபாபு' என போற்றப்படும் மதிப்பிற்குரிய மகாத்மா காந்தியடிகள், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்ற மாவீரர்கள் மற்றும் அவர்களின் தலைமுறையினர் என நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களிக்காதவர்களே இருக்க முடியாது.  நமது சுதந்திரப் போராட்டத்தின் போது பங்களித்த மற்றும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த அனைவருக்கும் இன்று நான் மரியாதையுடன் அஞ்சலி செலுத்துகிறேன். எங்களுக்கு ஒரு சுதந்திர தேசத்தை வழங்கியதில் அவர்களின் தியாகத்திற்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன்.

 

ஆகஸ்ட் 15-ம் நாளான இன்று, ஆன்மீக வாழ்க்கையின் மாபெரும் புரட்சியாளரும் முன்னோடியுமான ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த நாளாகும். சுவாமி தயானந்த சரஸ்வதியின் 150-வது பிறந்த நாளும் ஆகும். இந்த ஆண்டு நமது தேசம், புகழ்பெற்ற பெண் போராளி ராணி துர்காவதியின் 500-வது பிறந்த நாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடவிருக்கிறது. ஆன்மீகத்தில் திளைத்த மீராபாய் வாழ்க்கையின் 525-வது ஆண்டு நிறைவையொட்டி, 'பக்தி மற்றும் யோகத்தின்' முன்னோடியான மீராபாயையும் நாம் நினைவுகூர்வோம். நமது நாடு அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று 75-வது ஆண்டின் தொடக்கத்தைக் கொண்டாட உள்ளது. புதிய உத்வேகங்கள், புதிய மனஉணர்வு, புதிய தீர்மானங்கள் ஆகியவற்றுடன், நாடு ஏராளமான சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கும் நாளைவிட, தேச வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பதற்கு ஒரு பெரிய நாள் வேறு இருக்காது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

துரதிர்ஷ்டவசமாக, இந்த முறை இயற்கைப் பேரழிவு நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத துயரத்தை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் நான் அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து அனைத்துப் பிரச்சனைகளையும் விரைவில் தீர்க்கும் என்று உறுதியளிக்கிறேன்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

கடந்த சில வாரங்களில், குறிப்பாக வடகிழக்கில் உள்ள மணிப்பூரிலும், இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும், ஏராளமான வன்முறைகள் நடந்துள்ளன, அங்கு பலர் உயிர் இழந்துள்ளனர். மேலும் தாய்மார்கள் மற்றும் மகள்களின் கண்ணியம் காக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த சில நாட்களாக, அமைதி குறித்த தொடர்ச்சியான செய்திகளை நாங்கள் கேட்டு வருகிறோம். முழு தேசமும் மணிப்பூர் மக்களுக்கு ஆதரவாக உள்ளது. மணிப்பூர் மக்கள் கடந்த சில நாட்களாக அமைதியைக் கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த அமைதியை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ஏனெனில் இது தீர்வுக்கான பாதை. இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது, அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் செல்லும் தருணங்கள் உள்ளன. அவற்றின் தாக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடிக்கும். சில நேரங்களில், இந்த நிகழ்வுகள் தொடக்கத்தில் சிறியதாகவும் முக்கியமற்றதாகவும் தோன்றலாம், ஆனால் அவை பல சிக்கல்களுக்கான வேர்களை உருவாக்குகின்றன. 1000-1200 ஆண்டுகளுக்கு முன் நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  ஒரு சிறிய ராஜ்யமும் அதன் மன்னரும் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வு, இந்தியாவை ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் அறிந்திருக்க முடியாது. நாம் அடிமைத்தனத்தில் சிக்கிக் கொண்டோம், யார் வந்தாலும், நம்மைக் கொள்ளையடித்து, நம்மை ஆட்சி செய்தார்கள். அந்த ஆயிரம் ஆண்டு காலம் எவ்வளவு மோசமான காலகட்டமாக இருந்திருக்க வேண்டும்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

ஒரு நிகழ்வு சிறியதாகத் தோன்றலாம், ஆனால் அதன் விளைவுகள் ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். இன்று, நான் இதைக் குறிப்பிட விரும்புவது ஏனென்றால், இந்தக் காலக்கட்டத்தில், நாடு முழுவதம் உள்ள துணிச்சலான இந்தியாவின் ஆன்மாக்கள் சுதந்திரத்தின் சுடரை தொடர்ந்து கொண்டு செல்கின்றன, தியாக பாரம்பரியத்தை நிலை நிறுத்துகின்றன. சங்கிலிகளை உடைக்கவும், தளைகளைத் தகர்க்கவும் பாரதத்தாய் எழுந்து நின்றாள். சுதந்திரத்தை அடைவதற்கான தியாகங்களுக்கு மகளிர் சக்தி, இளையோர் சக்தி, கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சுதந்திரக் கனவுக்காக வாழ்ந்த, சுவாசித்த, போராடிய ஒவ்வொரு இந்தியரும் ஒரு வலிமையான சக்தியாக தயாராக இருந்தனர். தமது இளமைப் பருவத்தை சிறைகளில் கழித்த எண்ணற்ற மகான்கள், அடிமைச் சங்கிலிகளை உடைக்கவும், நாட்டின் விடுதலைக்காகவும் அயராது பாடுபட்டனர்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

தியாகம் மற்றும் தவத்தின் அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கிய அந்தப் பரவலான உணர்வு, பொதுமக்களின் இதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்தது. இதனால் இறுதியாக 1947 ஆம் ஆண்டில், நாடு சுதந்திரம் பெற்றது, ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தின் போது மேலெழுந்த கனவுகளை நிறைவேற்றியது.

 

நண்பர்களே,

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைப் பற்றி நான் ஒரு காரணத்திற்காகவே பேசுகிறேன். ஏற்கனவே, நாம் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தைப் போல், நம் நாட்டின் முன் இன்றைய காலத்தில் மற்றொரு வாய்ப்பைக் காண்கிறேன். இளமையான காலத்தில் நாம் வாழ்கிறோம் அல்லது 'அமிர்த காலத்தின்' முதல் ஆண்டில் பாரத அன்னையின் மடியில் தவழ்கிறோம் என்பது நமது நல்வாய்ப்பாகும். எனது அருமை குடும்ப உறுப்பினர்களே, நாம் மேற்கொள்ளும் செயல்கள், நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நாம் செய்யும் தியாகங்கள், இந்த சகாப்தத்தில் நாம் மேற்கொள்ளும் தவம் ஆகியவை நமது பாரம்பரியத்தை வரையறுக்கும் என்ற எனது வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.

 

அனைவருக்கும் மகிழ்ச்சி, அனைவருக்கும் ஆரோக்கியம்; ஒன்றன்பின் ஒன்றாக நாம் முடிவுகளை எடுப்போம். அடுத்த 1000 ஆண்டுகளுக்கான நாட்டின் பொற்கால வரலாறு அதிலிருந்து வெளிவரவிருக்கிறது.  இந்தக் காலக்கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் அடுத்த 1000 ஆண்டுகளில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளன. அடிமை மனப்பான்மையில் இருந்து மீண்டு,  ஐந்து உறுதிமொழிகளுக்கு அர்பணித்துக் கொண்டுள்ள நாடு, இன்று புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. புதிய தீர்மானங்களை நிறைவேற்ற முழு மனதுடன் நாடு செயல்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சக்தியின் மையமாக இருந்த, ஆனால் சாம்பல் குவியலுக்கு அடியில் புதையுண்ட எனது பாரதத்தாய், 140 கோடி மக்களின் முயற்சியாலும், விழிப்புணர்வாலும், ஆற்றலாலும் மீண்டும் விழித்தெழுந்திருக்கிறாள். கடந்த 9-10 ஆண்டுகளில் இந்தியா மீது, இந்தியாவின் ஆற்றலை நோக்கி உலகம் முழுவதும் ஒரு புதிய நம்பிக்கையும், ஒரு புதிய ஈர்ப்பும் உருவாகியுள்ளது என்பதை நாம் அனுபவம் கொண்டுள்ளோம். இந்தியாவில் இருந்து வெளிப்படும் இந்த ஒளிக்கற்றையில் உலகம் தனக்கான ஒரு தீப்பொறியைக் காண முடியும். உலகம் முழுவதும் ஒரு புதிய நம்பிக்கை வளர்ந்து வருகிறது.

 

நம் மூதாதையர்களிடமிருந்து சில விஷயங்களைப் பெற்றிருப்பதாலும், தற்போதைய சகாப்தம் கூட வேறு சில விஷயங்களை உருவாக்கியுள்ளதாலும் நாம் அதிர்ஷ்டசாலிகள். இன்று நம்மிடம் மக்கள்தொகை உள்ளது; நம்மிடம் ஜனநாயகம் உள்ளது; நம்மிடம் பன்முகத்தன்மை உள்ளது. மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத்தன்மை என்ற மும்மூர்த்திகள் இந்தியாவின் ஒவ்வொரு கனவையும் நிறைவேற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நாடுகள் வயதான கட்டமைப்பை இன்று கண்டு வரும் நிலையில், இந்தியா தனது இளமையான கட்டமைப்பை நோக்கி சுறுசுறுப்பாக நகர்ந்து வருகிறது. இது மிகவும் பெருமைக்குரிய காலமாகும். ஏனெனில் இந்தியா இன்று 30 வயதிற்குட்பட்ட மக்கள் தொகையை அதிகமாகக் கொண்டுள்ளது. இதைத்தான் எனது நாடு கொண்டுள்ளது. 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள்; எனது நாடு கோடிக்கணக்கான கைகளை, கோடிக்கணக்கான மூளைகளை, கோடிக்கணக்கான கனவுகளை, கோடிக்கணக்கான தீர்மானங்களைக் கொண்டுள்ளது! எனவே, எனது சகோதர சகோதரிகளே, எனது குடும்ப உறுப்பினர்களே,  நாம் விரும்பிய விளைவுகளை அடையலாம்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

இதுபோன்ற சம்பவங்கள் நாட்டின் நிலையை மாற்றுகின்றன. இந்த ஆற்றல் நாட்டின் நிலையை மாற்றுகிறது. 1000 ஆண்டுகால அடிமைத்தனத்திற்கும் வரவிருக்கும் 1000 ஆண்டு மகத்தான எதிர்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தை நாம் எட்டியுள்ளோம். நாம் இந்த வழித்தடத்தில் இருக்கிறோம். எனவே, நாம் இடையில்  நிற்கவும் முடியாது, ஊசலாட்டத்தில் இருக்கவும் முடியாது.

 

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

ஒரு காலத்தில் இழந்த பாரம்பரியத்தின் மீது பெருமிதம் கொண்டு, இழந்த செழிப்பை மீண்டும் பெறுவோம், நாம் என்ன செய்தாலும், எந்த நடவடிக்கை எடுத்தாலும், எந்த முடிவை மேற்கொண்டாலும், அது அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நமது திசையைத் தீர்மானிக்கும்; இந்தியாவின் தலைவிதியை எழுதும் என்று மீண்டும் நம்புவோம் என்பதை இன்று நான் எனது நாட்டின் இளைஞர்களுக்கு, எனது நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்போது நமது இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு மிகவும் அரிதானது.  எனவே, நாம் அதனை இழக்க விரும்பவில்லை. நமது இளைஞர் சக்தி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நமது இளைஞர் சக்தியில் மிகப் பெரிய சாத்தியக்கூறுகள் / திறன்கள் உள்ளன. எமது கொள்கைகளும் எமது வழிகளும் அவற்றை வலுப்படுத்துவதற்கான சூழலை வழங்குகின்றன.

 

இன்று எனது இளைஞர்கள் உலகின் முதல் மூன்று ஸ்டார்ட்-அப் பொருளாதார அமைப்புகளில் இந்தியாவை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தியாவின் இந்த சக்தியை கண்டு உலக இளைஞர்கள் வியந்து போயுள்ளனர். இன்று உலகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, வரவிருக்கும் சகாப்தம் தொழில்நுட்பத்தால் செல்வாக்கு செலுத்தப்படவுள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமையை வெளிப்படுத்த இது ஒரு தளத்தை வழங்குகிறது. இது ஒரு புதிய முக்கியமான பங்களிப்பை செலுத்தவிருக்கிறது.

