ஐ.என்.எஸ்.வி. தாரிணி கப்பலில் உலகைச் சுற்றி வந்த இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆறு பெண் அதிகாரிகள் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தனர்.
நவிகா சாகர் பரிக்ரமா என அழைக்கப்பட்ட இந்தப் பயணம், முற்றிலும் பெண் அதிகாரிகள் கொண்ட இந்தியக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது உலகளாவிய கடல்வழிப் பயணமாகும்.

இந்தக் கலந்துரையாடலின்போது, குழுவில் இருந்த பெண் அதிகாரிகள், பயணத்தின் பல்வேறு அம்சங்கள், அவர்களின் தயாரிப்பு, பயிற்சி மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த குழுவினருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். பயணத்தின் போது அவர்களது பிரத்யேகமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் எழுதுமாறு அவர் ஊக்கப்படுத்தினார். இந்த சந்திப்பின் போது கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா உடனிருந்தார்.

இந்தக் குழுவுக்கு லெஃப்டினண்ட் கமாண்டர் வரிகா ஜோஷி தலைமை ஏற்க, லெப்டினண்ட் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி. சுவாதி மற்றும் லெஃப்டினண்ட்கள் எஸ். விஜயா தேவி, பி.ஐஸ்வர்யா மற்றும் பாயல் குப்தா ஆகியோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.


