3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
ஆறு புதிய ரயில் நிலைய கட்டிடங்களுடன் சனத்நகர் – மௌலா அலி இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கல் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்
காட்கேசர் - லிங்கம்பள்ளியில் இருந்து மௌலா அலி - சனத்நகர் வழியாக பன்னோக்குப் போக்குவரத்து ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்
இந்தியன் ஆயில் பாரதீப்-ஹைதராபாத் உற்பத்திப் பொருட்கள் குழாய் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்
ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு மையத்தை அவர் தொடங்கி வைத்தார்
"மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற மந்திரத்தை நான் நம்புகிறேன்"
"இன்றைய திட்டங்கள் வளர்ச்சியடைந்த தெலங்கானா மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய உதவும்"
ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு மையம், நவீன தரத்தின் அடிப்படையில் அமையும் முதல் மையமாகும்.

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் ரூ.6,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சாலை, ரயில், பெட்ரோலியம், விமானப் போக்குவரத்து, இயற்கை எரிவாயு போன்ற முக்கியத் துறைகளை உள்ளடக்கியது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தெலங்கானா மாநிலத்தில் தாம் இரண்டாவது நாளாக இன்று பயணம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், தெலங்கானாவின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் கூறினார். எரிசக்தி, பருவநிலை, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் நேற்று அடிலாபாத்தில் சுமார் 56,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதையும், நாட்டுக்கு அர்ப்பணித்ததையும் நினைவுகூர்ந்த பிரதமர், இன்றைய நிகழ்ச்சியில் சுமார் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைத் துறைகள், ரயில்வே, விமானம், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் அடிக்கல் நாட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மாநிலங்களின் வளர்ச்சி மூலம் நாட்டின் வளர்ச்சி என்ற மந்திரத்தை நான் நம்புகிறேன் என்று கூறிய பிரதமர், அரசின் செயல்பாட்டு சித்தாந்தத்தை எடுத்துரைத்தார். அதே உணர்வுடன் தெலங்கானாவுக்குச் சேவை செய்ய மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இன்றைய வளர்ச்சிப் பணிகளுக்காக மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

 

ஹைதராபாத்தில் பேகம்பேட் விமான நிலையத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பு மையத்தைத் திறந்து வைத்தது விமானப் போக்குவரத்துத் துறையில் தெலங்கானாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று பிரதமர் கூறினார். இந்த மையம் நவீன வகையிலான முதல் மையமாகும் என்றும், மேலும் தெலங்கானாவுக்கு இந்தத் துறையில் புதிய அங்கீகாரத்தை வழங்கும் என்றும்  அவர் தெரிவித்தார். இது நாட்டில் விமானப் போக்குவரத்தில் புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தளத்தை அளிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

வளர்ச்சியடைந்த பாரதம்  என்ற உறுதிப்பாட்டில் நவீன உள்கட்டமைப்பின் மையத்தன்மையை வலியுறுத்திய பிரதமர் திரு மோடி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் அதிகபட்ச பலன்களை தெலங்கானாவுக்கு வழங்கும் முயற்சியாக, தேசிய நெடுஞ்சாலை எண் 161-ல் கண்டி முதல் ராம்சன்பள்ளி வரையிலான பிரிவிலும், தேசிய நெடுஞ்சாலை 167-ல் மிர்யாலகுடா முதல் கோடாட் வரையிலும் அமைக்கப்படுவது தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் இடையேயான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

 

தெலங்கானா தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது என்று கூறிய பிரதமர், மின்மயமாக்கல், ரயில் பாதைகளை இரட்டிப்பாக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதன் மூலம் மாநிலத்தில் ரயில் இணைப்பு, சேவைகளை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். சனத்நகர் – மௌலா அலி வழித்தடத்தில் இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கல், ஆறு புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் இன்று தொடங்கப்பட்டதை பிரதமர் மோடி குறிப்பிட்டார். காட்கேசர் – லிங்கம்பள்ளி இடையே மௌலா அலி – சனத்நகர் வழியாக எம்எம்டிஎஸ் ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பிராந்தியத்தின் பல பகுதிகள் இனி இணைக்கப்படும் என்றும், இது பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

குறைந்த கட்டணத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்லும் இந்தியன் ஆயில் பாரதீப்-ஹைதராபாத் உற்பத்திப் பொருட்கள் குழாய் திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இது வளர்ச்சியடைந்த தெலங்கானா மூலம் வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்திற்கு உந்துதல் அளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பிரதமர் தொடங்கி வைத்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில், தேசிய நெடுஞ்சாலை எண் 161-ல் கண்டி முதல் ராம்சன்பள்ளி வரையிலான 40 கிலோமீட்டர் தூரத்தை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது அடங்கும். இந்தூர் – ஹைதராபாத் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் இடையே தடையற்ற பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு வழிவகுக்கும். இந்தப் பிரிவு ஹைதராபாத், நாந்தேட் இடையேயான பயண நேரத்தை சுமார் 3 மணி நேரம் கணிசமாகக் குறைக்கும். தேசிய நெடுஞ்சாலை எண் 167-ல் 47 கிலோமீட்டர் நீளமுள்ள மிர்யாலகுடா முதல் கோடாடு வரையிலான பிரிவை நடைபாதை கொண்ட இருவழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். மேம்படுத்தப்பட்ட இணைப்பு, இந்தப் பிராந்தியத்தில் சுற்றுலா, பொருளாதார நடவடிக்கைகள், தொழில்களுக்கு ஊக்கமளிக்கும்.