 

நண்பர்களே,

 

அண்மையில், ஜி-20 உச்சிமாநாட்டிற்காக நான் பாலிக்குச் சென்றிருந்தேன். அங்கு நமது டிஜிட்டல் இந்தியாவின் நுணுக்கங்கள் மற்றும் வெற்றியைப் பற்றி அறிந்துகொள்ள உலகின் மிகவும் வளமான மற்றும் வளர்ந்த நாடுகளின் பிரதமர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்தியா சாதித்துள்ள இந்த வியத்தகு சாதனை தில்லி, மும்பை, சென்னை இளைஞர்களின் முயற்சிகளுடன் நின்றுவிடவில்லை, 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களின் இளைஞர்களாலும்தான் என்று நான் பகிர்ந்து கொண்டபோது அவர்கள் நமது திறமையைப் பார்த்து பிரமித்துப் போனார்கள்.  இன்று எமது இளைஞர்கள் சிறிய இடங்களிலிருந்து கூட, நாட்டின் புதிய ஆற்றலைக் காண்கிறார்கள் என்பதை நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன். அதனால்தான் நான் சொல்கிறேன், நமது சிறிய நகரங்கள் அளவிலும் மக்கள்தொகையிலும் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை வெளிப்படுத்திய நம்பிக்கை மற்றும் விருப்பங்கள், முயற்சி மற்றும் தாக்கம் எதுவும் சிறியதாக இல்லை. பயன்பாடுகளை உருவாக்குவதற்கும், தீர்வுகளை வழங்குவதற்கும், தொழில்நுட்ப சாதனங்களை வடிவமைப்பதற்கும் அவர்கள் புதுமையான யோசனைகளைக் கொண்டுள்ளனர். நமது விளையாட்டு உலகம் எப்படி வளர்ந்துள்ளது பாருங்கள். குடிசைப் பகுதிகளிலிருந்து வெளியே வந்த குழந்தைகள் இன்று விளையாட்டு உலகில் வலிமையைக் காண்பிக்கிறார்கள். இப்போது பாருங்கள், சிறிய கிராமங்கள், சிறு நகரங்களைச் சேர்ந்த, நமது மகன்கள், மகள்கள் இந்த அரங்கில் இன்று அதிசயங்களை நிகழ்த்தி வருகின்றனர். நம் நாட்டில் 100 பள்ளிகளில் சிறார்கள், செயற்கைக்கோள்களை உருவாக்குகிறார்கள். அவற்றை ஒரு நாள் விண்ணில் ஏவவும் விரும்புகிறார்கள். இன்று ஆயிரக்கணக்கான டிங்கரிங் ஆய்வகங்கள் புதிய விஞ்ஞானிகளை உருவாக்குகின்றன. இன்று, ஆயிரக்கணக்கான டிங்கரிங் ஆய்வகங்கள் லட்சக்கணக்கான குழந்தைகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாதையைத் தேர்வு செய்ய ஊக்குவிக்கின்றன.

 

இன்று வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை, நீங்கள் விரும்பும் அளவுக்கு, இந்த நாடு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை எனது நாட்டின் இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். வானமே எல்லை.

 

செங்கோட்டை கொத்தளத்திலிருந்து, எனது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் சிறப்புத் திறமை மற்றும் போட்டித் தன்மையால், நமது நாடு இன்று ஒரு சிறப்பான நிலையை எட்டியுள்ளது. இன்று நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது. எனவே எனது விவசாய சகோதர சகோதரிகளையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இன்று என் நாட்டுத் தொழிலாளர்களுக்கும், சகோதரத்துவம் கொண்ட பல கோடி மக்களுக்கும் தலைவணங்குகிறேன்.  இன்று, நவீனத்தை நோக்கி நகரும் நாடு, உலகத்திற்கு நிகரான சக்தியுடன் காணப்படுகிறது. என் நாட்டுத் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. அவர்களின் அயராத முயற்சிகளை செங்கோட்டையில் இருந்து பாராட்ட சரியான தருணம் இது. அவர்கள் அனைவரையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

 

எனது குடும்ப உறுப்பினர்களையும், எனது நாட்டின் 140 கோடி மக்களையும், தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் விற்பவர்களையும் நான் மதிக்கிறேன். எனது நாட்டை முன்னோக்கி நகர்த்துவதிலும், இந்தியாவை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதிலும் தொழில் வல்லுநர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், பல்கலைக்கழகங்கள், குருகுலங்கள் என அனைவரும் பாரதத்  தாயின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க தங்களால் இயன்ற பங்களிப்பை செய்து வருகின்றனர்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

தேசிய உணர்வு என்பது கவலைகளிலிருந்து நம்மை விடுவிக்கும் சொல்லாகும். இன்று, இந்த தேசிய உணர்வு இந்தியாவின் மிகப்பெரிய பலம் நம்பிக்கை என்பதை நிரூபித்து வருகிறது. ஒவ்வொரு தனிநபரின் மீதான நம்பிக்கை, அரசின் மீது ஒவ்வொரு நபரின் நம்பிக்கை, தேசத்தின் ஒளிமயமான எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் நம்பிக்கை மற்றும் இந்தியா மீதான உலகின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை எங்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கானது. இந்த நம்பிக்கைக்கு காரணம், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னெடுத்துச் செல்லும் உறுதியான நடவடிக்கைகளே ஆகும்.

 

சகோதர சகோதரிகளே,

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே, இந்தியாவின் திறன்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் நம்பிக்கையின் புதிய உச்சங்களைக் கடக்கப் போகின்றன என்பது உறுதி. மேலும் திறன்கள் மற்றும் புதிய பலங்கள் மீதான இந்தப் புதிய நம்பிக்கை வளர்க்கப்பட வேண்டும். இன்று, ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு நாட்டிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெற்ற பல்வேறு ஜி-20 நிகழ்வுகள், ஏற்பாடு செய்யப்பட்ட விதம் காரணமாக சாமானிய மக்களின் திறன்களை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன. இந்த நிகழ்வுகள் இந்தியாவின் பன்முகத்தன்மையை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகம் வியப்புடன் கவனித்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியா மீதான ஈர்ப்பும் அதிகரித்துள்ளது. இந்தியாவை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து வருகிறது. அதேபோல், இந்தியாவின் ஏற்றுமதியும் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், இந்த அளவுகோல்களின் அடிப்படையில், இந்தியா இப்போது நிற்காது என்று கூறுகிறார்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவைப் பாராட்டாத எந்த தரவரிசை நிறுவனமும் உலகில் இல்லை.

 

கொரோனா காலத்துக்குப் பிறகு உலகம் புதிய முறையில் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகம் ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கியது போலவே, கொரோனாவுக்குப் பிறகு ஒரு புதிய உலக ஒழுங்கு,  ஒரு புதிய பூகோள-அரசியல் சமன்பாடு வேகமாக முன்னேறி வருவதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். புவிசார்-அரசியல் சமன்பாட்டின் அனைத்து விளக்கங்களும் மாறி வருகின்றன, வரையறைகள் மாறி வருகின்றன. எனதருமை குடும்ப உறுப்பினர்களே, மாறிவரும் உலகை வடிவமைப்பதில் எனது 140 கோடி சக குடிமக்களின் திறன்களை உலகம் காண்கிறது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள். நீங்கள் ஒரு திருப்புமுனையில் நிற்கிறீர்கள்.

 

கொரோனா காலத்தில், இந்திய நாட்டை முன்னோக்கி நகர்த்திய விதத்தில் நமது திறன்களை உலகம் பார்த்துள்ளது. உலகின் விநியோகத் தொடர்கள்  சீர்குலைந்தபோதும், பெரிய பொருளாதாரங்கள் மீது அழுத்தம் ஏற்பட்டபோதும் கூட, உலகின் வளர்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம். அது மனிதனை மையமாகக் கொண்டதாகவும், மனிதாபிமானம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைக் காண முடியும். மனித உணர்வுகளை விட்டுவிட்டு உலக நலனை நம்மால் மேற்கொள்ள முடியாது என்பதை கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது அல்லது உணர வைத்துள்ளது.

 

இன்று இந்தியா வளரும் நாடுகளின் குரலாக மாறி வருகிறது. இந்தியாவின் வளமும், பாரம்பரியமும் இன்று உலகிற்கான வாய்ப்புகளாக மாறி வருகின்றன. நண்பர்களே, உலகப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விநியோகத் தொடரில் இந்தியாவின் பங்களிப்போடு தனக்கான இடத்தையும் இந்தியா பெற்றிருப்பதன் மூலம், இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை உலகில் நிலைத்தன்மைக்கான உத்தரவாதத்தைக் கொண்டு வந்துள்ளது என்று நான் முழு நம்பிக்கையுடன் கூற முடியும். இப்போது நம் மனதிலோ, 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் மனதிலோ, உலக மனதிலோ “இருந்தால்”, “ஆனால்” என்பதெல்லாம் இல்லை. முழு நம்பிக்கை உள்ளது.

 

எனதருமை நாட்டுமக்களே,

 

இப்போது பந்து நமது களத்தில் உள்ளது; இந்த வாய்ப்பை நாம் விட்டுவிடக் கூடாது; இந்த வாய்ப்பை நாம் நழுவவிடக் கூடாது. இந்தியாவில் உள்ள எனது மக்களை நான் பாராட்டுகிறேன், ஏனெனில் எனது நாட்டு மக்கள் பிரச்சினைகளின் வேர்களைப் புரிந்துகொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். எனவே 30 ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல, ஒரு நிலையான, வலுவான அரசு தேவை என்று எனது நாட்டு மக்கள் முடிவு செய்தனர்; முழுப் பெரும்பான்மையுடன் கூடிய அரசு தேவை. எனவே, நாட்டு மக்கள் ஒரு வலுவான, நிலையான அரசை அமைத்தனர். மூன்று தசாப்தங்களாக நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த நிச்சயமற்ற தன்மை, நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் நிர்பந்தங்களிலிருந்து நாடு விடுவிக்கப்பட்டது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்காக காலத்தின் ஒவ்வொரு கணத்தையும், மக்கள் பணத்தின் ஒவ்வொரு பைசாவையும் செலவிடும் ஓர் அரசு இன்று நாட்டில் உள்ளது; எனது அரசு மற்றும் நாட்டு மக்களின் பெருமை ஒரு விசயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நமது ஒவ்வொரு முடிவும், நமது ஒவ்வொரு திசையும் ஒரே அளவுகோலுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதாவது 'தேசம் முதலில்', தொலைநோக்கு மற்றும் நேர்மறையான முடிவுகளைத் தரவிருக்கிறது. நாட்டில் பெரிய அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நீங்கள் ஒரு வலுவான அரசை அமைத்தீர்கள். அதனால்தான் சீர்திருத்தங்களைக் கொண்டு வர மோடிக்கு தைரியம் வந்தது என்று நான் சொல்ல விரும்புகிறேன். சீர்திருத்தங்களைக் கொண்டு வர மோடிக்கு தைரியம் ஊட்டிய அரசை நீங்கள் அமைத்தீர்கள். மோடி ஒன்றன்பின் ஒன்றாக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் அரசின் ஒரு பகுதியாக செயல்படும் எனது அதிகார அமைப்பும்  மக்களும் அவர்களின் கோடிக்கணக்கான கைகளும் கால்களும் 'மாற்றத்திற்காக செயல்பட்டன'. அவர்கள் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றினர், பொதுமக்கள் இணைந்தபோது, மாற்றத்தை மிகத் தெளிவாகக் காண முடிந்தது. அதனால்தான் 'சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்' என்ற இந்த காலக்கட்டம் இப்போது இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. வரவிருக்கும் ஆயிரம் ஆண்டுகளின் அடித்தளத்தை வலுப்படுத்தப் போகும் அந்த சக்திகளை நாட்டிற்குள் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்.

