பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஜனவரி 15) காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் நாடளுமன்ற அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்) மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.
இந்த மாநாட்டிற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை வகிக்கவுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 காமன்வெல்த் நாடுகள், பகுதி அளவிலான தன்னாட்சி பெற்ற 4 நாடாளுமன்றங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 61 அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்) மற்றும் தலைமை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
வலுவான ஜனநாயக நிறுவனங்களைப் பராமரிப்பதில் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்) மற்றும் தலைமை அதிகாரிகளின் பங்கு, நாடாளுமன்ற செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம், நாடாளுமன்றம் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதற்கான புதுமையான உத்திகள், வாக்களிப்பைத் தாண்டி மக்களின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.