 

சாலை 65-ல் 29 கிலோமீட்டர் நீளமுள்ள புனே-ஹைதராபாத் பிரிவை ஆறு வழிப்பாதையாக மாற்றும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் தெலங்கானாவில் பதஞ்செருவுக்கு அருகிலுள்ள பாஷமைலாராம் தொழில்துறை பகுதி போன்ற முக்கிய தொழில்துறை மையங்களுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்கும்.

சனத்நகர் – மௌலா அலி இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கல் திட்டத்தையும், ஆறு புதிய ரயில் நிலைய கட்டிடங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் 22 கிலோமீட்டர் தூர வழித்தடப் பணிகள் தானியங்கி சமிக்ஞை மூலம் இயக்கி வைக்கப்பட்டு, பன்னோக்குப் போக்குவரத்துச் சேவை இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஃபெரோஸ்குடா, சுசித்ரா மையம், பூதேவி நகர், அம்முகுடா, நெரெட்மெட் மற்றும் மௌலா அலி வீட்டுவசதி வாரிய நிலையங்களில் ஆறு புதிய நிலையக் கட்டிடங்கள் இடம்பெற்றுள்ளன. இரட்டை வழிப்பாதை, மின்மயமாக்கல் பணிகள் இந்த பிரிவில் முதல் முறையாக பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்த வழி வகுக்கிறது. பிற பிரிவுகளின் சுமையைக் குறைப்பதன் மூலம் பிராந்தியத்தில் ரயில்களின் நேரம் தவறாமை, ஒட்டுமொத்த வேகத்தை மேம்படுத்த இது உதவும்.

 

காட்கேசர் – லிங்கம்பள்ளியில் இருந்து மௌலா அலி – சனத்நகர் வழியாக பன்னோக்குப் போக்குவரத்து ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை ஹைதராபாத் - செகந்திராபாத் இரட்டை நகர பிராந்தியங்களில் பிரபலமான புறநகர் ரயில் சேவையை முதல் முறையாக புதிய பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது. இது நகரின் கிழக்குப் பகுதியான செர்லபள்ளி, மௌலா அலி போன்ற புதிய பகுதிகளை இரட்டை நகரப் பகுதியின் மேற்குப் பகுதியுடன் இணைக்கிறது. இரட்டை நகரப் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியையும், மேற்குப் பகுதியையும் இணைக்கும் பாதுகாப்பான, விரைவான, சிக்கனமான போக்குவரத்து முறை பயணிகளுக்கு மிகவும் பயனளிக்கும்.

மேலும், இந்தியன் ஆயில் பாரதீப் – ஹைதராபாத் உற்பத்திப் பொருட்கள் குழாய் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 4.5 எம்எம்டிபிஎ திறன் கொண்ட 1212 கிமீ உற்பத்தி குழாய் ஒடிசா (329 கிமீ), ஆந்திரா (723 கிமீ), தெலங்கானா (160 கிமீ) மாநிலங்கள் வழியாக செல்கிறது. பாரதீப் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து விசாகப்பட்டினம், அச்சுதபுரம், விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்), ஹைதராபாத் (தெலங்கானாவில்) அருகிலுள்ள மல்காபூர் ஆகிய இடங்களில் உள்ள விநியோக நிலையங்களுக்கு பெட்ரோலியப் பொருட்களை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் கொண்டு செல்வதை இந்தக் குழாய் பாதை உறுதி செய்யும்.

ஹைதராபாத்தில் சிவில் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தவும், இந்திய விமான நிலைய ஆணையத்தால் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதற்காக உள்ளக மற்றும் கூட்டு ஆராய்ச்சி மூலம் விமானப் போக்குவரத்திற்கு உலகளாவிய ஆராய்ச்சி தளத்தை வழங்க இது திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 350 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த அதிநவீன வசதி 5 நட்சத்திர மதிப்பீடு மற்றும் எரிசக்தி சேமிப்பு கட்டிட குறியீடு விதிமுறைகளுக்கு இணங்குகிறது. செயல்பாட்டு பகுப்பாய்வு, செயல்திறன் அளவீடு ஆகியவற்றிற்கான தரவு பகுப்பாய்வு திறன்களையும் இது பயன்படுத்தும். வான்வெளி மற்றும் விமான நிலையம் தொடர்பான பாதுகாப்பு, திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், முக்கிய வான்வெளி சவால்களை எதிர்கொள்வது, முக்கிய விமான நிலைய உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொள்வது, எதிர்கால வான்வெளி மற்றும் விமான நிலைய தேவைகளுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட துறைகளில் தொழில்நுட்பங்கள், தயாரிப்புகளை உருவாக்குவது ஆகியவை விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அடங்கும்.

 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s semiconductor market to cross $100 billion by 2030, projects PM Modi; unveils Rs 3,300 cr Kaynes plant in Gujarat

Media Coverage

India’s semiconductor market to cross $100 billion by 2030, projects PM Modi; unveils Rs 3,300 cr Kaynes plant in Gujarat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister extends greetings on Utkala Dibasa
April 01, 2026

Prime Minister Shri Narendra Modi extended greetings on the special occasion of Utkala Dibasa, today. Shri Modi remarked that Odisha is a state that stands tall as a timeless symbol of cultural as well as spiritual greatness. Odia music, art and literature have enriched India in countless ways. “The people of Odisha, known for their determination, simplicity and warmth, have made remarkable contributions across fields. May Odisha keep scaling new heights of progress in the times to come”, Shri Modi stated.

The Prime Minister posted on X;

“Greetings on the special occasion of Utkala Dibasa. Odisha is a state that stands tall as a timeless symbol of cultural as well as spiritual greatness. Odia music, art and literature have enriched India in countless ways. The people of Odisha, known for their determination, simplicity and warmth, have made remarkable contributions across fields. May Odisha keep scaling new heights of progress in the times to come.”