 

உலகிற்கு இளைஞர் சக்தி, இளைஞர் திறன்கள் தேவை. திறன் மேம்பாட்டிற்காக தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம். இது இந்தியாவின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, உலகின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

 

ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கினோம். அந்த அமைச்சகத்தின் அமைப்பை ஆராய்ந்தால், இந்த அரசின் மனதையும் மூளையையும் நீங்கள் மிகவும் நல்ல முறையில் புரிந்து கொள்ள முடியும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீர் சென்றடைவதை உறுதி செய்ய ஜல் சக்தி அமைச்சகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான உணர்திறன் அமைப்புகளை உருவாக்குவதில் நாங்கள் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறோம். நம் நாடு கொரோனாவை தைரியமாக எதிர்கொண்ட பிறகு, உலகம் முழுமையான சுகாதார பராமரிப்பைத் தேடுகிறது; இது காலத்தின் தேவையாகும்.  நாங்கள் ஆயுஷ் தனி அமைச்சகத்தை உருவாக்கினோம், இன்று யோகா மற்றும் ஆயுஷ், உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. உலகத்தின் மீதான நமது அர்ப்பணிப்பு காரணமாக, உலகம் நம்மை உற்று நோக்குகிறது. நம்முடைய இந்தத் திறனை நாமே குறைத்து மதிப்பிட்டால், உலகம் அதை எப்படி ஏற்றுக்கொள்ளும்? ஆனால் இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டபோது, உலகமும் அதன் மதிப்பைப் புரிந்துகொண்டது. மீன்வளத்தையும், நமது பெரிய கடற்கரைகளையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. கோடிக்கணக்கான மீனவ சகோதர, சகோதரிகளின் நலனை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவர்கள் எங்கள் இதயத்தில் உள்ளனர், அதனால்தான் சமூகத்தின் அந்தப் பிரிவினருக்கும் பின்தங்கிய சமூகத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் ஆகியவற்றுக்கு ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம்.

 

நாட்டில் அரசுப் பொருளாதாரத்தின் சில பகுதிகள் உள்ளன. ஆனால் சமூகப் பொருளாதாரத்தின் பெரும் பகுதி கூட்டுறவு இயக்கமாகும். கூட்டுறவு அமைச்சகமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அதன் வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. இதன் மூலம் ஏழைகளிலும் ஏழைகளின் குறைகள் கேட்கப்படுகின்றன. அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அவர்களும் ஒரு சிறிய அலகின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் பங்களிக்க முடிகிறது. ஒத்துழைப்பின் மூலம் செழிப்பான பாதையை நாங்கள் பின்பற்றினோம்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

கடந்த 2014-ம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த நாம், இன்று 140 கோடி நாட்டு மக்களின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைத்து, உலகப் பொருளாதாரத்தில் 5-வது இடத்தை எட்டியுள்ளோம்.  நாடு ஊழலின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்கள் பொருளாதாரத்தை சீரழித்துக் கொண்டிருந்த நேரத்தில், நல்ல நிர்வாகத்தை நாடு மேற்கொண்டது. கசிவுகளைத் தடுத்து, வலுவானப் பொருளாதாரத்தை உருவாக்கியது. ஏழைகளின் நலனுக்காக மேலும் மேலும் பணத்தை  செலவிட  முயற்சி செய்தோம்.  இன்று, நாட்டு மக்களுக்கு  நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாடு பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும்போது, அது கருவூலத்தை மட்டும் நிரப்பாது; அது குடிமக்கள் மற்றும் தேசத்தின் திறனை உருவாக்குகிறது. பணத்தை நேர்மையாக தனது குடிமக்களின் நலனுக்காக செலவிட உறுதிமொழி எடுக்கும் ஓர் அரசு இருந்தால், எந்த விளைவுகளையும் அடைய முடியும்.

 

நமது மூவண்ணக் கொடி சாட்சியாக நிற்கும் இந்த செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து எனது நாட்டு மக்களுக்கு 10 ஆண்டுகளின் கணக்கை அளிக்கிறேன். நீங்கள் கேட்கும் புள்ளிவிவரங்கள் மாற்றத்தின் அழுத்தமான கதையைச் சொல்கின்றன. மேலும் இது எவ்வாறு அடையப்பட்டது, இத்தகைய மாற்றத்தை எளிதாக்குவதற்கான எங்கள் திறன் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து நீங்கள் வியப்படையலாம். 10 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசிடமிருந்து, 30 லட்சம் கோடி ரூபாய், மாநிலங்களுக்கு சென்றது. கடந்த 9 ஆண்டுகளில் இந்த அளவு 100 லட்சம் கோடியை எட்டியுள்ளது. முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் கருவூலத்திலிருந்து 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், இன்று அது 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முன்பு, ஏழைகளின் வீடுகளைக் கட்ட, 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது; இன்று இது 4 மடங்கு அதிகரித்துள்ளது. ஏழைகளின் வீடுகளைக் கட்ட 4 லட்சம் கோடி  ரூபாய்க்கு மேல் செலவிடப்படுகிறது.

 

முதலில் ஏழைகளுக்கு மலிவான யூரியா கிடைக்க வேண்டும். சில உலகளாவிய சந்தைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகளை, 300 ரூபாய்க்கு நம் விவசாயிகளுக்கு வழங்குகிறோம், எனவே நமது விவசாயிகளுக்கு யூரியாவுக்கு அரசு 10 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டைக் கொண்ட முத்ரா திட்டம், நம் நாட்டின் இளைஞர்களுக்கு சுயதொழில், வணிகங்கள் மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சுமார் எட்டு கோடி பேர் புதிய தொழில்களைத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளனர். முத்ரா திட்டத்தின் மூலம் 8 முதல் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் எட்டப்பட்டுள்ளது.

 

கொரோனா நெருக்கடியின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டு அவை மூடப்படுவதை தடுத்து அவற்றுக்கு வலு சேர்க்கப்பட்டது. நமது ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் "ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்" திட்டத்தின் கீழ், இந்தியாவின் கருவூலத்திலிருந்து 70,000 கோடி ரூபாய் அவர்களை சென்றடைந்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்தத்  தொகை  கிடைத்துள்ளது. இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் தான். நான் அதிக நேரம் எடுக்க விரும்பவில்லை. முன்பை விட பல்வேறு பிரிவுகளில் பட்ஜெட் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பை செய்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் பல முன்முயற்சிகள் உள்ளன.

 

என் அன்புக்குரியவர்களே,

 

ஆனால் அது மட்டும் போதாது; இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக எனது முதல் ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 13.5 கோடி ஏழை சகோதர சகோதரிகள் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டு புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்துள்ளனர் . வாழ்க்கையில் இதை விட பெரிய திருப்தி இருக்க முடியாது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

வீட்டுவசதித் திட்டங்கள், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு 50,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கியது மற்றும் இன்னும் பல திட்டங்களால் இந்த 13.5 கோடி மக்களை வறுமையின் இன்னல்களிலிருந்து மீள உதவியுள்ளன. வரும் நாட்களில், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினைத் தொழிலில் நிபுணத்துவம் பெற்ற தனிநபர்கள், குறிப்பாக ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயனடையும் ஒரு திட்டத்தை நாங்கள் தொடங்குவோம். சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் தொடங்கும் விஸ்வகர்மா யோஜனா மூலம்  நெசவாளர்கள், தச்சர்கள், பொற்கொல்லர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். பிரதமரின் கிசான் சம்மன் நிதி (விவசாயிகள் கௌரவ நிதி) மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 2.5 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளோம். ஜல் ஜீவன் இயக்கத்துக்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவழித்துள்ளோம், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்கிறோம். ஆயுஷ்மான் பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழைகளின் சுமையை நாங்கள் குறைத்துள்ளோம். அவர்களுக்கு மருத்துவம், சிகிச்சை மற்றும் தரமான மருத்துவமனை பராமரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70,000 கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். கொரோனா நெருக்கடியின் போது இலவச தடுப்பூசிகளை வழங்க நாங்கள் 40,000 கோடி ரூபாய் செலவழித்தோம் என்பதை நாடு அறியும். ஆனால், கால்நடைகளைக் காப்பாற்ற தடுப்பூசி போடுவதற்காக சுமார் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

 

எனதருமை குடிமக்களே, என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே,

 

ஜன் அவுஷதி எனப்படும் மக்கள் மருந்தக மையங்கள் நமது நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு புதிய பலத்தை அளித்துள்ளன. கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவருக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை மருந்து வாங்குவது  இயல்பு. சந்தையில் ரூ.100 மதிப்புள்ள மருந்துகளை வெறும் ரூ.10, ரூ.15, ரூ.20-க்கு மக்கள் மருந்தகங்கள் மூலம் வழங்குகிறோம். இன்று, நாடு முழுவதும் 10,000 மக்கள் மருந்தக மையங்கள் மூலம், இந்த வகையான நோய்களுக்கு மருந்துகளை வாங்கும் இந்த மக்களால் சுமார் ரூ.20 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இன்று அதன் வெற்றியைப் பார்க்கும்போது, விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் சமூகத்தின் அந்தப் பிரிவினரை நாம் தொடப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அதே நேரத்தில், தற்போது நாடு முழுவதும் 10,000-ஆக உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை வரும் நாட்களில் 25,000-ஆக அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

நாட்டில் வறுமை குறையும்போது, நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரின் அதிகாரம் பன்மடங்கு அதிகரிக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், நம் நாடு முதல் மூன்று உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று மோடியாகிய நான் உங்களுக்கு உத்தரவாதத்துடன் உறுதியளிக்கிறேன்; நிச்சயமாக இருக்கும். இன்று வறுமையில் இருந்து மீண்ட 13.5 கோடி மக்கள் ஒருவகையில் நடுத்தர வர்க்கத்தினராக மாறியுள்ளனர். ஏழைகளின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்போது, நடுத்தர வர்க்கத்தினரின் வியாபாரம் செய்யும் சக்தியும் அதிகரிக்கிறது. கிராமங்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்போது, நகரம் மற்றும் நகரத்தின் நிதி அமைப்பு வேகமாக இயங்குகிறது. நமது பொருளாதார சுழற்சி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. அதை வலுப்படுத்துவதன் மூலம் முன்னேற விரும்புகிறோம்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

நகரங்களில் வாழும் நலிவடைந்தப் பிரிவினர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நடுத்தரக் குடும்பங்கள் சொந்த வீடு வாங்க கனவு காண்கின்றன. நகரங்களில் வசிக்கும் ஆனால் வாடகை வீடுகள், அல்லது சேரிகள் அல்லது குடிசைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு பயனளிக்கும் ஒரு புதிய திட்டத்தை வரும் ஆண்டுகளில் நாங்கள் கொண்டு வருகிறோம். அவர்கள் சொந்த வீடு கட்ட விரும்பினால், அவர்களுக்கு வட்டியில் நிவாரணம் மற்றும் வங்கிகளில் கடன் வழங்கி, லட்சக்கணக்கில் சேமிக்க உதவுவோம். எனது நடுத்தரக் குடும்பங்களுக்கான வருமான வரி வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டால், அது மாத ஊதியம் பெறுவோர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் பயனளிக்கும்.       2014-க்கு முன்பு இணையத் தரவு மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. இப்போது உலகின் மலிவான இன்டர்நெட் டேட்டா நம்மிடம் உள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் பணமும் சேமிக்கப்படுகிறது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

கொரோனாவின் மோசமான பாதிப்பில் இருந்து உலகம் இன்னும் மீளவில்லை; இந்த யுத்தம் மீண்டும் ஒரு கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளது. இன்று உலகம் பணவீக்க நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணவீக்கம் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்துள்ளது. உலகெங்கிலும் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, நாம் அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த உலகமே பணவீக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளது.

 

ஆனால் என் அன்பான குடும்ப உறுப்பினர்களே,

 

பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா முயற்சித்து வருகிறது. முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, நாங்கள் ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ளோம், ஆனால் அதில் நாம் திருப்தியடைய முடியாது. நமது விஷயங்கள் உலகத்தை விட சிறந்தவை என்று நாம் மெத்தனமாக இருக்கக்கூடாது. எனது நாட்டு மக்கள் மீதான பணவீக்கத்தின் சுமையைக் குறைக்க இந்த திசையில் நான் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து எடுப்போம். எனது முயற்சி தொடரும்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

இன்று நாடு பல்வேறு திறன்களுடன் முன்னேறி வருகிறது. நாடு நவீனத்தை நோக்கி நகர பாடுபட்டு வருகிறது. இன்று நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது; இன்று நாடு பசுமை ஹைட்ரஜனில் செயல்படுகிறது; விண்வெளித் துறையில் நாட்டின் திறன் அதிகரித்து வருகிறது. எனவே ஆழ்கடல் திட்டத்திலும் நாடு வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. நாட்டில் ரயில்வே துறை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் புல்லட் ரயிலும் இன்று வெற்றிகரமாக நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இன்று நாட்டில் மின்சாரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களும் கட்டப்பட்டு வருகின்றன. குவாண்டம் கம்ப்யூட்டரை நாமும் விரும்புவதால் இன்று ஒவ்வொரு கிராமத்திலும் இணையம் கடைசி மைலை எட்டுகிறது. ஒருபுறம் நானோ யூரியா, நானோ டிஏபி ஆகியவை உருவாக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் இயற்கை விவசாயத்தையும் வலியுறுத்தி வருகிறோம். செமிகண்டக்டர்களையும் உருவாக்க வேண்டும் என்ற ஆசையில்தான் இன்று உழவர் உற்பத்தியாளர் சங்க செயலி உருவாக்கப்படுகிறது.

