மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.