India is moving forward with the goal of reaching connectivity to every village in the country: PM
21st century India, 21st century Bihar, now moving ahead leaving behind all old shortcomings: PM
New farm bills passed are "historic and necessary" for the country to move forward: PM Modi

பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் ஒன்பது தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். மாநிலத்தில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கும் திட்டத்தையும் இன்று காணொலி மூலம் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களால் பிகாரில் சாலைப் போக்குவரத்து இணைப்பு வசதி மேம்படும் என்று கூறினார். 3 பெரிய பாலங்கள் கட்டுதல், நெடுஞ்சாலைகளை 4 வழிப் பாதைகள் மற்றும் 6 வழிப்பாதைகளாக உயர்த்துதல் ஆகியவையும் நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் அடங்கும்.21வது நூற்றாண்டு வரையறைகளுக்கு ஏற்ப பிகாரில் அனைத்து நதிகளிலும் பாலங்கள் கட்டப்படும். முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தி, பலப்படுத்தப்படும்.

இந்த நாள் பிகாருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தற்சார்பு இந்தியாவில் கிராமங்களுக்கு முக்கிய பங்கு அளிப்பதற்கு அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பிகாரில் நடப்பது அதன் தொடக்கம் தான் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களுக்கு 1000 நாட்களில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிகாரில் 45,945 கிராமங்கள் இதில் அடங்கும். நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதிகளில் இன்டர்நெட் பயனாளர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை யாரும் நினைத்துகூட பார்த்திருக்க முடியாது என்று பிரதமர் கூறினார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். 2020 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யு.பி.ஐ. மூலம் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான  பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கிராமங்களில் உள்ளவர்களுக்கும் தரமான, அதிக வேகமான இன்டர்நெட் வசதி கிடைக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் காரணமாக ஏற்கெனவே 1.5 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமான பொதுச் சேவை மையங்கள் தொடங்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வேகமான இணைப்பு மூலம் கிடைக்கக் கூடிய பயன்களைப் பட்டியலிட்ட பிரதமர், மாணவர்களுக்கான கல்வி வசதிகள் சிறப்பாகக் கிடைக்கும் என்றும் டெலி மருத்துவ வசதி கிடைக்கும் என்றும், விதைகள், தேசிய அளவிலான மார்க்கெட்களில் புதிய உத்திகள் பற்றி விவசாயிகள் அறிய முடியும் என்றும், வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் அறிய முடியும் என்றும் கூறினார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விரைவாக நாடு முழுக்கவும், உலக நாடுகளுக்கும் அனுப்பி வைக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் கிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதிகளை உருவாக்குவது தான் அரசின் நோக்கம் என்று பிரதமர் கூறினார்.

முன்னர் கட்டமைப்புகளுக்கான திட்டமிடல் ஒருசார்பாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். திரு. அடல் பிகாரி வாஜ்பாயி பிரதமராக இருந்த போதுதான் வளர்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் தரப்பட்டது என்றார் அவர்.  அரசியலைவிட கட்டமைப்பு வசதிக்குதான் வாஜ்பாயி முன்னுரிமை அளித்தார் என்றும் திரு. மோடி குறிப்பிட்டார்.

பன்முகப் போக்குவரத்து நெட்வொர்க் உருவாக்குவது தான்  இப்போதைய அணுகுமுறையாக உள்ளது. இதில் ஒவ்வொரு வகையிலான போக்குவரத்து வசதியும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதாக இருக்கும். கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பான திட்டங்களில் இப்போது காட்டப்படும் வேகம், முன் எப்போதும் இல்லாத அளவில் உள்ளது. இன்றைக்கு 2014க்கு முன்பு இருந்ததைவிட இரட்டிப்பு வேகத்தில் நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் 5 மடங்கு அதிகமாக செலவிடப்படுகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.

வரக்கூடிய 4 – 5 ஆண்டுகளில் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.110 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் ரூ.19 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மற்றும் இணைப்பு வசதி தொடர்பான கட்டமைப்பு விரிவாக்கத்துக்கான இந்த முயற்சிகளில் பிகார் மாநிலமும் பயன்பெறுகிறது என்று பிரதமர் கூறினார். 2015ல் அறிவிக்கப்பட்ட பிரதமரின் தொகுப்புத் திட்டங்களின் கீழ், 3000 கிலோமீட்டர் நீளத்துக்கான தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. கூடுதலாக பாரத்மாலா திட்டத்தில் ஆறரை கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை உருவாக்கப் படுகிறது. இன்றைக்கு பிகாரில், தேசிய நெடுஞ்சாலைத் தொகுப்புப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கிழக்கு மற்றும் மேற்கு பிகாரை நான்கு வழிப்பாதை மூலம் இணைக்க 5 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன. வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை இணைக்க 6 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

பெரிய நதிகள் இருப்பது தான் பிகாரில் இணைப்பு வசதியை உருவாக்குவதில் பெரிய தடையாக இருந்தது. இதனால் தான் பிரதமரின் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, பாலங்கள் கட்டுவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பிரதமரின் தொகுப்புத் திட்டத்தின் கீழ் கங்கையின் மீது 17 பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றின் பணிகள் முடிந்துவிட்டன. அதேபோல, காண்டாக் மற்றும் கோசி நதிகளின் மீதும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

பாட்னா சுற்றுச்சாலை மற்றும் பாட்னா மற்றும் பகல்பூரில் மகாத்மா காந்தி பாலம் மற்றும் விக்ரம்ஷிலா பாலம் ஆகியவற்றுக்கு இணை போக்குவரத்தாக அமையும் பாலங்கள் கட்டுவதன் மூலம், இணைப்பு வசதி மேம்படும் என்றார் பிரதமர்.

நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட வேளாண்மை மசோதாக்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகக் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகள் கிடைக்கும். தங்கள் விளைபொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒரு நபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது.

முன்னர் சுயநலக்காரர்கள் பணம் சம்பாதிக்கும் வகையில் இருந்த நடைமுறையால், அப்பாவி விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வந்தனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

வேளாண் சந்தைகள் தவிர, புதிய சீர்திருத்தங்களின்படி விவசாயிகளுக்கு நிறைய மாற்று வழிகள் கிடைக்கும் என்று திரு. மோடி கூறினார். அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளை பொருளை விற்க முடியும்.

பிகாரில் உருளைக்கிழங்கு வியாபாரிகள் பயன் பெற்றது பற்றிக் குறிப்பிட்ட அவர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள எண்ணெய் வித்து விளைவிக்கும் விவசாயி, புதிய திட்டத்தின் கீழ் 15 முதல் 30 சதவீதத்துக்கும் அதிகமாக லாபம் ஈட்டியதாக பிரதமர் தெரிவித்தார். இந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து எண்ணெய் மில் உரிமையாளர்கள் நேரடியாக எண்ணெய்வித்துக்களை கொள்முதல் செய்து கொள்கிறார்கள். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பருப்பு வகைகள் உபரியாக இருக்கும். அந்த விவசாயிகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 15 முதல் 25 சதவீதம் வரை கூடுதல் விலைகள் பெற்றிருக்கிறார்கள். பருப்பு மில் உரிமையாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததால் இந்தப் பயன் கிடைத்துள்ளது.

வேளாண் சந்தைகள் மூடப்படாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார். முன்பிருந்ததைப் போல அவை தொடர்ந்து செயல்படும் என்றார் அவர். கடந்த 6 ஆண்டுகளில் வேளாண் சந்தைகளை நவீனமாக்குதல் மற்றும் கம்ப்யூட்டர்மயமாக்குவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தான் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை முன்பிருந்ததைப் போல தொடரும் என்று விவசாயிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதியளித்தார். விவசாயிகளை தவறாக வழிநடத்தும் இதே சுயநலவாதிகள் தான், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்தார்கள் என்று பிரதமர் கூறினார். எப்போதும் போல ஒவ்வொரு பருவத்திற்கும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைகளை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் நிலை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இடுபொருள் செலவு அதிகரிப்பு காரணமாகவும் குறைந்த விளைச்சல் காரணமாக குறைந்த லாபம் மட்டுமே கிடைப்பதாலும் 85 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள் இன்னும் சிறிய அல்லது விளிம்புநிலை விவசாயிகளாகவே இருந்து வருகிறார்கள் என்று கூறினார். விவசாயிகள் யூனியனாக சேர்ந்தால் இடுபொருள் செலவுகளை குறைத்து, நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் என்று பிரதமர் கூறினார். கொள்முதல் செய்பவர்களுடன் இவர்கள் நல்ல பேரங்கள் பேசிட முடியும். இந்த சீர்திருத்தங்கள் காரணமாக வேளாண்மைத் துறையில் முதலீடு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தின் வசதிகள் கிடைக்கும், விவசாய விளைபொருட்கள் அதிக எளிதாக சர்வதேசச் சந்தைகளை அடைய முடியும் என்று திரு. மோடி கூறினார்.

பிகாரில் உள்ள ஐந்து விவசாயிகளின் விளைபொருள் நிறுவனங்கள், மிகப் பிரபலமான அரிசி விற்பனை நிறுவனத்துடன் எப்படி அண்மையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன என்பது பற்றியும், திரு மோடி குறிப்பிட்டார்.  இந்த ஒப்பந்தத்தின்படி, விவசாயிகளின் விளைபொருள் நிறுவனங்களிடமிருந்து நாலாயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதே போல, இந்த சீர்திருத்தங்களால், பால் உற்பத்தி நிறுவனங்களும் பலனடையும் என்று அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தச் சட்டத்தின் சில விதிமுறைகள் விவசாயிகளின் சுதந்திரத்திற்குத் தடையாக இருந்தன. பருப்புகள், எண்ணெய் வித்துகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகள் பெருமளவில் தங்கள் விளைபொருட்களை குளிர்பதனக் கிடங்கில் சேமித்து வைக்க முடியும். நமது நாட்டில், சேமிப்பு தொடர்பான சட்டப்பூர்வ பிரச்சினைகளை நீக்கிவிட்டால், குளிர்பதனக் கிடங்குகள் வசதி இன்னும் பெருகும் என்று பிரதமர் கூறினார்.

வேளாண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் குறித்த விஷயங்களில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்த சில சுயநலவாதிகள் முயற்சி செய்வதாக அவர் குறிப்பிட்டார். 2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில் இருந்ததைவிட, கடந்த 5 ஆண்டுகளில் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகளை அரசு கொள்முதல் செய்யும் அளவு சுமார் 24 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தில், ரபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது என்ற தகவலையும் பிரதமர் கூறினார்.

இந்த ஆண்டு ரபி பருவத்தில், விவசாயிகளுக்கு கோதுமை, தானியம், பருப்புகள் மற்றும் எண்ணெய்வித்துகள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1.13 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் அதிகம்.

அதாவது கொரோனா காலத்தில், அரசின் கொள்முதல் முந்தைய காலங்களைவிட அதிகமாக இருந்தது என்பதுடன், விவசாயிகளுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நவீன சிந்தனையுடன், புதிய நடைமுறைகளை உருவாக்கித் தருவது தான் 21வது நூற்றாண்டு இந்தியாவின் பொறுப்பாக இருக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games

Media Coverage

Jumbo Indian contingent comprising 768 athletes, support staff and officials for Asian Games
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 4, 2026
September 04, 2026

Make in India, Power India, Play for India: Multi-Sector Momentum Under PM Modi’s Leadership