 

 

மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க நாங்கள் பணியாற்றும் அதே வேளையில், பாராலிம்பிக்கில் இந்தியாவின் மூவண்ணக் கொடியை பெருமையுடன் ஏற்றுவதற்கும் எனது மாற்றுத் திறனாளிகளுக்கு நாங்கள் உதவுகிறோம். இந்த வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறோம். இன்று, பழைய சிந்தனையை, பழைய நோக்கத்தை விட்டுவிட்டு, இந்த எதிர்கால இலக்குகளை அடையும் நோக்கில் இந்தியா முன்னேறி வருகிறது. எங்கள் அரசால் அடிக்கல் நாட்டப்படும்போது, அது எங்கள் ஆட்சியிலும் தொடங்கி வைக்கப்படுகிறது என்று நான் கூறுகிறேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதையும் கடந்து, பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அடிக்கல் நாட்டுவதற்கான பேறு எனக்குக் கிடைத்திருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.

 

லட்சிய மனப்பான்மை, பெரிய சிந்தனை, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது பணிக் கலாச்சாரம், அனைவருக்கும் மகிழ்ச்சி (சர்வஜன் ஹிதாயா), அனைவருக்கும் ஆரோக்கியம் (சர்வஜன் சுகாயா) என்ற தாரக மந்திரத்தில் நம் பணிகளின் பாணி அப்படி இருந்தது. இந்த ஆற்றலைக் கொண்டு ஒரு தீர்மானத்தைக் காட்டிலும் அதில் எவ்வாறு சாதிப்பது என்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில் 75 ஆயிரம் அம்ரித் சரோவர் (அமிர்த நீர்நிலைகள்) உருவாக்க நாங்கள் முடிவு செய்திருந்தோம். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அம்ரித் சரோவர் (அமிர்த நீர்நிலைகள்) அமைக்க முடிவு செய்திருந்தோம். அதன்படி சுமார் 50-55 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்று சுமார் 75 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இது ஒரு மிகப்பெரிய பணி. மனிதவளம் மற்றும் நீர் சக்தியின் இந்த வலிமை இந்தியாவின் சுற்றுச்சூழல் வளத்தைப் பாதுகாக்கவும் பயனுள்ளதாக இருக்கும். 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவது, மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவது, பெண் குழந்தைகளுக்கு கழிவறை கட்டுவது என அனைத்து இலக்குகளும் முழுவீச்சில் நிறைவேற்றப்படும்.

 

இந்தியா ஒரு முடிவை எடுக்கும்போது, அதை அது எட்டுகிறது. இதைத்தான் எங்கள் செயல் வடிவம் எடுத்துக் காட்டுகிறது. 200 கோடி தடுப்பூசிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது உலகிற்கு ஒரு புதிய வழியைக் காட்டியது. 200 கோடி என்ற எண்ணிக்கை அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனது நாட்டின் அங்கன்வாடி ஊழியர்கள், எங்கள் ஆஷா பணியாளர்கள் மற்றும் எங்கள் சுகாதார ஊழியர்கள் இதை சாத்தியமாக்கியுள்ளனர். இதுதான் நம் நாட்டின் பலம். நாங்கள் 5-ஜி அறிமுகப்படுத்தினோம். உலகிலேயே அதிவேகமாக 5-ஜி-யை அறிமுகப்படுத்திய நாடு நமது நாடு. நாங்கள் 700 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை அடைந்துள்ளோம். இப்போது 6-ஜி-க்கும் தயாராகி வருகிறோம்.

 

நாங்கள் ஒரு பணிக்குழுவை உருவாக்கியுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நாம் நிர்ணயித்த இலக்கை எட்டி அதனைக் கடந்து விட்டோம். 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாம் நிர்ணயித்த இலக்கு 2021-22-ம் ஆண்டில் நிறைவடைந்தது. பெட்ரோலுடன் எத்தனால் 20 சதவீதம் கலப்பது பற்றி நாங்கள் பேசினோம், அதுவும் நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடித்துள்ளோம். 500 பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கும் இது பொருந்தும், இது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவேற்றப்பட்டு 500 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டது.

 

25 ஆண்டுகளாக நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்த ஒன்றை நிறைவேற்ற வேண்டும், நமது நாட்டிற்கு ஒரு புதிய நாடாளுமன்றம் தேவை; இப்போது அது தயாராக உள்ளது. புதிய நாடாளுமன்றம் அமைய வேண்டும் என்று இப்படி ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்ததில்லை. எனது அன்பான சகோதர, சகோதரிகளே, புதிய நாடாளுமன்றம் முன்கூட்டியே தயாராக இருப்பதை உறுதி செய்தவர் மோடி. இது உழைக்கும் அரசு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தாண்டும் அரசு, இது ஒரு புதிய இந்தியா, இது தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா, இது தனது தீர்மானங்களை நனவாக்க கடுமையாக உழைக்கும் இந்தியா. எனவே இந்த இந்தியா தடுக்க முடியாதது, இந்த இந்தியா ஓய்வில்லாதது, இந்த இந்தியா சோர்வடையாதது, இந்த இந்தியா விட்டுக் கொடுக்காது. அதனால்தான், எனதருமை குடும்ப உறுப்பினர்களே, பொருளாதார வலிமையால் நமது தொழிலாளர் படைக்கு புதிய பலம் கிடைத்துள்ளது, நமது எல்லைகள் முன்பை விட மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளன, வீரர்கள் எல்லைகளை கவனத்தில் கொண்டுள்ளனர்.

 

சுதந்திர தினத்தின் இந்த நன்னாளில், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் நமது வீரர்களுக்கும், நமது உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான சீருடைப் படையினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது இராணுவம் ஒரு இராணுவத் தீர்ப்பாயத்தைக் கொண்டிருக்க வேண்டும், அதிகாரமளிக்கப்பட வேண்டும், இளமையாக இருக்க வேண்டும், போருக்கு ஆயத்தமாகவும், தயாராகவும் இருக்க வேண்டும், அதனால்தான் நமது ஆயுதப்படைகளுக்குள் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

அங்கும் இங்கும் குண்டுவெடிப்புகள் நடப்பதாக தினமும் கேள்விப்பட்டு வந்தோம். எல்லா இடங்களிலும், சந்தேகத்திற்கிடமான பைகளைத் தொட வேண்டாம் என்று மக்களை எச்சரிக்கும் பலகைகள் இருந்தன, மேலும் அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டன. இன்று, தேசம் ஒரு பாதுகாப்பு உணர்வை அனுபவித்து வருகிறது, தேசம் பாதுகாக்கப்படும்போது, முன்னேற்றம் குறித்த புதிய கனவுகளை நனவாக்க உதவும் அமைதி நிறுவப்படுகிறது. தொடர் குண்டுவெடிப்புகளின் சகாப்தம் இப்போது கடந்த காலத்தில் உள்ளது, அதன் விளைவாக அப்பாவிகள் இறந்தது இப்போது வரலாற்றின் ஒரு பகுதியாகும். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் கணிசமாக குறைந்துள்ளன. நக்சல் பாதித்த பகுதிகளிலும், பெரும் மாற்றம் ஏற்பட்டு, பெரிய மாற்றத்திற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

முன்னேற்றத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவுடன் நாம் முன்னேறும்போது, அது வெறும் கனவு மட்டுமல்ல, 1.4 பில்லியன் குடிமக்களின் தீர்மானமாகும். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற, கடின உழைப்பு அவசியம், ஆனால் நமது தேசியப் பண்பு மிக முக்கியமான சக்தியாகும். முன்னேறிய நாடுகள், சவால்களை வென்ற நாடுகள், அவை அனைத்தும் ஒரு முக்கியமான ஊக்கியைக் கொண்டுள்ளன - அவற்றின் தேசியத் தன்மை. நமது தேசியத் தன்மையை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும். நமது தேசம், நமது தேசியத் தன்மை, ஆற்றல்மிக்க, துடிப்புமிக்க, கடின உழைப்பாளியாக, வீரம் செறிந்து சிறந்ததாக இருக்க வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பாகும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு, நமது தேசிய குணத்தின் உச்சமாக இருக்க வேண்டிய ஒரே ஒரு மந்திரத்தை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற செய்தியுடன் நாம் முன்னேற வேண்டும், இந்தியாவின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு மொழி அல்லது நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கணமும், நாட்டின் ஒற்றுமையை உறுதி செய்வதற்கான எனது முயற்சிகளைத் தொடர்வேன். இந்தியாவின் ஒற்றுமை நமக்கு பலம் தருகிறது.

 

வடக்கு அல்லது தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு, கிராமம் அல்லது நகரம், ஆண் அல்லது பெண் என நாம் அனைவரும் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை உணர்வுடன் நம் நாட்டின் வலிமைக்கு பங்களிக்கிறோம். நான் கவனிக்கும் இரண்டாவது முக்கியமான அம்சம் என்னவென்றால், 2047-க்குள் நமது நாட்டை வளர்ந்த இந்தியாவாகப் பார்க்க விரும்பினால், 'உன்னத இந்தியா' என்ற தாரக மந்திரத்தின்படி நாம் வாழ வேண்டும். இப்போது எங்கள் தயாரிப்பைப் பற்றி பேசுகையில், நான் 2014 இல் சொன்னேன், "குறைவு இல்லை – விளைவு இல்லை (ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்)". உலகின் எந்த மேஜையிலும் "மேட் இன் இந்தியா" தயாரிப்பு இருந்தால், இதை விட சிறந்தது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை உலகிற்கு இருக்க வேண்டும். இதுவே இறுதியானதாக இருக்கும். நமது உற்பத்தி, நமது சேவைகள், நமது சொற்கள், நமது நிறுவனங்கள் அல்லது நமது முடிவெடுக்கும் செயல்முறைகள் என அனைத்தும் உன்னதமானதாக இருக்கும். அப்போதுதான் மேன்மையின் சாராம்சத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

மூன்றாவது விஷயம் என்னவென்றால், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் கூடுதல் சக்தி நாட்டை மேலும் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இன்று, உலகில் எந்த நாட்டிலும் சிவில் விமானப் போக்குவரத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகள் உள்ளனர் என்றால், அது நம் நாடு என்று இந்தியா பெருமையுடன் கூறலாம். சந்திரயானின் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, நிலவுப் பயணமாக இருந்தாலும் சரி, பல பெண் விஞ்ஞானிகள் முன்னணியில் உள்ளனர்.

 

இன்று இரண்டு கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக உருவாக்கும் நோக்கத்துடன், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள், நமது மகளிர் சக்தியின் திறனை ஊக்குவிக்கும் அதே வேளையில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறோம். ஜி-20 அமைப்பில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற விஷயத்தை நான் முன்வைத்தபோது, ஒட்டுமொத்த ஜி-20 குழுவும் அதன் முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டது. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதேபோல், பன்முகத்தன்மை நிறைந்த நாடு இந்தியா. சமச்சீரற்ற வளர்ச்சிக்கு நாம் பலியாகி இருக்கிறோம். நம் நாட்டின் சில பகுதிகள் அந்நியப்படுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இப்போது நாம் சமச்சீரான அபிவிருத்திக்கான பிராந்திய விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்றும் பிராந்திய விருப்பங்கள் தொடர்பான அந்த உணர்வுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும். நமது பாரதத் தாயின் எந்தவொருப் பகுதியோ, அல்லது நமது உடலோ வளர்ச்சியடையாமல் இருந்தால், நமது உடல் முழுமையாக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படாது. நம் உடலின் எந்தவொருப் பகுதியும் பலவீனமாக இருந்தால், நாம் ஆரோக்கியமாக கருதப்பட மாட்டோம். அதுபோல, நம் பாரதத் தாயின் எந்தவொருப் பகுதியும், அல்லது சமூகத்தின் எந்தவொரு பிரிவினரும் பலவீனமாக இருந்தால், என் பாரதத் தாயை ஆரோக்கியமானவராகவும், திறமையானவராகவும் நாம் கருத முடியாது. அதனால்தான் பிராந்திய விருப்பங்களை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும், அதனால்தான் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, ஒவ்வொரு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஒவ்வொரு பிராந்தியமும் அதன் திறனை அடைவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வதற்கான திசையில் முன்னேற விரும்புகிறோம்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

இந்தியா ஜனநாயகத்தின் தாய்; இந்தியா பன்முகத்தன்மையின் முன்மாதிரியாகவும் திகழ்கிறது. பல மொழிகள், பல பேச்சுவழக்குகள், பல்வேறு உடைகள் போன்ற பன்முகத்தன்மை உள்ளன. எல்லாவற்றின் அடிப்படையிலும் நாம் முன்னேற வேண்டும்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

நான் ஒற்றுமையைப் பற்றி பேசும்போது, மணிப்பூரில் ஒரு சம்பவம் நடக்கும்போது, வலி மகாராஷ்டிராவில் உணரப்படுகிறது; அசாமில் வெள்ளம் புகுந்தால், கேரளா அமைதியற்றதாக மாறும். இந்தியாவின் எந்தவொருப் பகுதியிலும் விரும்பத்தகாத ஏதாவது நடந்தால், உடல் உறுப்பு தானம் போன்ற வலியை நாம் உணர்கிறோம். என் நாட்டின் மகள்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது நமது சமூகப் பொறுப்பு. இது நமது குடும்பப் பொறுப்பும், ஒரு நாடு என்ற முறையில் நம் அனைவரின் பொறுப்பும் ஆகும். குரு கிராந்த் சாஹிப்பின் பிரதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும்போது, முழு நாடும் பெருமிதம் கொள்கிறது. உலகின் எந்த நாட்டிலும், கொரோனா காலத்தில், என் சீக்கிய சகோதரர் ஒருவர், லங்கார் (உணக்கூடம்) அமைத்து, பசித்தவர்களுக்கு உணவளிக்கும் போது, உலகமே கைதட்டினால், இந்தியா பெருமை கொள்கிறது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

பெண்கள் மரியாதையைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் ஒரு நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு ஒரு மூத்த அமைச்சர் - "உங்கள் நாட்டு மகள்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்களைப் படிக்கிறார்களா?" என என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு நான், இன்று எங்கள் நாட்டில் ஆண் குழந்தைகளை விட அதிகமான மகள்கள் (பெண் குழந்தகைகள்) ஸ்டெம் (STEM) அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றைப் பயின்று அவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர் என்று நான் அவரிடம் சொன்னேன். அதில் என் மகள்கள் அதிக பங்கு வகிக்கிறார்கள் என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நம் நாட்டின் இந்தத் திறன் இன்று உலகுக்குத் தெரிகிறது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஈடுபட்டுள்ளனர், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றால், வங்கித் தலைவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் சகோதரிகளைக் காணலாம். இப்போது கிராமங்களில் 2 கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு. இப்போது அதற்கான புதிய விருப்பங்கள் உள்ளன, அதாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். நம் கிராமங்களில் உள்ள பெண்களின் திறனை என்னால் பார்க்க முடிகிறது, அதனால்தான் நான் ஒரு புதிய திட்டத்தைப் பற்றி யோசிக்கிறேன். இதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சகோதரிகளுக்கு நமது விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்படும். பெண்களுக்கு திறன் பயிற்சி அளித்து ட்ரோன்களை இயக்கவும், பழுதுபார்க்கவும் பயிற்சி அளிப்போம். இதுபோன்ற ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்திய அரசு ஆளில்லா விமானங்களை வழங்கும். நமது விவசாயப் பணிகளுக்கு ட்ரோன் சேவைகளை கிடைக்கச் செய்யத் தொடங்குவோம். முதற்கட்டமாக, 15 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கத் தொடங்குவோம், இது வலுவான ட்ரோன் பயிற்சி இயக்கத்தை செயல்படுத்தும் கனவை நனவாக்கும்.

 

என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே,

 

இன்று நாடு நவீனத்தை நோக்கி முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலை, ரயில்வே, வான்வழி, ஐ-வேஸ் அல்லது தகவல் வழிகள், நீர் வழிகள் என நாடு இன்று முன்னேறாத துறைகளே இல்லை. கடந்த 9 ஆண்டுகளில் கடலோரப் பகுதிகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் மலைப் பகுதிகளில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். பர்வத் மாலா, பாரத் மாலா போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமூகத்தின் இந்தப் பிரிவினருக்கு நாங்கள் பலம் அளித்துள்ளோம். நமது வளமான கிழக்கு இந்தியாவை எரிவாயு குழாய்கள் மூலம் பிரதானப்படுத்தும் பணியை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளோம். மருத்துவர்களாக நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நமது குழந்தைகளின் கனவை நனவாக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் (இளநிலை மருத்துவம்) இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளோம். தாய்மொழியில் கல்வி வழங்க பரிந்துரைப்பதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். நீதிமன்றத்திற்குச் செல்பவர்கள் தீர்ப்பைக் கேட்கவும், அந்தந்தத் தாய்மொழியில் செயல்பாட்டுப் பங்கைப் பெறவும் வழிவகை செய்யும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இன்றைய காலகட்டத்தில் தாய்மொழியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

இன்று நம் நாட்டின் எல்லை கிராமங்கள் என்று அழைக்கப்படும் கிராமங்களுக்கு, துடிப்பான எல்லை கிராமம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். நம் நாட்டின் எல்லை கிராமங்கள் இதுவரை நாட்டின் கடைசி கிராமமாக கருதப்பட்டன. நாங்கள் முழு சிந்தனை செயல்முறையையும் மாற்றியுள்ளோம். இது நாட்டின் கடைசி கிராமம் அல்ல. எல்லையில் இருக்கும் கிராமங்கள்தான் என் நாட்டின் முதல் கிராமம். சூரியன் கிழக்கில் உதிக்கும் போது, இந்தப் பக்கத்தில் உள்ள கிராமம் சூரிய ஒளியின் முதல் ஒளியைப் பெறுகிறது. சூரியன் மறையும் போது, கடைசிக் கதிர்களின் பலனை மறுபுறம் உள்ள கிராமம் அறுவடை செய்கிறது. இது எனது முன்னணி கிராமம், இன்று இந்த நிகழ்ச்சியில் எனது சிறப்பு விருந்தினர்கள் இந்த முதல் கிராமங்கள், எல்லை கிராமங்களில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோட்டையில் இந்த முக்கியமான திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வந்துள்ள 600 தலைவர்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் முதன்முறையாக இவ்வளவு தூரம் பயணித்து புதிய உறுதியுடனும், ஆற்றலுடனும், வீரியத்துடனும், உறுதிப்பாட்டுடனும் இணைந்துள்ளனர்.

 

என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே,

 

சமச்சீரான வளர்ச்சியை மீட்டெடுக்க நாங்கள் முன்னேற விரும்பும் மாவட்டம் மற்றும் முன்னேற விரும்பும் தொகுதியை கற்பனை செய்தோம், அதன் சாதகமான முடிவுகளை இன்று காணலாம். இன்று, மாநிலங்களின் இயல்பான அளவுகோள்களுடன், ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கியிருந்த இந்த முன்னேற விரும்பும் மாவட்டங்கள் சிறந்த செயல்திறனைக் காட்டியுள்ளன. எதிர்வரும் காலங்களில், நமது முன்னேற விரும்பும் மாவட்டங்களும், நமது முன்னேற விரும்பும் தொகுதிகளும் நிச்சயமாக முன்னேறும் என்று நான் நம்புகிறேன். நான் இந்தியாவின் தன்மையைப் பற்றிப் பேசும்போது, முதலில் இந்தியாவின் ஒற்றுமையைக் குறிப்பிட்டேன்; இரண்டாவதாக, இந்தியா சிறந்து விளங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன், மூன்றாவதாக, நான் பெண்கள் மேம்பாடு பற்றி பேசினேன். இன்று, நான் இன்னும் ஒரு விசயத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், நான்காவதாக பிராந்திய விருப்பங்களை மற்றும் ஐந்தாவது முக்கியமான விசயம் இந்தியாவின் தேசியத் தன்மை, நாங்கள் அந்த திசையில் முன்னேறி வருகிறோம். நமது தேசியத் தன்மை உலகத்தின் மேம்பாடு குறித்து சிந்திக்க வேண்டும். உலக நலனுக்காக தனது பங்கை ஆற்றக்கூடிய அளவுக்கு நாட்டை வலுவானதாக மாற்ற வேண்டும். கொரோனா போன்ற உலகளாவிய நெருக்கடியைக் கையாண்ட பிறகும், உலகிற்கு உதவும் ஒரு நாடாக நாம் எழுந்து நின்ற விதத்திற்குப் பிறகும், அதன் விளைவாக, நம் நாடு இப்போது உலகின் நண்பன் என்ற வடிவத்தை எடுத்துள்ளது.

 

உலகின் அசைக்க முடியாத நட்பு நாடாக இந்தியா இன்று தனது அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளது. உலகளாவிய நலனைப் பற்றி நாம் பேசும்போது, அந்த எண்ணத்தை முன்னெடுத்துச் செல்வதே இந்தியாவின் அடிப்படை யோசனையாகும். ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் இந்த முக்கியமான தருணத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மதிப்பிற்குரிய பல பிரதிநிதிகள் நம்மிடையே கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

இந்தியாவின் பார்வை என்ன, உலகளாவிய நலன் என்ற கருத்தை நாம் எவ்வாறு முன்னெடுப்பது? இப்போது, நாம் சிந்திக்கும்போது, நாம் என்ன சொல்கிறோம் என்பதை உலகம் கவனிக்கிறது. நாம் இந்தப் பார்வையை உலகிற்கு வழங்கியுள்ளோம், உலகம் இந்தப் பார்வையுடன் எங்களுடன் இணைகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் "ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மிந்தொகுப்பு" என்று கூறினோம். இது எங்களிடமிருந்து ஒரு முக்கியமான அறிக்கை, இன்று உலகம் அதை ஏற்றுக்கொள்கிறது. கொரோனாவுக்குப் பிறகு, நமது அணுகுமுறை "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்" என்று இருக்க வேண்டும் என்று நாங்கள் உலகுக்குச் சொன்னோம். மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் நோய்வாய்ப்பட்ட காலங்களில் சமமாக கவனிக்கப்பட்டால் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

 

"ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருத்தை ஜி 20 மாநாட்டிற்காக முன்வைத்து, அந்த திசையில் செயல்பட்டு வருகிறோம். உலகம் பருவநிலை நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், நாங்கள் வழி காட்டியுள்ளோம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை - மிஷன் லைஃப் முன்முயற்சியைத் தொடங்கியுள்ளோம். நாம் உலகத்துடன் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை உருவாக்கியுள்ளோம், பல நாடுகள் இப்போது சர்வதேச சூரிய கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளன. பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம், மேலும் "பெரிய பூனை கூட்டணியை" நிறுவுவதை முன்னெடுத்துள்ளோம்.

 

இயற்கை பேரழிவுகளால் புவி வெப்பமயமாதலால் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதத்திற்கு, நீண்டகால ஏற்பாடுகள் தேவை. எனவே, ஒரு தீர்வாக பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை (சி.டி.ஆர்.ஐ) அறிமுகப்படுத்தியுள்ளோம். உலகம் தற்போது கடல்களில் மோதல்களைக் கண்டு வரும் நிலையில், உலகளாவிய கடல்சார் அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய "சாகர் பிளாட்பார்ம்" என்ற கருத்தை உலகிற்கு வழங்கியுள்ளோம். பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி, உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.ஓ) உலகளாவிய அளவிலான மையத்தை இந்தியாவில் நிறுவ நாங்கள் பணியாற்றி வருகிறோம். யோகா மற்றும் ஆயுர்வேதம் மூலம், உலகளாவிய நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்காக நாங்கள் பணியாற்றியுள்ளோம். இன்று, உலகளாவிய நலனுக்காக இந்தியா ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. இந்த வலுவான அடித்தளத்தை கட்டியெழுப்புவது நமது கூட்டுப் பொறுப்பாகும்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

எங்களிடம் பல கனவுகள், தெளிவான தீர்மானங்கள் மற்றும் திட்டவட்டமான கொள்கைகள் உள்ளன. நோக்கம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. இருப்பினும், நாம் சில உண்மைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றின் தீர்வுகளை நோக்கி செயல்பட வேண்டும். எனவே, என் அன்பான குடும்ப உறுப்பினர்களே, உங்கள் உதவியையும் ஆசீர்வாதங்களையும் பெற நான் இன்று செங்கோட்டைக்கு வந்துள்ளேன், ஏனென்றால் சமீபத்திய ஆண்டுகளில், நான் நாட்டின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதன் தேவைகளை மதிப்பீடு செய்துள்ளேன். எனது அனுபவத்தின் அடிப்படையில், இந்த விசயங்களை நாம் இப்போது தீவிரமாக அணுக வேண்டும் என்று நான் கூறுகிறேன். 2047-ம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் 'அமிர்த காலத்தின்' போது, மூவண்ணக் கொடி உலகின் வளர்ந்த இந்தியாவின் கொடியாக இருக்க வேண்டும். ஒரு கணம் கூட நாம் ஓயக் கூடாது, பின்வாங்கக் கூடாது. இதற்கு, விழிப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவை அவசியமான பலம். இந்த வலிமைக்கு நாம் முடிந்தவரை ஊட்டச்சத்தை வழங்க வேண்டும்.

 

ஒரு குடிமகனாகவும், ஒரு குடும்பமாகவும் நிறுவனங்கள் மூலம் அதை வழங்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவது நமது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். அதனால்தான் கடந்த 75 ஆண்டுகால வரலாற்றைப் பார்த்தால், இந்தியாவின் திறனுக்குப் பஞ்சமில்லை. ஒரு காலத்தில் 'தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்ட இந்த நாடு, அதே ஆற்றலுடன் ஏன் மீண்டும் எழுச்சி பெறக் கூடாது? நண்பர்களே, எனதருமை குடும்ப உறுப்பினர்களே, 2047 ஆம் ஆண்டில், நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, எனது நாடு வளர்ந்த இந்தியாவாக மாறும் என்று நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது நாட்டின் வலிமை, நமக்குக் கிடைக்கும் வளங்கள் மற்றும் குறிப்பாக 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் சக்தியின் அடிப்படையில் நான் இதைச் சொல்கிறேன். மேலும், எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வலிமையின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் சில தீய சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி நமது சமூக அமைப்பின் ஒரு பகுதியாக மாறிவிட்டதால், சில நேரங்களில் நாம் இவற்றைக் கண்டுகொள்ளாமல் கூட இருந்துவிடுகிறோம். கண்களை மூடும் நேரம் இதுவல்ல.

 

கனவுகள் நிறைவேற வேண்டுமானால், தீர்மானங்கள் நிறைவேற வேண்டுமானால், காளையின் கொம்புகளைப் பிடித்து மூன்று தீமைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். நம் நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் ஊழல் தான். ஒரு கரையான் போல, அது நாட்டின் அனைத்து அமைப்புகளையும், நாட்டின் அனைத்து திறன்களையும் முற்றிலுமாக அழித்துவிட்டது. ஊழலில் இருந்து விடுதலை, ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிராக போராடுவது காலத்தின் தேவை. நாட்டுமக்களே, என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே, இது மோடியின் அர்ப்பணிப்பு; ஊழலுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன் என்பது எனது தனிப்பட்ட உறுதிப்பாடு. இரண்டாவதாக, வாரிசு அரசியல் நம் நாட்டை அழித்துவிட்டது. இந்த வாரிசு முறை நாட்டை ஆட்டிப்படைத்து நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்தது.

மூன்றாவது தீமை வஞ்சகத்தன்மை. இந்த வஞ்சகத்தன்மை நாட்டின் அசல் சிந்தனையையும், நமது இணக்கமான தேசியத் தன்மையையும் கறைப்படுத்தியுள்ளது. இந்த மக்கள் எல்லாவற்றையும் அழித்தனர். எனவே, எனதருமை நாட்டுமக்களே, எனதருமை குடும்ப உறுப்பினர்களே, இந்த மூன்று தீமைகளுக்கும் எதிராக நாம் நமது முழு பலத்தோடு போராட வேண்டும். ஊழல், உறவுச்சார்பு, வஞ்சகத்தன்மை; எமது நாட்டு மக்களின் விருப்பங்களை நசுக்கியுள்ள இந்த சவால்கள் செழித்து வளர்ந்துள்ளன . இந்தத் தீமைகள் நம் நாட்டில் சிலரிடம் உள்ள அனைத்து திறன்களையும் கொள்ளையடிக்கின்றன. இவை எமது மக்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை கேள்விக்குறியாக்கிய விசயங்களாகும். நமது ஏழைகளாக இருந்தாலும் சரி, தலித்தாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, பாஸ்மண்டா சமூகமாக இருந்தாலும் சரி, பழங்குடியின சகோதர சகோதரிகளாக இருந்தாலும் சரி, நமது தாய்மார்களாக இருந்தாலும் சரி, சகோதரிகளாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் தங்கள் உரிமைகளுக்காக இந்த மூன்று தீமைகளில் இருந்தும் விடுபட வேண்டும். ஊழலுக்கு எதிரான வெறுப்புச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். அழுக்கு நமக்கு பிடிக்காததால் நம் மனதில் வெறுப்பை ஏற்படுத்துவது போல, பொது வாழ்க்கையில் இதை விட பெரிய அசுத்தம் இருக்க முடியாது.

 

எனவே, நமது தூய்மைப் பிரச்சாரத்திற்கு ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்து, நமது ஊழலை சுத்தப்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழலை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் களத்தில் என்ன சாதிக்கப்பட்டது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆபத்தான புள்ளிவிவரங்களைக் கேட்டால், மோடி இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார் என்பதை நீங்கள் உணர்வீர்கள். கிட்டத்தட்ட பத்து கோடி மக்கள் பெற்று வந்த அநியாயமான ஆதாயத்தை நான் தடுத்து நிறுத்தினேன். இந்த மக்களுக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டதாக உங்களில் சிலர் கூறலாம்; இல்லை, யார் அந்த 10 கோடி மக்கள்? இந்த 10 கோடி மக்களும் பிறக்காதவர்கள், இன்னும் பலர் தங்களை விதவைகள், மாற்றுத் திறனாளிகள் என்று தவறாக அடையாளப்படுத்திக் கொண்டு பலன்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய பெண்கள் வயதாகும்போது பெரும்பாலும் ஊனமுற்றவர்களாகி, அரசாங்கத் திட்டங்களின் நன்மைகளைத் ஏமாற்றி தொடர்ந்து பெறுகிறார்கள். பல தசாப்தங்களாக நடந்து வரும் இதுபோன்ற 100 மில்லியன் பினாமி நடவடிக்கைகளை எங்களால் தடுக்க முடிந்த புனிதமான பணி இது. நாங்கள் பறிமுதல் செய்துள்ள ஊழல்வாதிகளின் சொத்து முன்பை விட 20 மடங்கு அதிகம்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு இவர்கள் தலைமறைவானார்கள். 20 மடங்கு அதிகமான சொத்துக்களை நாங்கள் பறிமுதல் செய்தோம், எனவே என் மீது மக்களுக்கு வெறுப்பு மிகவும் இயல்பானது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நான் தீவிரப்படுத்த வேண்டும். நமது தவறான அரசு முறையால், கேமராவின் கண்ணில் ஏதாவது நடந்தாலும், அது பின்னர் சிக்கிக் கொள்ளும். முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில், இப்போது மேலும் பல குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம், ஜாமீன் பெறுவது எளிதல்ல. ஊழலுக்கு எதிராக நாம் தீவிரமாகவும் நேர்மையாகவும் போராடுவதால், அத்தகைய உறுதியான அமைப்பை உருவாக்குவதன் மூலம் நாங்கள் முன்னேறி வருகிறோம்.

இன்று, உறவுச்சார்பு மற்றும் வஞ்சகத்தன்மை ஆகியவை நாட்டிற்கு பெரும் துரதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளன. இப்போது ஜனநாயகத்தில் ஒரு அரசியல் கட்சி மற்றும் நான் 'அரசியல் கட்சி'க்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுப்பது, என் நாட்டின் ஜனநாயகத்தில் இவ்வளவு சிதைவைக் கொண்டு வந்தது எப்படி சாத்தியமாகும். இது ஒருபோதும் இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியாது. அது என்ன நோய்: குடும்ப அரசியல். அவர்களின் மந்திரம் என்ன? குடும்பத்தின் கட்சி, குடும்பம் மற்றும் குடும்பத்திற்காக. அவர்களின் வாழ்க்கை தாரக மந்திரம் என்னவென்றால், தங்கள் அரசியல் கட்சி குடும்பத்திற்கு சொந்தமானது, குடும்பம் மூலம், குடும்பத்திற்கு, உறவுச்சார்பு மற்றும் கட்சி சார்பு ஆகியவை எங்கள் திறமையின் எதிரிகள். இக்கட்சிகள் திறமைகளை மறுப்பதோடு, அவர்களின் திறமையை ஏற்க மறுக்கின்றன. எனவே, இந்நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு நாம் சுயநலவாதத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் மகிழ்ச்சி, அனைவருக்கும் ஆரோக்கியம்! ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளைப் பெற தகுதியானவர்கள். எனவே, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது மிகவும் முக்கியம். வஞ்சகத்தன்மை சமூக நீதிக்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்துள்ளது. சமூகநீதியை யாராவது அழித்து விட்டார்கள் என்றால், இந்த வஞ்சகத்தன்மை சிந்தனை, வஞ்சகத்தன்மை அரசியல். வஞ்சகப்படுத்தும் அரசின் திட்டங்கள் உண்மையில் சமூகநீதியைக் கொன்று குவித்து விட்டன. அதனால்தான் வஞ்சகத்தன்மையும் ஊழலும் வளர்ச்சியின் மிகப்பெரிய எதிரிகள் என்பதை உணர்கிறோம். நாடு வளர்ச்சியை விரும்பினால், 2047-ம் ஆண்டு வளர்ந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்ற நாடு விரும்பினால், எந்த சூழ்நிலையிலும் நாட்டில் ஊழலை சகித்துக் கொள்ள மறுப்பது அவசியம். இந்த மனநிலையுடன் நாம் முன்னோக்கி நடக்க வேண்டும்.

 

என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களே,

 

நம் அனைவருக்கும் மிக முக்கியமான பொறுப்பு உள்ளது. நீங்கள் எப்படி வாழ்ந்தீர்களோ அப்படியே அடுத்த தலைமுறையை வாழ வைப்பது குற்றம். எதிர்கால சந்ததியினருக்கு வளமான, சமச்சீரான தேசத்தை வழங்குவது நமது பொறுப்பு. நமது எதிர்கால சந்ததியினர் சின்னச் சின்ன விசயங்களுக்காகப் போராடாமல் இருக்க, சமூகநீதியில் ஒன்றியிருக்கும் ஒரு நாட்டை வழங்குவதை நாம் நோக்கமாகக் கொள்ள வேண்டும். இது நம் அனைவரின் கடமை, ஒவ்வொரு குடிமகனின் கடமை, இந்த சகாப்தம் – அமிர்த காலம் என்பது கடமைக் காலம் - கடமையின் சகாப்தம். நமது பொறுப்புகளில் நாம் பின்வாங்க முடியாது; மகாத்மா காந்தி கனவு கண்ட இந்தியாவையும், நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவாக இருந்த இந்தியாவையும், நமது துணிச்சலான தியாகிகளின் கனவாக இருந்த இந்தியாவையும், தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த நமது துணிச்சலான பெண்கள் விரும்பிய நாட்டை நாம் கட்டமைக்க வேண்டும்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

2014-ல் நான் வந்தபோது, மாற்றத்திற்கான உறுதிமொழியுடன் வந்தேன். 2014-ல் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளித்தேன். என் குடும்பத்தின் 140 கோடி உறுப்பினர்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர், அந்த நம்பிக்கையை நிறைவேற்ற நான் அனைத்து முயற்சிகளையும் செய்தேன். சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற வாக்குறுதி நம்பிக்கையாக மாறியது, ஏனெனில் நான் மாற்றத்தை உறுதியளித்தேன். சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவற்றின் மூலம், இந்த வாக்குறுதியை நான் நம்பிக்கையாக மாற்றியுள்ளேன். நான் அயராது உழைத்துள்ளேன், நாட்டுக்காக உழைத்துள்ளேன், பெருமையுடன் பணியாற்றியுள்ளேன், "தேசம் முதலில்" என்ற உணர்வோடு இதைச் செய்துள்ளேன். எனது செயல்பாட்டின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் நீங்கள் என்னை மீண்டும் ஆசீர்வதித்தீர்கள், மாற்றத்திற்கான வாக்குறுதி என்னை இங்கே கொண்டு வந்தது. அடுத்த 5 ஆண்டுகள் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சிக்கான ஆண்டாக இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகள் 2047 ஆம் ஆண்டின் கனவை நனவாக்குவதற்கான பொன்னான தருணங்கள். அடுத்த முறை, ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இதே செங்கோட்டையில் இருந்து, நாட்டின் சாதனைகள், உங்கள் திறன்கள், நீங்கள் அடைந்த முன்னேற்றம், இன்னும் அதிக தன்னம்பிக்கையுடன் அடைந்த வெற்றிகளை உங்களுக்கு வழங்குவேன்.

 

எனதருமை அன்பர்களே,

 

நான் உங்களிடமிருந்து வருகிறேன், உங்களுடனே இருக்கிறேன், நான் உங்களுக்காக வாழ்கிறேன். நான் ஒரு கனவு கண்டால், அது உங்களுக்காக. நான் வியர்த்தால், அது உங்களுக்காக. இந்தப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததால் அல்ல, நீங்கள் என் குடும்பம் என்பதால். உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக, உங்கள் எந்த துக்கத்திற்கும் என்னால் சாட்சி சொல்ல முடியாது, உங்கள் கனவுகள் சிதைந்து போவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உங்கள் தீர்மானங்களை நிறைவேற்றவும், ஒரு தோழனாக உங்களுடன் நிற்கவும், உங்களுக்கு சேவை செய்யவும், உங்களுடன் இணைந்திருக்கவும், உங்களுடன் வாழவும், உங்களுக்காக போராடவும் நான் இங்கே இருக்கிறேன். நான் உறுதியுடன் இந்த பயணத்தைத் தொடங்கிய ஒரு நபர், சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் மேற்கொண்ட போராட்டங்களும் அவர்கள் கண்ட கனவுகளும் இன்று நம்முடன் உள்ளன என்று நான் நம்புகிறேன். சுதந்திரப் போராட்டத்தின் போது தியாகம் செய்தவர்களின் ஆசிர்வாதம் நம்முடன் உள்ளது. நமது நாட்டின் 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது, இந்த வாய்ப்பு எங்களுக்கு பெரும் ஆற்றலையும் வலிமையையும் அளித்துள்ளது.

 

 

எனவே, என் அன்புக்குரியவர்களே,

 

இன்று, 'அமிர்த காலத்தின்’ முதல் ஆண்டில், இந்த அமிர்த காலத்தில் நான் உங்களுடன் உரையாடும்போது, நான் உங்களுக்கு முழு நம்பிக்கையுடன் சொல்ல விரும்புகிறேன் –

 

காலச் சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும்போது,

அமிர்த காலத்தில் எப்போதும் சுழலும் சுழற்சி,

எல்லோருடைய கனவுகளும் என் கனவுகள்தான்.

எல்லாக் கனவுகளையும் வளர்த்து, சீராக நகர்த்தி,

தைரியமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள்,

சரியான கொள்கைகளுடன், ஒரு புதிய வழியை உருவாக்குதல், சரியான வேகத்தை அமைத்தல், ஒரு புதிய பாதை,

சவால்களை உறுதியான தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள், உலகில் நம் தேசத்தின் பெயரை உயர்த்துங்கள்.

 

எனதருமை குடும்ப உறுப்பினர்களே,

 

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள், உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள், உங்கள் அனைவருக்கும் சுதந்திர தினத்தின் புனிதமான பண்டிகையில் மீண்டும் ஒரு முறை எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த அமிர்த காலம் நம் அனைவருக்கும் கடமை நேரம். இந்த அமிர்த காலம் பாரத தாய்க்கு நாம் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டிய காலம். சுதந்திரப் போரின் போது, 1947 க்கு முன்னர் பிறந்த தலைமுறையினருக்கு நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டுக்காக உயிர் துறக்க எந்த வாய்ப்பையும் அவர்கள் விடவில்லை. ஆனால் நாட்டுக்காக உயிர் துறக்க நமக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நாட்டிற்காக வாழ இதை விட பெரிய வாய்ப்பு இருக்க முடியாது! நாம் ஒவ்வொரு கணமும் நாட்டிற்காக வாழ வேண்டும், இந்தத் தீர்மானத்தின் மூலம், 140 கோடி நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு புதிய தீர்மானத்தை இந்த 'அமிர்த காலத்தில்' உருவாக்க வேண்டும். 140 கோடி நாட்டு மக்களின் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும், 2047-ல் மூவண்ணக் கொடி ஏற்றப்படும்போது, வளர்ந்த இந்தியாவை உலகமே பாராட்டும். இந்த நம்பிக்கையுடன், இந்த உறுதியுடன், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். என் மனமார்ந்த வாழ்த்துகள்!

 

ஜெய்ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த்!

 

பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய்!

 

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

 

மிகவும் நன்றி!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature

Media Coverage

IIT Delhi tops India in QS Rankings 2027; 52 Indian institutions feature
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Text of Prime Minister addresses the Indian Community in Paris
June 18, 2026

नमस्ते!

बों जू!

ऐसा लग रहा है, आप सब छुट्टी के मूड में हैं।

साथियों,

ये पेरिस शहर, Lights का शहर है, रंगों का शहर है, यहां Art है, Ideas हैं, और innovation की प्रेरणा भी है। इस शहर को भारत के अलग-अलग राज्यों से आए आप सभी लोग और भी खूबसूरत बना देते हैं। नए नए रंगों से भर देते हैं।

कोई तमिल है, कोई पंजाबी है, कोई गुजराती है, तो कोई मराठी है, और कोई बंगाली है। भारत के हर कोने का प्रतिनिधित्व यहां दिखाई देता है।

साथियों,

मैं जब 14 जून को नीस पहुंचा था तो सबसे पहले भारत इनोवेट्स कार्यक्रम में शामिल हुआ था। आज जब मैं फ्रांस से वापसी की तैयारी में हूं तो लग रहा है जैसे भारत कनेक्ट्स कार्यक्रम में आ गया हूं।

फ्रांस में रहने वाले आप लोगों ने 21वीं सदी के भारत-फ्रांस रिश्तों को जिस तरह कनेक्ट किया है, वो हमारी Strategic Partnership की बहुत बड़ी ताकत बन रही है। मैं आप सभी के लिए भारत से 140 करोड़ देशवासियों की शुभकामनाएं लेकर आया हूं। इस आत्मीय स्वागत के लिए, मैं आप सभी का हृदय से आभार व्यक्त करता हूं।

साथियों,

आज मैं ऐसे समय में फ्रांस आया हूं जब कुछ ही दिन पहले हमारी सरकार के 12 वर्ष पूरे हुए हैं। चुने हुए प्रधानमंत्री के रूप निरंतर 12 साल तक देश की सेवा करना मेरे जीवन का बहुत बड़ा सौभाग्य रहा है। यह भारत के लोकतंत्र की शक्ति है जिसने एक चायवाले को यहां तक पहुंचा दिया।

साथियों,

बीते 12 वर्ष, 140 करोड़ भारतीयों के अद्भुत सामर्थ्य के रहे हैं। 12 साल के इस कालखंड में भारत का GDP दोगुना हुआ है। Airports की संख्या दोगुनी हुई है। Universities की संख्या भी दोगुनी हो गई है। Highway Construction की स्पीड तीन गुना बढ़ गई। और Metro Network, चार गुणा बड़ा हो गया है।

मैं आपको कुछ और फैक्ट्स दूंगा, उससे आप अंदाजा लगा पाएंगे कि भारत किस स्पीड और कितने बड़े स्केल पर काम कर रहा है। पिछले 12 वर्षों में भारत का Defence Export 35 गुणा यानि Thirty Five Times बढ़ गया है।

औऱ एक फैक्ट सुनिए भारत में मोबाइल मैन्यूफैक्टरिंग यूनिट्स में, 100 गुणा की बढ़ोतरी हुई है। 100 times. भारत अब दुनिया का दूसरा सबसे बड़ा mobile phone manufacturer है। इसी गति, इसी प्रगति का नतीजा है कि आज भारत दुनिया की Fastest Growing Major Economy है।

साथियों,

आज भारत की कहानी सिर्फ Economic Progress की कहानी नहीं है। सिर्फ यहाँ अटक नहीं जाती है। ये Social Transformation की भी कहानी है।

पिछले 12 साल में देश में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। यानि एक ऐसी प्रगति जिसका लाभ समाज के अंतिम व्यक्ति तक पहुंच रहा है। फ्रांस में जितने घर हैं, उससे भी अधिक पक्के घर बीते 12 वर्ष में हमने जरूरतमंदों के लिए बनाए हैं।

अब हर परिवार के पास, गरीब से गरीब क्यों न हो, Bank Account है। Financial Inclusion एक सरकारी कार्यक्रम नहीं, बल्कि सामाजिक परिवर्तन का अभियान बना है।

साथियों,

इन 12 वर्षों की उपलब्धियों में, एक उपलब्धि ऐसी भी है जिसे किसी आंकड़े से, या अंकों से, नहीं मापा जा सकता। वह है 140 करोड़ भारतीयों का आत्मविश्वास।

आज का भारत और आज के भारत का युवा बहुत बड़े सपने देख रहा है। भारत का किसान नई संभावनाओं के साथ आगे बढ़ रहा है। भारत की महिलाएं नए नेतृत्व का परिचय दे रही हैं। इसलिए ये सिर्फ Achievements के 12 साल नहीं हैं, ये भारत की एस्पिरेशन्स को नई बुलंदी देने का कालखंड रहा है।

साथियों,

एक समय था जब दूर-दराज के गांवों तक आधुनिक सुविधाएं पहुंचाना वाकई बहुत मुश्किल भरा था। आज उन्हीं गांवों में बिजली भी है, इंटरनेट भी है, और डिजिटल सेवाओं की पूरी दुनिया भी है। आज एक क्लिक पर, कभी भी, कहीं भी बैंकिंग सेवाएं उपलब्ध हैं।

आज मोबाइल फोन, भारत के नागरिकों को अनेक सुविधाओं से कनेक्ट कर रहा है। हमारे किसान, हमारे मछुआरे, हमारे dairy farmers, हमारी महिलाएं, हमारे स्टूडेंट्स, सभी टेक्नोलॉजी के माध्यम से सशक्त हो रहे हैं, और अपने लिए नए अवसर बना रहे हैं।

साथियों,

आपने 125 करोड़ से अधिक Aadhaar IDs के बारे में सुना है। लेकिन आज भारत सिर्फ पहचान को डिजिटल नहीं बना रहा। आज करीब 90 करोड़ भारतीयों की Unique Digital Health IDs बनाई जा चुकी हैं। जिससे मेडिकल रिकॉर्ड सुरक्षित और accessible बन गए हैं। इससे हेल्थकेयर डिलीवरी और अधिक आसान और efficient हो रही है।

साथियों,

इन उपलब्धियों की सबसे बड़ी विशेषता यह है कि इनमें से अधिकांश चीजें कुछ वर्ष पहले तक कल्पना जैसी लगती थीं। कौन सोच सकता था कि गांव-गांव तक हाई-स्पीड इंटरनेट पहुंचेगा ? कौन सोच सकता था कि दूर-सुदूर के गांवों में भी QR code जीवन का हिस्सा बन जायेगा ? गांव में कोई बहन, ड्रोन से खेती करने में मदद करेगी, ये भी असंभव लगता था।

लेकिन आज यह सब, भारत के करोड़ों लोगों के जीवन का सामान्य हिस्सा बनता जा रहा है। और आपको गर्व होगा साथियों, यही नए भारत की पहचान है।

जो कभी सपना था, वह आज सच्चाई है। जो कभी नामुमकिन लगता था, वो आज मुमकिन हुआ है, औऱ ये करने के पीछे सबसे बड़ी ताकत क्या है? किसकी वजह से ये सब संभव हुआ है? यह मोदी के कारण नहीं, वो ताकत है- भारत का लोकतंत्र, भारत की डेमोक्रेसी। इस डेमोक्रेसी में सबका साथ है, सबका विकास है।

साथियों,

आज से 50 या 100 साल बाद जब भारत के इस कालखंड की समीक्षा होगी, तो ये बात उभरकर सामने आएगी कि इस कालखंड को भारत की Aspirations ने ड्राइव किया। यह भारत के एस्पिरेशन्स का नया युग है।

जहां बिजली पहुंची है, वहां लोग सिर्फ बिजली नहीं चाहते, वे Smart Living चाहते हैं। जहां ट्रेन पहुंची है, वहां लोग High-Speed Connectivity चाहते हैं। जहां हाईवे बने हैं, वहां लोग World-Class Expressways चाहते हैं। जहां इंटरनेट पहुंचा है, वहां लोग AI और Digital Innovation में नेतृत्व चाहते हैं।

यानि आज भारत के लोग अपने जीवन को भी Next Level पर ले जाना चाहते हैं, और भारत को भी Next Level पर ले जाना उनका मकसद है, उनका संकल्प है, उनके सपने है।

और साथियों,

यही Aspirations आज भारत की विकास यात्रा की सबसे बड़ी शक्ति हैं। मैं आपको भारत की Space Journey का उदाहरण दूंगा।

भारत ने चंद्रयान को चंद्रमा के South Pole पर उतारा। दुनिया ने इसे एक बहुत बड़ी उपलब्धि माना। लेकिन भारत इसे अपनी मंजिल मानकर रुका नहीं। आज देश गगनयान की तैयारी कर रहा है। भारत अंतरिक्ष में अपना Space Station बनाने की दिशा में आगे बढ़ रहा है।

हमारे Space Startups Global Space Economy में अपनी जगह बनाने के लिए पुरजोश काम कर रहे हैं, आगे बढ़ रहे हैं।

साथियों,

Green Energy के क्षेत्र में भी भारत की यही एस्पिरेशंस दिखाई देती है। Solar Power में भारत की उपलब्धियों की दुनिया भर में लगातार चर्चा हो रही हैं। लेकिन भारत अगली छलांग की तैयारी कर रहा है।

Green Hydrogen में बड़े निवेश हो रहे हैं। Advanced Nuclear Energy पर तेजी से काम हो रहा है। आपने भारत के Fast Breeder nuclear Reactor से जुड़ी प्रोग्रेस के बारे में भी सुना ज़रूर होगा। ये भारत के न्यूक्लियर एनर्जी लैंडस्केप में क्रांतिकारी परिवर्तन करने का बहुत बड़ा अचीवमेंट हमारे सीसेन्टिस्टों ने किया है।

साथियों,

आज का भारत भविष्य का पूरा Ecosystem बना रहा है। भारत एक साथ हर उस क्षेत्र में निवेश कर रहा है, जो आने वाले दशकों की दिशा तय करेगा।

अभी आपने कुछ दिन पहले ही देखा है नीस में भारत इनोवेट्स का एक आयोजन किया। ये इवेंट भारत के डीप टेक सामर्थ्य को दुनिया तक पहुंचाने का एक और माध्यम था। इसमें भारत के 120 Deep-Tech Startups उपस्थित थे। Bharat Innovates में करीब एक हजार चार सौ B2B Meetings हुईं है। कई Startups के लिए Investment Commitments आगे बढ़ीं, Commercial Orders के लिए रास्ते खुले। French और European Universities तथा Incubators के साथ Engagements बढ़ रही हैं।

Student Exchanges, Joint Research, और Innovation Support के नए रास्ते बने। इसलिए Bharat Innovates सिर्फ एक Summit नहीं रहा। यह Innovation Diplomacy का एक नया मॉडल बना है।

और आज ही पेरिस में VivaTech इवेंट के जरिए, इस यात्रा को हमने और आगे बढ़ाया। नीस में हमने Ideas को Capital से जोड़ा और पेरिस में Indian Innovation को Global Scale से जोड़ा। आज दुनिया देख रही है भारत केवल भविष्य के लिए तैयार नहीं हो रहा है। भारत भविष्य को आकार दे रहा है।

साथियों,

एक समय था, जब देशों के बीच रिश्ते केवल व्यापार से तय होते थे। आज व्यापार के साथ-साथ Trust यानि भरोसा भी उतना ही महत्वपूर्ण हो गया है।

हर देश Reliable Supply Chains चाहता है। हर देश Stable Partnerships चाहता है। हर देश ऐसे साथियों की तलाश में है, जिन पर लंबे समय तक भरोसा किया जा सके। और ऐसे समय में, भारत विश्व में एक Trusted Partner के रूप में उभर रहा है।

एवियां में G7 बैठक के दौरान मैंने trust based partnerships बनाने पर ज़ोर दिया। ग्लोबल साउथ के देशों के साथ equal पार्टनर्स के रूप में आगे बढ़ने का आह्वान किया। भारत का G7 समिट में संदेश था Global Governance तभी प्रभावी होगी जब वह Inclusive होगी। Global Growth तभी Sustainable होगी जब वह शेयर्ड होगी। और Global Technology तभी मानवता के लिए उपयोगी होगी जब वह Trusted होगी।

साथियों,

भारत और दुनिया के बीच व्यापारिक रिश्तों में नई ऊर्जा नज़र आ रही है। फ्रांस के साथ भारत का ट्रेड लगतार बढ़ रहा है। पिछले कुछ वर्षों में भारत ने दुनिया के अनेक देशों के साथ Free Trade Agreements किए हैं। यूरोपियन यूनियन हो, यूनाइटेड किंगडम हो दुनिया के हर देश, हर रीजन के साथ भारत समझौते कर रहा है।

अगले महीने से भारत और UK के बीच ट्रेड एग्रीमेंट भी लागू हो जाएगा। यह एग्रीमेंट भारत के farmers, workers और innovators को अनेक नए अवसर प्रदान करेगा।

साथियों,

आज दुनिया Uncertainty और Disruption के दौर से गुजर रही है। ऐसे समय में भारत और फ्रांस की साझेदारी विश्वास, स्थिरता और सहयोग का एक मजबूत स्तंभ बन रहा है।

इस वर्ष हमने भारत और फ्रांस के संबंधों को Special Global Strategic Partnership का दर्जा दिया था। नीस में मेरे मित्र President Macron और मैंने हमारे संबंधों को force for global good बनाने पर चर्चा की। Defence से लेकर space और नुक्लियर तक AI और क्रिटीकल मिनरल्स से लेकर high speed railway तक, हर क्षेत्र में हम मिलकर आगे बढ़ेंगे।

साथियों,

Solar energy हो, या AI के क्षेत्र में सहयोग हो, भारत और फ्रांस मिलकर ऐसे समाधान विकसित कर रहे हैं जो पूरी मानवता के हित में हैं। पिछले वर्ष पेरिस में और इस वर्ष दिल्ली में हमने AI Summit को Co-chair किया।

अब हम साथ मिलकर अगले वर्ष “तृष्णा” satellite को लॉन्च करने जा रहें हैं। यह “तृष्णा” satellite जो विश्व में फूड और वाटर सिक्युरिटी सुनिश्चित करने में योगदान देगा।

और साथियों,

यह सभी गवर्नमेंट टू गवर्नमेंट पहलो में आप सभी का योगदान बहुत महत्वपूर्ण है। ये आप हैं जो भारत और यूरोप के बीच सबसे मजबूत सेतु हैं। आप दोनों समाजों को समझते हैं। दोनों बाजारों को समझते हैं। आने वाले समय में Talent, Trade, Technology, Tourism और Investment के नए अवसरों को आगे बढ़ाने में आपकी भूमिका लगातार बढ़ने वाली हैं।

साथियों,

भारत और फ्रांस के रिश्तों को साझा इतिहास, साझा मूल्यों और साझा विश्वास ने आगे बढ़ाया है। विश्व युद्धों के दौरान फ्रांस की धरती पर बलिदान देने वाले भारतीय सैनिकों की स्मृतियां आज भी हमें जोड़ती हैं।

मुझे पहले नव शापेल में श्रद्धांजलि देने का अवसर मिला, पिछले वर्ष प्रेसिडेंट मैक्रों के साथ मार्सेय के वॉर मेमोरियल जाने का अवसर भी मिला। ये हमारी साझा विरासत है।

फ्रांस, भारतीयों के योगदान को संजोता भी है और सराहता भी है। भारतीय मूल की नूर इनायत खान हों, जिन्होंने फ्रांस की Resistance के लिए अपना जीवन बलिदान किया, या महाराजा रणजीत सिंह के साथ काम करने वाले जनरल जां फ्रांस्वा अलार हों ये सभी भारत और फ्रांस की साझा विरासत के प्रतीक हैं।

भारत के राज्य पुडुचेरी में भी फ्रेंच विरासत की झलक दिखाई देती है। वहां का Architecture, वहां की कला-संस्कृति और खान-पान सभी में हमारे संबंधों की महेक है।

साथियों,

इस समय फ्रांस समेत पूरी दुनिया में International Yoga Day की तैयारी भी चल रही है। इस अवसर पर मैं, फ्रांस में योग को आगे बढ़ाने वाले श्रीमान महेश घाट्राड्याल जी को भी आदरपूर्वक श्रद्धांजलि देता हूं। मैं पद्म पुरस्कार से सम्मानित, शार्लोत शोपां जी को भी प्रणाम करता हूं। जिन्होंने सौ वर्ष की आयु में भी, योग के माध्यम से फ़्रांस को भारत की विरासत से जोड़ा है। उनका जीवन यह सिद्ध करता है: Yoga does not add years to life, it adds life to years.

साथियों,

मैं फ्रेद नेग्री जी को भी आदरपूर्वक श्रद्धापूर्वक याद करता हूं। भारतीय विरासत को संरक्षित करने में उनका योगदान अतुल्य रहा है।

साथियों,

भारत और फ्रांस को कनेक्ट करने वाली एक और चीज है, और वो है फुटबॉल। इस वक्त यहां फुटबॉल फीवर पूरे जोर पर है। फ्रांस में इसकी दीवानगी, चप्पे-चप्पे पर दिखती है। लेकिन भारत में भी फुटबॉल का क्रेज़ सिर चढ़कर बोलता है।

खासतौर पर फ्रांस की टीम के फैन्स भारत में बहुत अधिक हैं। फ़्रांस ने इस वर्ल्ड कप की शुरुआत एक जोरदार जीत से शुरू की है। मैं फ्रांस की टीम को बहुत-बहुत शुभकामनाएं देता हूं।

साथियों,

जाने से पहले, आप सभी के लिए कुछ और अच्छी खबरें भी लेकर के आया हूँ। वो आपके लिए हैं। पिछले वर्ष, मार्सेय में कॉन्सुलेट खोला गया, इससे काफी अधिक सुविधा मिल रही है। कुछ हफ्ते पहले, Indian Nationals के लिए French Airports पर Visa-free Transit की व्यवस्था शुरू हो गई है।

Students और Professionals की Mobility बढ़ाना हो, या Educational Qualifications की Mutual Recognition की बात हो, या फिर French Universities के भारत में Campus खोलना हो, इन सभी पर हम मिलकर आगे बढ़ रहें हैं।

अब फ्रांस में UPI के उपयोग का दायरा भी और बढ़ने जा रहा है। यानि भारत-फ्रांस कनेक्ट भी Instant और आपसी Payment भी Instant!

साथियों,

इन सभी पहलों से, हम भारत और फ़्रांस को और करीब ला रहें हैं। और मैं फिर कहूंगा इस साझेदारी की नींव, इस रिश्ते की असली ताकत आप सभी हैं। आप सब मेरे देशवासी हैं।

आज जब भारत तेज़ी से विकसित भारत के लक्ष्य की ओर बढ़ रहा है, तो मैं आप सभी से भारत के साथ और गहराई से जुडने का आग्रह करूंगा। इससे भारत की विकास यात्रा को नई शक्ति मिलेगी, और आपको अपनी पुरखों की धरती की सेवा करने का अवसर भी मिलेगा।

इन्हीं शब्दों के साथ आप सभी के प्रेम आपके उत्साह और इस आत्मीय स्वागत के लिए मैं एक बार फिर आप सभी का आभार व्यक्त करता हूं।

भारत माता की जय!

बहुत बहुत धन्यवाद।